Last Updated : 02 Jul, 2014 01:00 PM

 

Published : 02 Jul 2014 01:00 PM
Last Updated : 02 Jul 2014 01:00 PM

நிலா யாருக்குச் சொந்தம்?

ஒரு காலத்தில் நிலா பூமியின் ஒரு பகுதியாகவே இருந்து வந்தது. அதாவது சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு (ஒரு பில்லியன் என்றால் 100 கோடி என்பது உங்களுக்குத் தெரியும் அல்லவா?).

இப்போது பிரச்சினை அதுவல்ல. நிலா எந்த நாட்டுக்குச் சொந்தம்?

அமெரிக்காவைச் சேர்ந்த நீல் ஆம்ஸ்ட்ராங்தானே நிலாவில் முதலில் காலை வைத்தார். அப்படியானால் நிலா அமெரிக்காவுக்கு சொந்தமா? (சொல்லப்போனால் நிலாவில் இதுவரை அமெரிக்கர்கள் மட்டுமே கால் பதித்திருக்கிறார்கள்).

இப்போது நிலாச் சுற்றுலாவிற்காக சில தனியார் நிறுவனங்கள் பணம் வசூலிக்கிறார்கள். கோடிக்கணக்கில் பணத்தைக் கொடுத்தால், நிலாவுக்கு வருங்காலத்தில் சென்று வரலாமாம். ‘தி கோல்டன் ஸ்பைக்’ என்ற நிறுவனம் 2020-ல் மனிதர்களை நிலாவுக்கு அனுப்புவதாகக் கூறி புக்கிங் செய்யத் தொடங்கிவிட்டது.

இரண்டு பேருக்கு ஒன்றரை பில்லியன் (150 கோடி) டாலர் தொகை செலுத்த வேண்டும்!

நிலா யாருக்குச் சொந்தம் என்ற கேள்விக்குப் பதிலளிக்க அண்டார்க்டிகாவை நினைவுபடுத்திக்கொள்ளலாம்.

அண்டார்க்டிகா ஒரு தனி கண்டமாகக் கருதப்பட்டாலும், அது ஒரு நாடு கிடையாது! அப்படியென்றால் அது வேறு எந்த நாட்டுக்குக்காவது சொந்தமானதா? அதுவுமில்லை.

அண்டார்க்டிகாவில் எந்த அரசும் ஆட்சி அமைக்கவில்லை. அங்கு அரசியல் கட்சிகளே கிடையாது. (அங்கு நிலவும் குளிரில் மக்களே நிரந்தரமாக வசிக்க மாட்டார்கள் என்பது வேறு விஷயம்.)

‘அண்டார்க்டிகாவைப் பிரித்துக்கொள்ள மாட்டோம், எங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்ள மாட்டோம்’ என்ற உடன்படிக்கையில் ஐம்பது நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. (1826-ல் ரஷ்யர்கள்தான் இதை முதலில் கண்டறிந்தார்கள் என்றாலும் அவர்கள் அங்கு வசிக்கவில்லை. அந்த நூற்றாண்டின் முடிவு வரை அது ஆளில்லாத பகுதியாகவே இருந்தது.)

அறிவியல் ஆராய்ச்சிகளுக்காக மட்டுமே அன்டார்க்டிகா பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் ராணுவச் செயல்பாடுகளுக்கு அங்கு முழுவதுமாகத் தடை என்றும் மேற்படி உடன்படிக்கையில் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல அண்டார்க்டிகாவில் பிளாட்டினம், தங்கம், குரோமியம் போன்ற உலோகங்களும் உண்டு. உலகப் போர்களின் அழிவுகளால் கலவரப்பட்ட நாடுகள் ‘2048-ம் ஆண்டு வரை அண்டார்க்டிகாவில் யாரும் சுரங்கம் வெட்டக் கூடாது’ என்றும் உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன .

நிலவிலும் ஹீலியம் 3 போன்ற அரிதான ரசாயனப் பொருள்கள் தென்படுகின்றன. ஆராய்ச்சியில் மேலும் பல அரிதான கனிமங்கள் அங்கு கிடைக்கக்கூடும். எனவே நிலவை சொந்தமாக்கிக்கொள்ள நாடுகள் போட்டியிட்டால்…?

முதலில் வெற்றிகரமாக நிலவில் கால் பதித்ததால் நிலவு அமெரிக்காவுக்குச் சொந்தமாகிவிட முடியாது. அப்படிப் பார்த்தால் விண்வெளிக்கு முதலில் தன் நாட்டவரை அனுப்பியதால், விண்வெளி சோவியத்துக்குச் சொந்தமாகி விடுமா?

இதுவரை எந்தநாடும் நிலவுக்குச் சொந்தம் கொண்டாடவில்லை. அதற்கான அதிகாரபூர்வமான முயற்சிகளிலும் ஈடுபடவில்லை.

தவிர ஐ.நா. ஒப்பந்தப்பட்டி விண்ணில் உள்ள எந்தப் பொருளையும் எந்தக் குறிப்பிட்ட நாடும் சொந்தம் கொண்டாடவும் முடியாது.

எனவே நிலவு எல்லாருக்கும்தான் சொந்தம் உங்களையும் சேர்த்து.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x