

தமிழ்நாட்டின் முதன்மை எண்ணெய் வித்துப் பயிரான நிலக்கடலையில், இயற்கை வழியில் குறைந்த செலவில் அதிக மகசூல் பெற முடியும். முறையான பாசனம், தரமான விதைகள், நவீன வேளாண் கருவிகள் மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை ஆகியவற்றைச் சரியாகக் கையாண்டால், இறவை மற்றும் மானாவாரி ஆகிய இரு சாகுபடிகளிலும் உயர்தர விளைச்சலை எளிதாகப் பெறலாம்.
விதைப்பு முறை
மண்ணின் தன்மைக்கேற்ப நிலத்தை உழுவதே வேர் வளர்ச்சிக்கும் காய் பிடிப்பதற்கும் அஸ்திவாரமாகும். இறுதி உழவுக்குப் பின், நான்கு அடி அகலமுள்ள பாத்திகளை அமைக்கப் பார் அமைக்கும் கருவியைப் பயன்படுத்தலாம். ஒரு ஏக்கர் சாகுபடிக்கு 45 முதல் 50 கிலோ வரையிலான திரட்சியான விதைகள் தேவைப்படும்.
உருளை விதைப்புக் கருவி அல்லது நிலக்கடலை விதைப்பு இயந்திரத்தைப் பயன்படுத்தி, வரிசைக்கு வரிசை 30 செ.மீ, பயிருக்கு பயிர் 10 செ.மீ என்ற துல்லியமான இடைவெளியிலும், 3 செ.மீ ஆழத்திலும் விதைகளைச் சீராக ஊன்ற வேண்டும். முளைப்புத் திறனை அதிகரிக்க முதல் பாசனத்துடன் டிரைக்கோடெர்மா விரிடி, பாசிலோமைசிஸ், மெட்டாரைஸ்யம் போன்ற உயிர் திரவங்களை கலந்து கொடுக்க வேண்டும்.
பாசன நிர்வாகம்
அடிஉரமாக ஏக்கருக்கு 4 டிராக்டர் லோடு மக்கிய தொழுஉரம், ஆட்டு எரு அல்லது கோழி எருவுடன், 200 கிலோ சாம்பல், 100 கிலோ வேப்பம்புண்ணாக்கு, 200 கிலோ மண்புழு உரம் அல்லது 100 கிலோ எலும்பு உரம் ஆகியவற்றை நிலத்தில் பரப்பி, நன்றாக உழுது பார் அமைக்க வேண்டும்.
110 நாட்கள் வயதுடைய பயிருக்கு, 10 நாட்களுக்கு ஒரு முறை என மொத்தம் 10 முறை பாசனத் தண்ணீருடன் இயற்கை இடுபொருள்களை கலந்து தர வேண்டும்.