

பழனிமலையின் பல அடுக்கு தோட்டம். (உள்படம்) பழனிமலை
மண்ணின் ஆரோக்கியமே மனிதகுலத்தின் ஆரோக்கியம் என்பதை உணர்ந்து, இயற்கை விவசாயத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி வருகிறார் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி பழனிமலை. மனநிம்மதி தேடிப் பல்வேறு தொழில்களைச் செய்து பார்த்த அவருக்கு, இறுதியாகத் தாய் மண்ணின் மணம்தான் அமைதியையும் கவுரவமான வாழ்வாதாரத்தையும் வழங்கியுள்ளது.
மேட்டூர் அருகேயுள்ள நங்கவள்ளிப் பகுதியில் பல அடுக்குச் சாகுபடி மற்றும் நுட்பமான நீர் மேலாண்மை மூலம் ஒரு வெற்றிகரமான இயற்கை வேளாண் மாதிரி பண்ணையை அவர் உருவாக்கியுள்ளார்.
மாற்றத்தைத் தந்த அடையாறு பயணம்
நங்கவள்ளி, ஜலகண்டாபுரம் மற்றும் எடப்பாடி பகுதிகளில் புகையிலை சாகுபடி என்பது நீண்டகாலமாக முதன்மையான தொழிலாக இருந்து வருகிறது. நல்ல வருமானம் கிடைத்த காரணத்தால், பழனிமலையும் தொடக்கத்தில் புகையிலை பயிரிடுவதிலேயே ஆர்வம் காட்டினார்.
ஆனால், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது நண்பரைச் சிகிச்சைக்காகச் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அங்கு புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் கொடிய பாதிப்புகளை நேரில் கண்டார்.
மக்களின் உயிருக்கு உலைவைக்கும் ஒரு பொருளைத் தான் விளைவிக்கக் கூடாது என்ற உறுதியான முடிவை அப்போது எடுத்தார். அந்தப் பயணத்திற்குப் பிறகு புகையிலை சாகுபடியை முற்றிலுமாகக் கைவிட்ட அவர், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ரசாயன உரங்களையும் அறவே தவிர்த்து வருகிறார்.
நீர் மேலாண்மையில் ஒரு புதிய வழிமுறை
இவரது 5 ஏக்கர் நிலத்தில் மா, சாத்துக்குடி, பப்பாளி எனப் பலன் தரும் பழ மரங்களுடன், சுமார் 10 ஆயிரம் கறிவேப்பிலை செடிகள் செழித்து வளர்ந்துள்ளன. மேலும் மஞ்சள், இஞ்சி சாகுபடியும் நடைபெறுகிறது. 700 மகாகனி மரக்கன்றுகளை நட்டுள்ள இவர், அவற்றில் மிளகுக் கொடிகளை ஏற்றி விடுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.