Last Updated : 30 Jul, 2014 11:37 AM

 

Published : 30 Jul 2014 11:37 AM
Last Updated : 30 Jul 2014 11:37 AM

சட்டையைக் கழட்டும் பாம்பு - நிலா டீச்சர் வீட்டில்

கவினும் ரஞ்சனியும் வீட்டுத் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்பா செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தார். விளையாடிக்கொண்டிருந்த கவினின் பார்வை, ஒரு செடியின் கீழ் கிடந்த வெள்ளை நிற சுருள் போன்ற பொருளின் மேல் பட்டது. உடனே அவன் விளையாடுவதை நிறுத்திவிட்டான்.

“என்னடா கிடக்கு அங்கே? பார்த்துக்கிட்டே நிக்குறே?” என்று கேட்டாள் ரஞ்சனி.

“அதோ, அங்கே பாரேன்” எனக் கூறிய கவின், அந்த திசையை நோக்கிக் கை நீட்டினான்.

ரஞ்சனியும் பார்த்தாள். “அப்பா! அது என்னதுப்பா?” என்று கேட்டாள்.

அவர்கள் கை நீட்டிய திசையில் உற்றுப் பார்த்த அப்பா, “அது பாம்புச் சட்டை” என்றார்.

“அப்பா! பாம்புக்கு ஏதுப்பா சட்டை?” மடக்கினான் கவின்.

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. பாம்பு இப்படி சட்டையை உரிச்சி போட்டுட்டுப் போவது மட்டும் நிச்சயமாத் தெரியும்” என்றார் அப்பா.

“ஏம்பா, இப்படி உரிச்சி போட்டுட்டுப் போகுது?” அடுத்து மடக்கினாள் ரஞ்சனி.

“ஐயோ! இவங்கள நான் எப்படி சமாளிப்பேன்?” என்று நிலா டீச்சரை அழைத்தார் அப்பா.

“என்ன பிரச்சினை?” என்று கேட்டுக்கொண்டே தோட்டத்துக்கு வந்தார் நிலா டீச்சர்.

“பாம்புக்கு எப்படி சட்டை வந்ததுன்னு கவின் கேட்கிறான்” என்று தன் கோபத்துக்குக் காரணத்தைக் கூறினார் அப்பா.

“ஆமாம். பாம்பு எப்படி சட்டை போடும்?” என்று நிலா டீச்சரும் அதே கேள்வியைக் கேட்டார்.

“அதோ கிடக்குதே அது என்ன?” என்று கையை நீட்டிக் காட்டினார் அப்பா.

அந்த திசையைப் பார்த்த நிலா டீச்சர், “ஓ! இதுவா. இதை பாம்பு சட்டைன்னுதான் சொல்லுவாங்க. ஆனா, நாம கழட்டி வைக்கிற சட்டையைப் போலில்லை, இது” என்றார் நிலா டீச்சர்.

“அம்மா! பாம்புக்கு இந்த சட்டை எப்படி வந்தது? ஏன் உடம்பிலேர்ந்து இதை உரிச்சிப் போடுதுன்னு சொல்லுங்க” என்றாள் ரஞ்சனி.

“சரி சரி, சொல்றேன்” என்று கூறிய நிலா டீச்சர், பாம்பு சட்டையின் கதையைச் சொல்லத் தொடங்கினார்.

“உடம்புல பழைய செல்கள் அழிந்து, புதுசு புதுசா செல்கள் உருவாவது எல்லா உயிரினங்களிலும் நடக்குது. அதே போலத்தான் பாம்புகளிலும், தோலோட மேல்புறத்தில இருக்கும் பழைய செல்கள் அழிந்து, புதிய செல்கள் வளருது. அப்படி அழிந்து போன பழைய செல்களைத்தான், பாம்பு சட்டை மாதிரி உரிச்சுப் போடுது. உடல் முழுவதும் உள்ள தோலின் மேலேயுள்ள அழிந்து போன செல்களை, பாம்பு மொத்தமா உரிச்சுப் போடுறதைப் பார்க்கும்போது, சட்டய கழட்டி வச்சது போலவே இருக்குது” என்றார் நிலா டீச்சர்.

“அப்படின்னா நம்ம உடம்பின் தோலிலும் இப்படி பழைய செல்கள் அழிந்து, புதிய செல்கள் வளருதா?” என்றான் கவின்.

“அப்படின்னா நம்ம உடம்பின் தோலிலும் இப்படி பழைய செல்கள் அழிந்து, புதிய செல்கள் வளருதா?” என்றான் கவின்.

ஆமோதித்தார் நிலா டீச்சர்.

“பாம்பு சட்டைய போல, நமக்கு ஏன் பழைய செல்கள் உரியல?” அம்மாவை மடக்கினாள் ரஞ்சனி.

“ஒவ்வொரு உயிரினத்துலேயும், உடம்பிலிருக்கும் பழைய செல்கள் ஒவ்வொரு மாதிரி வெளியேற்றப்படுது. பாம்புல அழிந்துபோன பழைய செல்களெல்லாம் ஒண்ணா இணைஞ்சு படலம்போல கழட்டி வைக்கப்படுது. நம்ம உடம்பின் மேல் பகுதியில கண்ணுக்குத் தெரியாத சிறுசிறு துகள்களாக பழைய செல்கள் வெளியேற்றப்பட்டு, புத்தம்புது செல்கள் வளர்ந்துகிட்டே இருக்கு” என்றார் நிலா டீச்சர்.

“அம்மா! எனக்கு இன்னொரு கேள்வி” என்றான் கவின்.

“சொல்லு” என்றார் நிலா டீச்சர்.

“நம்ம தோட்டத்துல பாம்பு சட்டைய உரிச்சிருந்தா, இங்கே பாம்பு இருக்குமா?” என்றான் கவின்.

“இருக்கலாம். அப்படியே இருந்தாலும், அது நம்மள கொத்துறதால பாம்புக்கு என்ன கிடைக்கப் போகுது? நிச்சயமா ஒண்ணும் இல்ல. நம்மை தேடி வந்து எந்தப் பாம்பும் கொத்தாது. சொல்லப்போனா, நாம பக்கத்துல போறது தெரிஞ்ச உடனேயே பாம்புகள் பயந்து, நம்ம பார்வைலேர்ந்து மறைஞ்சிடும்.

தெரிஞ்சோ, தெரியாமலோ நாம தொந்தரவு செய்யறப்ப, நம்மிடமிருந்து தப்பிக்க முடியாதுன்னு பாம்புகள் நினைக்கற சூழல்லதான், கொத்துறதுக்கு முயலும். அப்போகூட நம்மள பயமுறுத்தி எப்படியாவது தப்பிச்சு ஓடவே பாம்புகள் முயற்சிக்கும்.

இப்படி பயந்த சுபாவமுள்ள பாம்புகளைப் பார்த்து நாம ஏன் பயப்படணும்? பாம்புகளை எதற்காகவும் தொந்தரவு செய்யக் கூடாது” என்றார் நிலா டீச்சர்.

“சரிம்மா! பாம்புகளுக்கு நாங்க எந்தத் தொந்தரவும் கொடுக்க மாட்டோம்” என்று சத்தமாகக் கூறிய கவினும் ரஞ்சனியும் மீண்டும் தோட்டத்தில் விளையாடத் தொடங்கினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x