

இயற்கை முறையில் பந்தல் காய்கறி சாகுபடி செய்து வரும் 84 வயது விவசாயி, பிரதமர் நரேந்திர மோடியிடம் பெற்ற பாராட்டு மூலம், அவரது சாகுபடி முறை மேலும் பிரபல மடைந்துள்ளது. கோவையில் நடைபெற்ற தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள கேத்தனூரைச் சேர்ந்த கே.வி. பழனிசாமிக்கு பிரதமர் மோடி விருது வழங்கி, அவரை கவுரவப்படுத்தினார்.
இதனால் கடந்த 37 ஆண்டுகளாக இயற்கை முறையில் அவர் மேற்கொண்டு வரும் பந்தல் காய்கறி சாகுபடி இன்னும் பிரபலமாகியுள்ளது. கேத்தனூரில் 60 ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்து வரும் கேத்தனூர் பழனிசாமி, இரண்டு காரணங்களுக்காக தமிழ்நாட்டில் பரவலாக அறியப்பட்டுள்ளார்.
பந்தல் அமைத்து காய்கறி சாகுபடி செய்வதில் எவ்வளவு பலன்கள் கிடைக்கும் என்பதற்கு இவர்தான் முன்னோடியாகக் கருதப்படுகிறார். அதேபோல் 60 ஏக்கர் பெருநிலப் பகுதியில் சாகுபடி செய்யும்போதும், ரசாயன உரங்கள் இல்லாமல், முழுமையாக இயற்கை விவசாயம் செய்ய முடியும் என்பதற்கும் இவர் முன்னுதாரணமாகத் திகழ்கிறார். மேலும், இந்த முறைகளில் லாபகரமான சாகுபடி செய்ய முடியும் என்பதை பல ஆண்டுகளாக தொடர்ந்து நிரூபணம் செய்து வருகிறார்.
தன்னுடைய சாகுபடி குறித்து கே.வி. பழனிசாமி கூறியதாவது: என் தந்தை வெங்கிடுசாமி நாயுடு இயற்கை விவசாயத்தில் முன்னோடியாக இருந்தார். நான் டிப்ளமோ மெக்கானிக்கல் படித்தபோதும், விவசாயம்தான் எனது பிரதான விருப்பமாக இருந்தது. 1965இல் திருமணம் நடந்தது. எனது மனைவி லலிதாமணிக்கும் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் இருந்ததால், அவருடன் சேர்ந்து இயற்கை சாகுபடியை தொடங்கினேன்.