

அரியலூர் மாவட்டம் கடுகூர் கிராமத்தில் உள்ள பேரீச்சம்பழ மரங்கள். (உள்படம்) முகிலன்
அரியலூர் அருகே மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் முடித்த இளைஞர் ஒருவர், பேரீச்சை சாகுபடி செய்து சாதனை படைத்துவருவதோடு, ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் வருமானமும் ஈட்டி வருகிறார்.
அரியலூரை அடுத்த கடுகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முகிலன் (50). மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் முடித்துவிட்டு, கடந்த 15 ஆண்டுகளாக துபாய் நாட்டில் பணியாற்றிவந்த இவர், விடுமுறைக்கு ஊருக்கு வரும்போதெல்லாம் அங்கிருந்து பேரீச்சை மரக்கன்றுகளை வாங்கிவந்து, தனது ஒன்றரை ஏக்கர் நிலத்தில் நட்டுச் சாகுபடி செய்தார்.
அவ்வாறு பர்கீ, மெட்சோல், சஃபாவி, கலாஸ், கணேசி, சுக்கரி, சக்காய், நபூட் எனப் பல வகை ரகங்களைச் சேர்ந்த 60 மரக்கன்றுகளை நட்டு, ஆட்களை வைத்துப் பராமரித்துவந்தார்.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு காய்க்கத் தொடங்கிய இம்மரங்கள், தற்போது ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து நல்ல மகசூலைக் கொடுத்துவருகின்றன.
இதுகுறித்து முகிலன் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறுகையில், “20 அடிக்கு ஒன்று என்ற இடைவெளியில் 60 மரக்கன்றுகளை நட்டுப் பராமரித்து
வருகிறேன். இந்த மரங்கள் அனைத்தையும் நட்டு சுமார் 10 ஆண்டுகள் ஆகின்றன. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு காய்க்கத் தொடங்கிய நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பழங்களைப் பறித்து எங்களது பகுதியிலேயே விற்பனை செய்துவருகிறேன்.