

விதை நெல் மூட்டையுடன் அலெக்ஸாண்டர்
ரசாயன உரங்கள் இல்லை, நச்சுத்தன்மை வாய்ந்த பூச்சிக்கொல்லி மருந்துகள் இல்லை; மாறாக, மண்ணின் வளத்தையும் மனிதனின் ஆரோக்கியத்தையும் காக்கும் உயிருள்ள விதைகளை உருவாக்கி பிற விவசாயிகளுக்கு சேவை செய்து வருகிறார் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் விவசாயி அலெக்ஸாண்டர்.
பாரம்பரிய நெல் ரகங்களைச் சாகுபடி செய்வதுடன் நின்றுவிடாமல், அவற்றை முறையாகச் செறிவூட்டி தரமான விதைகளாகத் தமிழகம் முழுவதும் விநியோகித்து, தனக்கென ஒரு வணிக மாதிரியை இவர் உருவாக்கி உள்ளார்.
இயற்கை வேளாண்மைக்கு மாறிய பயணம்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கல்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் அலெக்ஸாண்டர் (40). விவசாயப் பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறந்த இவர், தனக்குச் சொந்தமான 3.5 ஏக்கர் நிலத்தில் தொடக்கத்தில் மற்ற விவசாயிகளைப் போலவே ரசாயன உரங்களை நம்பி விவசாயம் செய்து வந்தார்.