

தனது தோட்டத்தில் விளைந்த நோனி பழங்களுடன் மணிகண்டன்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நல்லாம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மணிகண்டன் (47). இவர் தனக்கு சொந்தமான 8 ஏக்கர் நிலத்தில், ஒன்றரை ஏக்கரில் மாற்று விவசாயமாக நுணா எனப்படும் நோனி சாகுபடி செய்து வருகிறார். நோனி பழத்திலிருந்து பழச்சாறு தயாரித்து விற்பனை செய்கிறார்.
தமிழகத்தின் பூர்வீக மரமான மஞ்சனத்தி வகையைச் சார்ந்தது வெண் நுணா என்னும் நோனி மரம். ஆஸ்திரேலியா, மொரீஷியஸ், ஜாவா, பிலிப்பைன்ஸ், ஹவாய் போன்ற நாடுகளில் அதிகம் உற்பத்தி செய்யப்படும் நோனி பழங்களின் பழச்சாறுக்கு அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் கிராக்கி அதிகம். மருத்துவ குணம் நிறைந்த நோனி பழங்களை கடந்த 10 ஆண்டுகளாக உற்பத்தி செய்து வரும் மணிகண்டன், தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
இந்திய மல்பெரி பழம் என அழைக்கப்படும் நோனி பழத்தில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. நோனி பழச்சாற்றை அதன் இயற்கை தன்மையும், சுவையும் மாறாமல் தயாரித்து விற்பனை செய்கிறோம். உலக அளவில் பிரசித்தி பெற்ற நோனி பழம் பற்றி இப்போதுதான் தமிழக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.