

தமிழ்நாடு வேளாண்மைத் துறை நடத்திய பயிர் விளைச்சல் போட்டியில், 2025ஆம் ஆண்டு அதிக நெல் உற்பத்தி செய்ததற்கான ‘சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது’, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த க.வீரமணி என்ற விவசாயிக்கு கிடைத்துள்ளது. பூதலூர் அருகேயுள்ள விண்ணமங்கலத்தைச் சேர்ந்த இவருக்கு, தீட்சசமுத்திரம் கிராமத்தில் 7 ஏக்கர் நிலம் உள்ளது. கடந்தாண்டு சம்பா சாகுபடி பருவத்தில் ஹெக்டேருக்கு 14 ஆயிரத்து 925 கிலோ மகசூல் கிடைத்துள்ளது.
இதன் மூலம், நெல் விளைச்சலில் மாநிலத்தில் முதலிடம் பெற்றிருக்கிறார். இந்த சாதனைக்காக, அண்மையில் நடைபெற்ற குடியரசுத் தின விழாவின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவருக்கு ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசுடன் கூடிய விருதை வழங்கி கவுரவித்தார். இது பற்றி கேள்விப்படும் விவசாயிகள் அனைவருக்கும் வியப்பு ஏற்படுவதுடன், இந்த அளவுக்கு மகசூல் கிடைப்பது சாத்தியமா என்ற கேள்வியும் இயல்பாகவே எழுகிறது.
இது பற்றி விவசாயி வீரமணியிடம் கேட்டபோது, “கடந்த ஆண்டு சம்பா பருவத்தில் நான் நிகழ்த்திய சாதனைக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒரு பயிரில் இருந்து சராசரியாக 60 முதல் 80 தூர்கள் வரை வளர்ந்திருந்தன. இந்த ஆண்டு அதைவிடவும் அதிகமாக 120 தூர்கள் வரை உள்ளன. இன்னும் சுமார் 25 நாட்களில் அறுவடை ஆகிவிடும். அதற்கு முன்பு யார் வேண்டுமானாலும் எனது வயலுக்கு நேரில் வந்து எனது நெல் சாகுபடியின் வெற்றி பற்றி உறுதி செய்து கொள்ளலாம்” என்கிறார்.
“உங்களை வெற்றிபெறச் செய்த சாகுபடி தொழில்நுட்பங்கள் என்னென்ன?” என்ற கேள்விக்கு அவர் விளக்கமளித்தார். எங்கள் வயலில் இரண்டு போகம் மட்டும் நெல் சாகுபடி செய்கிறோம். சித்திரை முதல் வாரம் தொடங்கி, ஆடி மாதம் இறுதி வரையிலான காலகட்டத்தில் முன் குறுவை சாகுபடி செய்கிறோம். ஆவணி, புரட்டாசி மாதங்களில் 60 நாட்கள் நெல் சாகுபடி செய்வதில்லை.
இந்த காலகட்டத்தில் செம்மறி ஆட்டு கிடை வயலில் அடைப்போம். தக்கைப்பூண்டு உள்ளிட்ட பசுந்தாள் உரங்களை மட்டும் பயிரிட்டு, 45வது நாளில் மடக்கி உழுது விடுவோம். அதன் பின்னர் ஐப்பசி மாதம் விதை விட்டு, மாசி மாதம் அறுவடை வருமாறு கணக்கிட்டு சாகுபடி செய்கிறோம்.