Last Updated : 05 Jul, 2014 09:00 AM

 

Published : 05 Jul 2014 09:00 AM
Last Updated : 05 Jul 2014 09:00 AM

சாத்தூருக்குப் பெருமை சேர்க்கும் சேவு

பாரதியார் வீரப் பலகாரங்கள் என ஒரு பட்டியல் போடுகிறார். அதாவது சாப்பிடுவதற்குக் ‘கரமுறகரமுற’ என இருக்கும் முறுக்கு, வறுவல்(சீவல்), சேவு போன்ற இந்தப் பலகாரங்களைச் சாப்பிட்டால் ஓர் உற்சாகம் பிறக்கும். இம்மாதிரியான பலகாரங்களுக்கு அவர் வேடிக்கையாக ‘வீரப் பலகாரம்’ எனச் சிறப்பு அடைமொழி கொடுக்கிறார்.

இந்த வீரப் பலகாரத்தில் குறிப்பிடத்தகுந்தது ‘சேவு’. இதை வட தமிழகத்தில் ‘காரசேவு’ என அழைக்கிறார்கள். பொதுவாகத் தென்மாவட்டத்தில் பெரும்பாலான ஊர்கள் முறுக்கு, சேவு, வறுவல் தயாரிப்பில் பெயர் பெற்றவை. கோவில்பட்டி, அருப்புக்கோட்டை, விளாத்திகுளம், விருதுநகர் ஆகிய ஊர்களில் இந்தப் பலகாரங்களைத் தயாரிக்கும் பட்டறைகள் அதிக அளவில் இருக்கின்றன. ஆனாலும் சேவுக்கெனப் புகழ் பெற்ற ஊர் சாத்தூர்தான்.

சென்னை - கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் உள்ள இந்த ஊரைத் தாண்டிச் செல்லும் யாரையும் தன்பால் ஈர்த்துவிடும் குணம் கொண்டது சாத்தூர் சேவு. சாத்தூர் பேருந்து நிலையத்திலேயே ‘சாத்தூர் சேவு’ ‘சாத்தூர் சேவு’ என ஒலிக்கும் வியாபாரிகள் சத்தம் சாத்தூர் சேவின் ருசிக்குச் சான்றாகும். சாத்தூர் இந்தப் பெருமையைத் தக்கவைத்துக்கொண்டிருக்கக் காரணம் சண்முக நாடார் மிட்டாய்க் கடைதான். சாத்தூர் நகராட்சி பஸ் ஸ்டாண்டுக்கு அருகே ரயில்வே சாலையில் உள்ளது நூறு வருடம் பழமையான இந்தக் கடை.

இந்தக் கார சேவு, வட இந்தியத் தின்பண்டமான ‘புஜியா’விலிருந்து வந்திருக் கலாம் எனச் சொல்லப்படுகிறது. ஆனால் புஜியா இன்னும் சிறியதாக இருக்கும். சண்முகவேல்

நாடார் நூறாண்டுகளுக்கு முன்பே இத்தொழிலைச் சாத்தூரில் தொடங்கினார். ஆனால், அப்போது சேவு அல்லாத பலவிதமான தின்பண்டங்களைத் தயாரித்து விற்றுவந்தார். பிறகு சேவு

அந்தப் பகுதியில் பிரபலமாக, அதையும் தயாரித்து விற்றார். சண்முகவேல் நாடாரின் தயாரிப்பு சேவுக்குக் கூடுதல் சுவையைக் கொடுக்க, அது சாத்துருக்கே பெருமை அளிக்கும் விஷயமானது.

சண்முகவேல் நாடாரின் கடைக்கு 1964-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் காமராஜர் வந்திருக்கிறார். இன்னும் பல முக்கியஸ்தர்களைச் சண்முக நாடாரது சேவின் சுவை இழுத்து வந்திருக்கிறது. சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் சாத்தூர் சேவை ஏற்றுமதி செய்திருக்கிறார்கள். நாளொன்றுக்கு 150 கிலோ வரை சண்முக நாடார் கடையில் சேவு விற்பனையாகிறது. இப்போது இந்தக் கடையைச் சண்முக நாடாரின் மூன்றாம் தலைமுறையினர் நிர்வகிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

கொடைக்கானலில் இருந்து தருவிக்கப்படும் பூண்டும், தனித்துவமான கைப்பக்குவமும், சுத்தமான பகுதிப் பொட்களும்தான் சண்முக நாடார் கடைச் சேவின் தனி ருசிக்குக் காரணம். கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்ப் பொடி, கடலை எண்ணெய், சீரகம், பூண்டு, வெங்காயம், கல் உப்பு ஆகியவைதான் சேவு தயாரிப்பின் பகுதிப் பொருள்களாகும்.

சுத்தமான தண்ணீரில் எடுத்துவைத்துள்ள மிளகாய்ப் பொடி, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கரைசலாக்கிக் கொள்ள வேண்டும். பூண்டு, பெருங்காயம் இரண்டையும் அரைத்து விழுதாக்கித்

தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். தண்ணீர்க் கரைசலுடன் கடலைமாவு, அரிசி மாவு இரண்டையும் கலந்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைய வேண்டும். அரைத்து விழுதாக்கப்பட்ட பூண்டு, பெருங்காயக் கலவையை அதனுடன் சேர்த்துப் பிசைய வேண்டும். பிறகு சீரகத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்தக் கலவையைச் சேவு பிழியும் சாதனத்தில் இட்டு அடுப்பில் கொதிக்கவைக்கப்பட்ட கடலை எண்ணெயில் மாவைக் குச்சி குச்சியாகப் பிழிய வேண்டும். பிறகு அதைப் பக்குவமாக வேகவிட்டு எடுத்தால் மொறு மொறுயான சேவு தயார்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x