

வளர்ந்து வரும் நுண்கீரைகள். (உள்படம்) காயத்ரி
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகிலுள்ள உசுப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரிப் பெண் காயத்ரி, இன்று நுண்கீரைகள் (Microgreens) வளர்ப்பிலும் விற்பனையிலும் சாதித்து வருகிறார்.
இவருடைய கணவர் ராஜபிரபு மும்பையிலுள்ள முன்னணித் தனியார் நிறுவனம் ஒன்றில் உயர் பொறுப்பில் பணியாற்றி வருகிறார். ஒரு மகனும் மகளும் என நிறைவான குடும்பச் சூழலில் வாழும் காயத்ரி, தனக்குள் இருந்த தொழில்முனைவோர் திறமையால் இந்த நிலையை எட்டியுள்ளார்.
இல்லத்தில் தொடங்கிய பசுமைப் புரட்சி
முற்றிலும் இயற்கையான முறையில், தனது இல்லத்திலேயே சிறிய குடில் (Shed) அமைத்து, பிரத்யேகத் தட்டுகளில் (Trays) காயத்ரி இந்த நுண்கீரைகளை வளர்த்து வருகிறார்.
புரதமும் வைட்டமின் ஈ சத்தும் நிறைந்த சூரியகாந்தி, உடல் எடையைக் குறைத்து கொலஸ்ட்ராலைக் கட்டுக்குள் வைக்கும் கொள்ளு, குழந்தைகளின் செரிமானத்தை மேம்படுத்தி உடலுக்குக் குளிர்ச்சி தரும் பச்சைப்பயறு எனப் பலதரப்பட்ட கீரைகளை அவர் உற்பத்தி செய்கிறார்.