

இயற்கை அளித்த வளமான மண்ணை, ‘அதிகமாக உழுதால்தான் நல்ல மகசூல் கிடைக்கும்’ என்ற தவறான எண்ணத்தால் நாம் சிதைத்துக் கொண்டிருக்கிறோம்.
இன்றைய இயற்கை விவசாய நடைமுறைகள் இடுபொருள்கள் மீது காட்டும் கவனத்தை, உழவைக் குறைப்பதன் மீது செலுத்துவதில்லை என்பது வருத்தத்துக்குரியது.
மண்ணின் அமைப்பைச் சிதைக்காமல் பாதுகாப்பதே மீளுருவாக்க விவசாயத்தின் முதன்மை விதியாகும். அளவுக்கு அதிகமான உழவு மண்ணின் உயிரோட்டத்தைச் சிதைத்து, அதன் இயற்கைச் சுழற்சியையே முடக்கிவிடும்.
ஆபத்தான உழவு
ஐந்துக் கலப்பை உழவு, மண்ணின் மேல்பரப்பைத் திரும்பத் திரும்பக் கிளறி, குறிப்பிட்ட ஆழத்தில் கடினமான பாறை போன்ற அடுக்கை உருவாக்கி, பயிர் வேர்கள் ஆழமாக ஊடுருவுவதைத் தடுக்கிறது. ரோட்டவேட்டர் கருவியோ மண்ணைக் கூழ் போல அரைத்து, அதன் இயற்கை அமைப்பையே முற்றிலுமாகச் சிதைக்கிறது.
இது மண் துகள்களுக்கிடையேயான காற்றோட்ட அறைகளை அழித்து, மழைநீர் உறிஞ்சப்படுவதைத் தடுப்பதுடன், மண்புழுக்களையும் பயிர்களுக்குச் சத்துகளை அளிக்கும் பூஞ்சை வலையமைப்பையும் வெட்டி அழிக்கிறது. மேலும், தீவிர உழவால் மண்ணுக்குள் அதிகளவில் புகும் ஆக்சிஜன், அங்குள்ள அங்ககச் சத்தை வேகமாக ஆவியாக்கி விடுகிறது.
துளை உழவு
மண்ணின் மேல்பரப்பைக் கலைக்காமல், அடியில் உள்ள கடின அடுக்கை உடைக்க ‘சப்சாய்லர்’ என்னும் துளை உழவுக் கருவி பயன்
படுகிறது. பன்னாட்டு மீளுருவாக்க விவசாயத் தரநிலைகளின்படி, இக்கருவியைக் கொண்டு 4 முதல் 6 அடி இடைவெளியில் ஆழமாக உழவு செய்ய வேண்டும். இது மேல்பரப்பு உயிரினங்களைச் சிதைக்காமல், அடியில் ஒன்றரை முதல் இரண்டு அடி ஆழம் வரை வடிகாலையும் காற்றோட்டத்தையும் உருவாக்க உதவுகிறது.