

கல்வீரம்பாளையத்தில் மாடுகளைக் கொண்டு மரச்செக்கு இயக்கும் கவுதமன். | படங்கள்: ஜெ.மனோகரன் |
துரித உணவுகள் ஆக்கிரமித்துள்ள இக்காலத்தில், உணவு முறை மாற்றத்தால் மனிதர்களின் ஆரோக்கியம் சிதைந்துபோய்க் கொண்டிருக்கிறது. உணவுமுறை மாற்றத்தால் மருத்துவமனைக்குச் செல்வோர் அதிகமாகிவிட்டனர்.
இந்நிலையில், மக்களின் ஆரோக்கியத்தைக் காக்கும் வகையில், கோவை மருதமலை அருகே எம்.ஏ. ஆங்கில இலக்கியப் பட்டதாரி ஒருவர் நாட்டு மாடுகள் உதவியுடன் செக்கு எண்ணெய் உற்பத்தி செய்து வருகிறார்.
இயற்கை வாழ்வை மீட்டெடுக்க ஆங்காங்கே சிலர் உழைத்து வருகின்றனர். கோவை மருதமலை வழித்தடத்திலுள்ள கல்வீரம்பாளையத்தில், நாமக்கல் பரமத்தி வேலூரைச் சேர்ந்த எம்.ஏ. ஆங்கிலப் பட்டதாரியான கவுதமன் (47) நான்கு காங்கேயம் நாட்டு மாடுகளைக் கொண்டு மரச்செக்கு எண்ணெய் உற்பத்தி செய்கிறார்.
மனைவியின் அரசுப் பணி நிமித்தமாகக் கோவைக்கு இடம் பெயர்ந்த அவர், தன் ஊர் விவசாயப் பின்னணியின் தொடர்ச்சியாக இயற்கை முறையில் இத்தொழிலை மேற்கொள்கிறார்.