

இயற்கை விவசாயம் என்பது பயிர்களுக்கு மண்ணில் உள்ள சத்துகளை நுண்ணுயிர்கள் மூலம் உணவளிக்கும் முறை ஆகும். போதுமான சத்துக்கள் மண்ணின் வளத்துக்கு ஏற்ப வழங்கப்படும் போது பயிரின் ரகத்துக்கு ஏற்ப முழுமையான மகசூல் கிடைக்கும்.
அனைத்து பயிர்களிலும் இயற்கை முறைகளை கடைபிடிக்க முடியும். பாரம்பரிய விதைகளை பயன்படுத்தினாலும் அல்லது பிறவகை வீரிய ஒட்டு ரக விதைகளை பயன்படுத்தினாலும், முறையான பராமரிப்பு இல்லை என்றால் நோயும் பூச்சி தாக்கமும் வரும்.
லாபகரமான விவசாயம் செய்வதற்கு மூன்று வருடம் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை; மண்வளம் மற்றும் அந்தந்த வளர்ச்சி பருவத்திற்கு ஏற்ப தேவையான இடு பொருள்களை சரியான விகிதத்தில் கொடுத்தால் முதல் ஆண்டிலேயே மண்ணை வளப்படுத்தி, உற்பத்தியை பெருக்க முடியும்.
மண்வள மேலாண்மை:
மண் வளத்தை அதிகரிக்க வருடம் ஒருமுறை சணப்பு, தக்கைப்பூண்டு, அவுரி, கொழிஞ்சி போன்ற ஏதாவது ஒரு பசுந்தாள் உரப்பயிர் அல்லது பல தானிய விதைப்பு செய்ய வேண்டும். பூக்கும் காலத்துக்கு முன்பு வரை ஒரு சாகுபடியாக வளர்த்து அதனை உரிய காலத்தில் மடக்கி உழ வேண்டும்.
அனைத்து நிலங்களிலும் தழைச்சத்துக்காக சாணம், மணிச்சத்துக்காக மண்புழு உரம் அல்லது எலும்பு உரத்தையும், சாம்பல் சத்துக்காக சாம்பலையும் கலந்து இடவேண்டும். மண்ணில் உள்ள கிருமிகள், பூச்சிகள் மற்றும் வண்டுகளின் பாதிப்பு இல்லாமல் இருப்பதற்காக ஒவ்வொரு சாகுபடிக்கு முன்பும் வேப்பம் புண்ணாக்கு கொடுக்கப்பட வேண்டும்.