

காவிரி டெல்டாவின் பிரதான பகுதியான திருவாரூர் மாவட்டத்தில் நெல் சாகுபடிதான் பிரதான விவசாயம். பணப்பயிர் சாகுபடிக்கு பொதுவாகவே இந்த மாவட்டத்தில் வாய்ப்புகள் மிகவும் குறைவு. இதனால், கடும் மழை, வெள்ள பாதிப்புகளை சந்திக்கும் சூழலிலும், நெல்லைத் தவிர வேறு பயிர்களை சாகுபடி செய்ய முடியாத சூழலில் இம்மாவட்ட விவசாயிகள் உள்ளனர்.
இதன் காரணமாகத்தான், நெல் சாகுபடியை மையமாகக் கொண்ட வேளாண் தொழில்களை இம்மாவட்டத்தில் தொடங்க வேண்டும் என்று விவசாயிகள் நீண்ட காலமாக அரசை வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், நெல் சாகுபடியை மையமாக வைத்து 74 வயது விவசாயி ஜியாவுதீன் நடத்தி வரும் ஒருங்கிணைந்த பண்ணை, திருவாரூர் மாவட்டத்தில் இதுபோன்ற பல பண்ணைகளை உருவாக்குவதற்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறது.
திருவாரூர் மாவட்டம் பூதமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த இந்த விவசாயிக்கு, வக்ராநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட நீர்மங்கலம் பகுதியில் சுமார் 100 ஏக்கர் நிலம் உள்ளது. அப்பகுதியில் உள்ள மேலும் சில விவசாயிகளிடம் 50 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்துக்கொண்டு, சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த பண்ணையம் நடத்தி வருகிறார்.