

விவசாயம் என்பது இனி வெறும் உழைப்பு சார்ந்த தொழில் மட்டுமல்ல; அது தரவுகள் சார்ந்த நவீன அறிவியல் தொழில்நுட்ப உதவியுடன் மேற்கொள்ளும் தொழிலாக மாறி வருகிறது. உலகெங்கும் பெருகி வரும் உணவுத் தேவையைச் சமாளிக்க, பாரம்பரிய விவசாய முறைகளுடன் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) கைகோர்த்துள்ளது. இது ஒரு புதிய ‘டிஜிட்டல் பசுமைப் புரட்சிக்கு’ வித்திட்டுள்ளது.
துல்லிய வேளாண்மை
ஏஐ-இன் மிகச்சிறந்த பங்களிப்பு துல்லிய வேளாண்மை (Precision Farming) ஆகும். நிலத்தடியில் பொருத்தப்படும் சென்சார்கள் மண்ணின் ஈரப்பதம், நைட்ரஜன், பாஸ்பரஸ் உள்ளிட்ட பயிர்களுக்குத் தேவையான உரங்களின் அளவு மற்றும் வெப்பநிலையைத் தொடர்ந்து கண்காணிக்கும். இந்தத் தரவுகளை AI பகுப்பாய்வு செய்து, எந்தப் பயிருக்கு, எவ்வளவு தண்ணீர் மற்றும் உரம் தேவை என்பதைத் துல்லியமாக விவசாயியின் செல்போன் எண்ணுக்கே தகவல் அனுப்பும். இதனால் தேவையற்ற உரச் செலவு 30% வரை குறைகிறது.
பயிர் பாதுகாப்பு மற்றும் நோய் கண்டறிதல்
பயிர்களைத் தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்கள் விவசாயிகளுக்குப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துகின்றன. இப்போது, ஏஐ தொழில்நுட்பம் கொண்ட செயலிகள் மூலம் பாதிக்கப்பட்ட பயிரை ஒரு புகைப்படம் எடுத்தாலே போதும். அந்தத் தொழில்நுட்பம் நொடிப்பொழுதில் நோயைக் கண்டறிந்து, அதற்கான சரியான தீர்வையும் பரிந்துரைக்கிறது. இது ஒட்டுமொத்த நிலத்துக்கும்பூச்சிக்கொல்லி தெளிப்பதைத் தவிர்த்து, பாதிக்கப்பட்ட இடத்திற்கு மட்டும் மருந்து தெளிக்க உதவுகிறது.
வானிலை மற்றும் சந்தை கணிப்புகள்
ஏஐ கருவிகள் கடந்த பல ஆண்டுகால வானிலை தரவுகளை ஆய்வு செய்து, மழைப்பொழிவு மற்றும் புயல் குறித்த துல்லியமான எச்சரிக்கைகளை வழங்குகின்றன. இதுவிவசாயிகள் விதைப்பு மற்றும் அறுவடை நேரத்தைத் திட்டமிட உதவுகிறது.