Published : 04 Sep 2017 10:11 AM
Last Updated : 04 Sep 2017 10:11 AM

விரைவில் வருகிறது ரெனால்ட் கேப்டுர்

ந்தியச் சந்தையில் தனது இடத்தை மேலும் வலுப்படுத்திக் கொள்ள பிரான்ஸை சேர்ந்த ரெனால்ட் நிறுவனம் சர்வதேச அளவில் பிரபலமாக விளங்கும் எஸ்யுவி மாடலான கேப்டுரை அறிமுகப்படுத்த உள்ளது.

இந்நிறுவனத்தின் சொகுசு எஸ்யுவி-க்களில் கேப்டுர் மிகவும் பிரபலமானதாகும். விற்பனையை அதிகரிக்கும் அதே நேரத்தில் விநியோகஸ்தர்களின் எண்ணிக்கையும் உயர்த்த இந்நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. தற்போது இந்தியா முழுவதும் இந்நிறுவனத்துக்கு உள்ள விற்பனையாளர்களின் எண்ணிக்கை 300-ஐத் தொட்டுள்ளது.

சர்வதேச அளவில் நிறுவனத்தின் வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு கணிசமாக உள்ளது. வளர்ந்து வரும் இந்தியச் சந்தையில் தங்களது இடத்தை மேலும் வலுப்படுத்திக் கொள்ள புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்வது மிகவும் அவசியமாகிறது. இதைக் கருத்தில் கொண்டே சர்வதேச அளவில் பிரபலமாக விளங்கும் கேப்டுரை இந்த ஆண்டு அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளதாக நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான சுமித் சஹானி தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இந்தியாவில் எஸ்யுவி-க்களின் சந்தை விரிவடைந்து வருகிறது. இத்தகைய சந்தர்ப்பத்தில் தங்களது சொகுசு வாகன அறிமுகம் விற்பனையை அதிகரிக்க உதவும் என்று நிறுவனம் உறுதியாக நம்புகிறது.

சர்வதேச அளவில் அறிமுகமாகியுள்ள கேப்டுர் இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமாக விற்பனையாகியுள்ளது. சர்வதேச அளவில் மிகவும் சிறப்பான வடிவமைப்புக்கான பாராட்டை இந்த கேப்டுர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பெரு நகரங்கள் மட்டுமின்றி இரண்டாம் நிலை நகரங்களிலும் தனது புதிய தயாரிப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக விநியோகஸ்தர்களின் எண்ணிக்கையை சிறு நகரங்களிலும் தொடங்கி வருகிறது ரெனால்ட்.

2020-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் முன்னணி கார் பிராண்டுகளில் முதல் ஐந்து இடங்களுக்குள் இடம்பெற வேண்டும் என்ற இலக்கை நோக்கி செயல்படுவதாக சஹானி குறிப்பிட்டார். இந்த இலக்கை எட்ட கேப்டுரின் வரவு துணை புரியும் என்று நம்பலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x