

வண்ணம்புத்தூர் கிராமத்தில் சீனிவாசன் வயலில் விளைந்துள்ள முட்டைக்கோஸ் பயிர்கள்.(உள்படம்) காலிபிளவருடன் சீனிவாசன்.
முட்டைகோஸ், காலிபிளவர், கேரட் ஆகிய காய்கறி பயிர்களை மலைப் பிரதேசங்களில் மட்டுமல்ல, அரியலூர் போன்ற சமவெளிப் பகுதிகளிலும் சாகுபடி செய்ய முடியும் என்று நிரூபித்துள்ளார் ஒரு விவசாயி. அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அடுத்த வண்ணம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் (45). விவசாயியான இவர், கடந்த சில ஆண்டுகளாக விவசாயத்தில் புதுமையும், லாபம் தரும் பயிர்களையும் பயிரிட்டு வருகிறார்.
அந்த வகையில் 6 ஆண்டுகளுக்கு முன்பு தனது வயலில் கமலா ஆரஞ்சு, சாத்துக்குடி பழங்களை சாகுபடி செய்தார். அவருக்கு நல்ல மகசூல் கிடைத்தது. இந்தப் பழப் பயிர்களை அரியலூர் மாவட்டத்திலும் சாகுபடி செய்ய முடியும் என்பதை நிரூபித்துக் காட்டினார்.
அதன் பின்னர், தனது வயலில் அடர் வகை (நெருக்கமான) சாகுபடி மூலம் தைவான் கொய்யா ரகங்களை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பயிரிட்டு பழங்களை விற்பனை செய்தார். அதேபோல் தக்காளி, முருங்கை, முள்ளங்கி என பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து வந்த சீனிவாசன், கடந்த அக்டோபர் மாதத்தில் ஓசூரிலிருந்து முட்டைக்கோஸ் மற்றும் காலிபிளவர் நாற்றுகளை வாங்கி வந்து நடவு செய்தார். தற்போது அவை அறுவடைக்குத் தயாராக உள்ளன.