Published : 03 Oct 2017 09:41 AM
Last Updated : 03 Oct 2017 09:41 AM

வரலாறு தந்த வார்த்தை 03: கல்லைத் திருப்புங்கப்பு!

‘கண்ணாடிய திருப்புனா எப்படி ஜீவா வண்டி ஓடும்?’ என்ற ஒரு திரைப்பட காமெடி காட்சி உண்டு. கண்ணாடியைத் திருப்பினால் வண்டி ஓடுமா ஓடாதா என்பதெல்லாம் இருக்கட்டும். ‘கல்லைத் திருப்பினால்’ நிச்சயம் உங்களுக்கு ஏதேனும் ஒரு புதையல் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் நிறைய உண்டு!

‘விடாமுயற்சி’ தொடர்பாக நாம் அனைவருமே ஒரு கதையைக் கேட்டிருப்போம். புதையலைத் தேடிய ஒருவன், தனது நிலத்தைத் தோண்டினான். வியர்க்க விறுவிறுக்கச் சுமார் 18 அடி தோண்டிய பிறகு, ‘நங்’ என்ற சத்தம் கேட்டது. ஆர்வமுடன் அதைப் பார்த்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அது வெறும் பாறை! தனது முயற்சியைக் கைவிட்டான்.

அவன் பக்கத்து வீட்டுக்காரன், அதே இடத்தில் தோண்டினான். கடப்பாரையால் அங்கிருந்த பாறையை நெம்பி எடுத்தான். பிறகு ஒரு அடி தோண்ட, அடித்தது ஜாக்பாட். புதையல் கிடைத்தது!

இதிலிருந்து நாம் கற்றுக்கொள்வது, 18 அடி தோண்டியவன், கூட இன்னும் ஒரு அடி தோண்டியிருந்தால் புதையல் கிடைத்திருக்கும். அதாவது, முயற்சியைக் கைவிட்டுவிடக் கூடாது என்பதைத்தான். பல நேரம் இப்படித்தான், நாம் ஒரு விஷயத்துக்காக முயற்சி செய்துகொண்டிருப்போம். ஆனால் ஒரு கட்டத்தில் விரக்தியில் விட்டுவிடுவோம். அந்த முயற்சியின் பலன் வேறு யாரையோ சென்று சேரும். எனவே, விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும் என்பது இந்தக் கதை தரும் பாடம்.

இப்படி ஒன்றை அடைய எல்லா வகையிலும் முயற்சி செய்வதை ஆங்கிலத்தில் ‘Leaving no stone unturned’ என்பார்கள். அந்தப் பக்கத்து வீட்டுக்காரனைப் போலவே பாலிகிரேட்ஸ் எனும் கிரேக்கக் கொடுங்கோலனும் ‘கல்லை நகர்த்தியதால்’ புதையல் கிடைத்தது. அதிலிருந்துதான் மேற்கண்ட சொற்றொடரும் நமக்குக் கிடைத்தது.

எப்படி? கி.மு. 477-ல் பிளட்டியா யுத்தத்தில் பாரசீகர்களை கிரேக்கர்கள் தோற்கடிக்கின்றனர். போரின் முடிவில், பாரசீகப் படைத் தளபதி மர்தோனியஸின் இடத்தில் புதையலை மறந்து வைத்துவிட்டது பாலிகிரேட்ஸ் மன்னனுக்கு ஞாபகம்வருகிறது. ஆனால், எங்கு தேடியும் புதையல் கிடைக்கவில்லை. எனவே டெல்ஃபி எனும் இடத்தில் உள்ள பிதியா எனும் தெய்வத்திடம் வேண்டுகிறான் பாலிகிரேட்ஸ். உடனே ‘ஒவ்வொரு கல்லையும் நகர்த்திப் பார்’ என்று அசரீரி ஒலிக்கிறது. அதன்படி, மர்தோனியஸின் இடத்தில் உள்ள ஒவ்வொரு கல்லையும் நகர்த்தித் தேடியபோது, புதையல் அகப்பட்டது.

அந்தப் புதையலில் என்ன இருந்தது என்பது நமக்குத் தெரியாது. ஆனால், ஆங்கில மொழிக்கு மேற்சொன்ன சொற்றொடர் புதையலாகக் கிடைத்தது. ஆம், அது புழக்கத்துக்கு வந்து சுமார் 2,500 ஆண்டுகளாகிறது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x