

காலாபாத் நெல் வயல். (உள்படம்) ரசூல் முகைதீன்.
சாகுபடியில் அரிதாகிப்போன, மணம் மிகுந்த பாரம்பரிய ‘காலாபாத்’ நெல் ரகத்தைத் தேடி, மீட்டெடுத்து, சாகுபடி செய்து வருகிறார் திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டையைச் சேர்ந்த விவசாயி அ.ரசூல் முகைதீன்.
ஒரு காலத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டு, பின்னாளில் வழக்கொழிந்து போன பல நெல் ரகங்களில் காலாபாத்தும் ஒன்று. இந்த நெல் விளைந்து நிற்கும் வயல் வரப்பில், அறுவடைக்குச் சில நாட்களுக்கு முன்பு நடந்து சென்றாலே, அதன் நறுமணம் நாசியைத் துளைக்கும்.
சமைக்கும்போது இதன் இயற்கை மணம் வீடு முழுவதும் பரவி பசியைத் தூண்டும். திண்டுக்கல் என்றாலே அனைவருக்கும் பிரியாணி நினைவுக்கு வரும். அந்தப்பிரியாணிக்கு முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது இந்த காலாபாத் அரிசிதான் என்பது பலரும் அறியாத உண்மை.