

எல்நினோ நிகழ்வு காரணமாக மழைப் பொழிவு குறைதல், அதிக வெப்பநிலை மற்றும் நீண்டகால வறட்சி போன்ற காலநிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதன் தாக்கம் விவசாயத்துடன், கால்நடை வளர்ப்பிலும் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்துகிறது.
குறிப்பாக, பசுந்தீவனப் பயிர்களின் வளர்ச்சி குறைவதால் கால்நடைகளுக்குத் தேவையான பசுந்தீவனம் கிடைப்பதில் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் கால்நடைகளின் உடல் எடை, இனப்பெருக்கத் திறன் மற்றும் பால் உற்பத்தி குறைவதுடன், விவசாயிகளின் வருமானமும் பாதிக்கப்படலாம்.
ஆகவே, எல்நினோ காலங்களில் கால்நடைகளுக்குத் தொடர்ச்சியான பசுந்தீவன விநியோகத்தை உறுதி செய்வது மிகவும் அவசியமாகும். இதற்காக, குறைந்தபட்சம் 15 சென்ட் நிலத்தில் அதிக மகசூல் தரக்கூடிய பசுந்தீவனப் பயிர்களான கம்பு நேப்பியர் புல், தீவனச்சோளம், வேலிமசால் மற்றும் முயல் மசால் போன்ற வறட்சியைத் தாங்கக்கூடிய தீவனப் பயிர்களைத் தேர்ந்தெடுத்து சாகுபடி செய்யலாம்.