

பத்து ஆண்டுகளுக்கு முன்பு அள்ளிக் கொடுத்த நிலம், இன்று அதே அளவு உரமிட்டாலும் போதிய மகசூலைத் தருவதில்லை. ரசாயன உரங்கள் மற்றும் வீரியமிக்க உயிர்க்கொல்லி மருந்துகளின் அளவுக்கதிகமான பயன்பாட்டால், நமது மண் தன் உயிர்த்தன்மையை இழந்து மலடாகிப் போய்விட்டது.
மற்றொருபுறம், இன்றைய இயற்கை விவசாயத்திலும் பல இடங்களில் மகசூல் வீழ்ச்சியை நாம் சந்திக்க நேர்கிறது. இதற்கெல்லாம் அடிப்படையான காரணம், மண்ணைப் பற்றிய நமது அரைகுறைப் புரிதல்தான்.
ஒரு மண் பூரண ஆரோக்கியத்துடன் விளங்க இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆகிய மூன்று அறிவியல் கூறுகளும் ஒன்றிணைவது மிக அவசியம். ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் தரவுகளின்படி, உலகின் விவசாய நிலங்களில் மூன்றில் ஒரு பங்கு ஏற்கெனவே கடுமையான அல்லது மிதமான சீரழிவைச் சந்தித்துள்ளது.
கடந்த அரை நூற்றாண்டாக, ஏதேனும் ஒரு விவசாய முறையை மட்டும் முதன்மைப்படுத்திவிட்டு, மற்ற முக்கியக் கூறுகளைக் கைவிட்டுவிட்டதே நாம் செய்த பெருந்தவறாகும்.
ரசாயன விவசாயம்
நவீன ரசாயன விவசாயம் என்பது முழுக்க முழுக்க வேதியியலை மட்டுமே முதன்மைப்படுத்துகிறது. மண்ணின் கார அமிலத் தன்மை, முதன்மைச் சத்துக்கள், மின் கடத்துத் திறன் மற்றும் அயனிப் பரிமாற்றத் திறன் ஆகியவற்றை மட்டுமே கணக்கில் கொண்டு, செயற்கை உரங்களை அதிக அளவில் குவிப்பதற்கு இம்முறை வழிகோலுகிறது.
ஆனால், மண்ணின் இயற்பியல் கட்டமைப்பையும் அதில் வாழும் நுண் மண்ணுயிரிகளையும் தொடர்ந்து புறக்கணித்து வரும்போது, காலப்போக்கில் மண் இறுகிப்போய், நீரும் காற்றும் ஊடுருவ முடியாத ஒரு கடினப் பாறையாக மாறும் அபாயம் ஏற்படுகிறது.