

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கால்நடை அறிவியல் முதுகலை ஆராய்ச்சி நிலையம், காட்டுப்பாக்கம் வளாகத்தில், கால்நடை அடிப்படையிலான ஒருங்கிணைந்த மாதிரி பண்ணையை உருவாக்கியுள்ளது.
சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளின் வருமானத்தை நிலைநிறுத்தவும், நிலம் – நீர் – உயிரியல் வளங்களை ஒருங்கிணைத்து முழுமையாக பயன்படுத்தவும் இந்த மாதிரி பண்ணை வடிவமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நிலப்பரப்பு சிதறல், நீர் பற்றாக்குறை, காலநிலை மாற்றம், சந்தை மாற்றம் போன்ற சவால்கள் விவசாயத்தில் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு விவசாய மற்றும் கால்நடை தொழில்களை, ஒரே நிலப்பரப்பில் ஒருங்கிணைக்கும் ஒருங்கிணைந்த பண்ணை முறை எதிர்கால நிலையான விவசாயத்திற்கு முக்கிய தீர்வாக கருதப்படுகிறது. இதனை நடைமுறை வடிவில் காட்டும் கல்வி – காட்சி – பயிற்சி மையமாக இந்த வளாகம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த பண்ணையிலுள்ள பல்வேறு பிரிவுகள்: இந்த ஒருங்கிணைந்த பண்ணை வளாகம், பயிர், தோட்டக்கலை, கால்நடை, கோழி, நீர்ப்பறவை மற்றும் தீவன உற்பத்தி ஆகியவற்றை ஒரே பண்ணை அமைப்பில் இணைக்கிறது. ஒவ்வொரு கால்நடை, கோழி, வேளாண் பிரிவுகள் ஒன்றோடு ஒன்று வளச்சுழற்சி முறையில் தொடர்புபடுத்தப்பட்டுள்ளதால், கழிவுகள் குறைந்து உற்பத்தி திறன் அதிகரிக்கும் வகையில் இப்பண்ணை வளாகம் திகழ்கிறது.
காய்கறி மற்றும் தோட்டக்கலைப் பகுதி: வளாகத்தின் முன் பகுதி முழுவதும் காய்கறி மற்றும் தோட்டக்கலைப் பயிரிடலுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. பல்வேறு காலநிலைக் காய்கறிகள், வாழை மற்றும் பழவகை மரங்கள் இணைந்து வளர்க்கப்படுகின்றன. இந்தப் பகுதியில் இருந்து கிடைக்கும் பயிர்க் கழிவுகள்
கால்நடைகளுக்குத் தீவனமாகவும், உரம் தயாரிப்பிற்கான மூலப்பொருளாகவும் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் பண்ணை வளங்கள் புறச்சார்பு இன்றி வளச் சுழற்சி செய்யப்பட்டு உற்பத்தி பொருளாதாரம் மேம்படுத்தப்படுகிறது.