

விவசாயி சிவகுமார்
நீலகிரி மாவட்டத்தின் பிரதான தொழிலாக தேயிலை மற்றும் காய்கறி விவசாயமே விளங்கி வருகிறது. இங்குள்ள விவசாயிகள் பாரம்பரியமாக கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், முள்ளங்கி போன்ற ஆங்கில மற்றும் சைனீஸ் ரக காய்கறிகளை ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா ஆகிய பகுதிகளில் பெருமளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.
எனினும், கடந்த சில ஆண்டுகளாக பச்சை தேயிலையின் கொள்முதல் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால் விவசாயிகள் கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வந்தனர். அத்துடன், நீண்ட காலமாக ஒரே நிலத்தில் ஒரே விதமான காய்கறிகளைத் தொடர்ந்து பயிரிட்டு வந்ததால் மண் வளம் பாதிக்கப்பட்டு, பூச்சிகள் மற்றும் நோய்களின் தாக்கமும் பெருமளவில் அதிகரித்தது.
மாற்றுப் பயிர்
இந்தச் சூழலில், விவசாயிகளுக்கு மாற்றுப் பாதையைக் காட்டும் வகையில் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை களமிறங்கியது. தேயிலை மற்றும் காய்கறிகளுக்கு மாற்றாக, கொய்மலர் மற்றும் ஸ்ட்ராபெரி சாகுபடியை மேற்கொள்ள விவசாயிகளுக்கு விழிப்புணர்வும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
குறிப்பாக, வெளிமாநிலங்களில் கொய்மலர்கள் மற்றும் ஸ்ட்ராபெரி பழங்களுக்கு இருக்கும் பேராதரவு காரணமாக, விவசாயிகள் தற்போது மாற்று சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டம் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் தனித்துவமான அங்கக வேளாண்மைத் திட்டத்தின் கீழ் இத்தகைய மாற்றுப் பயிர் திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.