

ஒரு காலத்தில் பயிர் சுழற்சி முறையை விவசாயிகள் தீவிரமாகப் பின்பற்றினார்கள். இன்று, நிலைமை பெருமளவு மாறிவிட்டது. தஞ்சாவூர் பக்கம் போய்ப் பார்த்தால் மூன்று போகமும் நெல் சாகுபடிதான்.
மின் விநியோகத்தில் தட்டுப்பாடு நிலவும் இந்தக் கடும் கோடையில் கூட, ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் மூலம் திரும்பிய பக்கமெல்லாம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைகிறது. மண்ணின் வளம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.
விவசாயத்தில் நிலத்தின் வளத்தை நிலைநிறுத்தி, நிலையான மகசூலைப் பெறுவதற்குப்பயிர் சுழற்சி (Crop Rotation) முறை மிக அவசியமான ஒன்றாகும். ஒரே நிலத்தில் மீண்டும் மீண்டும் ஒரே வகையான பயிரைப் பயிரிடாமல், குறிப்பிட்ட கால இடைவெளியில் வெவ்வேறு குடும்பத்தைச் சேர்ந்த பயிர்களை மாற்றி மாற்றிச் சாகுபடி செய்யும் முறையே பயிர் சுழற்சி எனப்படுகிறது.