Published : 21 Jul 2014 03:09 PM
Last Updated : 21 Jul 2014 03:09 PM

அரசியலை விரும்பித் தேர்ந்தெடுத்தேன்: மத்திய அமைச்சர் நஜ்மா அக்பரலி ஹெப்துல்லா

1970-ம் ஆண்டில் இந்தியாவில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஒரு இளைஞர் நஜ்மாவின் வீட்டுக்குக் கணக்கெடுப்புக்காக வந்திருந்தார். தகவல்களைச் சொன்னபடியே அந்த இளைஞரைப் பற்றி விசாரித் தார் நஜ்மா. வேதியியலில் முதல் வகுப்பில் அவர் தேறியிருந்தார். நீங்கள் ஏன் இப்படிப்பட்ட தற்காலிக வேலையில் சேர்ந்தீர்கள்? என்று கேட்டபோது, வேலை கிடைக்கவில்லை என்று அந்த இளைஞர் பதிலளித்தார். நன்கு படித்த ஒரு இளைஞரின் இந்த பதில் நஜ்மாவைப் பெரிதும் யோசிக்கவைத்தது.

திறமைசாலிகளாக விளங்கும் இளைய தலைமுறையினரை முழுமையாகப் பயன் படுத்திக்கொள்வது நம் முன்னேற்றத்துக்கு முக்கிய மானது என்பது அவருக்குப் புரிந்தது. தீவிர சிந்தனைக்குப் பிறகு இதற்கான செயல் திட்டம் ஒன்றைத் தயாரித்து, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியிடம் வழங்கினார். அப்போது நஜ்மாவின் வயது சுமார் முப்பதுதான்.

அரசியல் தேர்வு

இந்திரா, அதைத் தமது பிரதான செயலர் பீ.என். ஹக்ஸரிடம் கொடுக்குமாறு கூறினார். அதைப் படித்துப் பார்த்த ஹக்ஸர், “இது மிகச் சிறந்த திட்டம்” என்று பாராட்டியதோடு அதை உடனே அரசியல்வாதிகளிடம் கொடுக்கச் சொல்லி ஆலோசனை வழங் கினார். அதற்கு நஜ்மா, “நான் அரசியல்வாதிகளுக்குக் கொடுக்கப்போவதில்லை. நானே ஒரு அரசியல்வாதி ஆகப்போகிறேன்” என்று சொல்லியிருக்கிறார். சொன்ன வார்த்தைகளை நிரூபித்தும் விட்டார்.

“1980-ம் ஆண்டு என் நாற்பதாவது வயதில், தேர்தலில் போட்டியிட்டு ராஜ்யசபா உறுப்பினரானேன். 1985-ல், ராஜ்யசபாவின் துணைத் தலைவர் பதவியேற்று ஏறத்தாழ 17 ஆண்டுக் காலம் அந்தப் பதவியில் இருந்தேன்” என்று சொல்லும் நஜ்மா, தற்போது பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கிறார். அமைச்சரவையின் ஒரே முஸ்லிம் பெண்ணான இவர், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகிக்கிறார்.

முளைவிட்ட நாட்டுப்பற்று

டாக்டர் நஜ்மா அக்பரலி ஹெப்துல்லா 1960-ம் ஆண்டு விலங்கியல் துறையில் பல்கலைக்கழகத்திலேயே முதலிடம் பெற்ற மாணவியாகத் திகழ்ந்தார். சுதந்திர இந்தியாவின் முதலாவது கல்வித் துறை அமைச்சரான மௌலானா அபுல்கலாம் ஆசாத், இவருடைய தகப்பனார் வழி பாட்டியின் சகோதரர். இவர் குடும்பத்தார் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டிருந்தனர். தேசிய உணர்வும் நாட்டுப்பற்றும் அப்போதே நஜ்மாவையும் தொற்றிக்கொண்டன.

கட்சியோடு ஏற்பட்ட முரண்

காங்கிரஸ் ஆட்சியில் பணியாற்றியபோது, பல பொறுப் பான பதவிகளை வகித்துச் சிறப்புடன் பணி யாற்றினார். கட்சியின் பொதுச் செயலராக இருந்தார். மாநிலங்களவையின் துணைத் தலைவராக நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலராக இருந்தார்.

காங்கிரஸ் கட்சியினரின் செயல்பாட்டு முறைகளோடு ஏற்பட்ட வேறுபாடுகளால் 2004-ம் ஆண்டு கட்சியிலிருந்து விலகி, பா.ஜ.க.வில் சேர்ந்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணி குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் இவரைக் களமிறக்கியது. அதில் தோற் றாலும், 2004-ல் மாநிலங்களவை உறுப்பினரானார். பிறகு பா.ஜ.க.வின் துணத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இவருடைய கணவர் அக்பரலி ஏ. ஹெப்துல்லா, மும்பையில் தொழிலதிபராக இருந்தார். இவரது மூன்று மகள்களும் அமெரிக்காவில் வசிக்கிறனர். நடிகர் ஆமிர் கான் நஜ்மா ஹெப்துல்லாவின் உறவினர் என்பது ஒரு கொசுறுச் செய்தி.

தொடரும் பணிகள்

நஜ்மா பல புத்தகங்களை எழுதியுள்ளார். இந்திய - மேற்காசிய உறவுகள், உலகளாவிய நெடுநோக்கு, மகளிருக்கான சீர்திருத்தங்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவின் வளர்ச்சி போன்ற பல தலைப்புகளில் இவரது படைப்புக்கள் பளிச்சிடுகின்றன. தன் 22-வது வயதிலேயே டென்வர் பல்கலைக் கழகத்திலிருந்து கார்டியக் அனாடமி (இதய உள்ளமைப்பியல்) துறையில் டாக்டரேட் பட்டம் பெற்றார். இந்திய அரசின் கவுன்சில் ஆஃப் சைன்டிஃபிக் அண்ட் இண்டஸ்ட்ரியல் கவுன்சிலிலும் விஞ்ஞானிகள் குழுவிலும் பணியாற்றினார்.

முகம் நூறு

நஜ்மா பல புத்தகங்களை எழுதியுள்ளார். இந்திய - மேற்காசிய உறவுகள், உலகளாவிய நெடுநோக்கு, மகளிருக்கான சீர்திருத்தங்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவின் வளர்ச்சி போன்ற பல தலைப்புகளில் இவரது படைப்புக்கள் பளிச்சிடுகின்றன. தன் 22-வது வயதிலேயே டென்வர் பல்கலைக் கழகத்திலிருந்து கார்டியக் அனாடமி (இதய உள்ளமைப்பியல்) துறையில் டாக்டரேட் பட்டம் பெற்றார். இந்திய அரசின் கவுன்சில் ஆஃப் சைன்டிஃபிக் அண்ட் இண்டஸ்ட்ரியல் கவுன்சிலிலும் விஞ்ஞானிகள் குழுவிலும் பணியாற்றினார்.

1999-ம் ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி, பெர்லினில் நடைபெற்ற இண்டர் பார்லி மெண்டரி யூனியன் - ஐ.பி.யூ. எனும் அமைப்பின், 165-வது கூட்டத் தொடரில் டாக்டர் நஜ்மா, ஐ.பீ.யூ.வின் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உலகின் 140 பார்லிமெண்டுகளைக் கொண்ட இந்த ஐ.பி.யூ. அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்ற முதல் பெண் இவர்தான். ஐ.பி.யூ.வின் ஆயுட்கால கவுரவத் தலைவராக இருந்துவருகிறார். இந்திய - அரபு சங்கத்தின் தலைவராகவும் இந்திய இஸ்லாமிய கலாச்சார மையத்தின் அறங்காவலர்கள் குழு உறுப்பினராகவும் இருக்கிறார். ஐ.நா. வளர்ச்சித் திட்ட அமைப்பான யூ.என்.டி.பி.யின் மனித ஆற்றல் மேம் பாட்டுக்கான தூதர் என இவரது சிறப்புக்கள் தொடர்கின்றன.

சர்ச்சைக்கு விளக்கம்

மகளிர் பிரச்சினைகள் குறித்து மிகுந்த ஆர்வமும் அக்கறையும் கொண்டவர் நஜ்மா. 1997-ல் மகளிர் அந்தஸ்து குறித்த ஐ.நா. கமிஷனின் இந்தியப் பிரதிநிதிக் குழுவின் தலைவராகப் பங்கேற்றார். நான்காவது உலக மகளிர் மாநாட்டில் மிகுந்த முனைப்புடன் செயல்பட்டார். 1985-ம் ஆண்டு இந்தியக் குடும்பத் தலைவிகள் சம்மேளனத் தலைவராக இருந்தார். ‘நயி ரோஷ்னி’ (புதிய ஒளி) என்ற திட்டம் ஒன்றை இவர் வகுத்திருக்கிறார். சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை, தொழிற் பயிற்சி, படிப்பு வசதி, மைக்ரோ க்ரெடிட் ஆகியவை இத்திட்டத்தில் அடங்கும்.

“மத்தியப் பிரதேசம், ஜம்மு - காஷ்மீர், பிஹார் ஆகிய மாநிலங்கள் பாரம்பரியக் கைவினைத் தொழில்களுக்குப் பேர்போனவை. இங்குள்ள கைவினைக் கலைஞர்கள் முன்னேற உதவும் ‘உஸ்தாத்’ என்ற திட்டத்தையும் முழு வீச்சில் செயல்படுத்தப் போகி றேன்” என்கிறார் அமைச்சர் நஜ்மா.

சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சரான இவர், சமீபத்தில் தெரிவித்த ஒரு கருத்து சர்ச்சைக்குள்ளானது. முஸ்லிம்கள் சிறுபான்மையினர் அல்ல, பார்ஸிகளே சிறு பான்மையினர் என்றார் அவர். பார்ஸிக்கள், கிறிஸ்துவர்கள், ஜைனர்கள், பவுத்தர்கள் மற்றும் சீக்கியர்கள் ஆகியோரே சிறுபான்மையோர் பட்டியலில் அடங்குவர் என்றும் கூறியிருந்தார். தனது அமைச்சகம் முஸ்லிம் விவகாரங்களுக்கானது அல்ல; சிறுபான்மையோர் விவகாரங் களுக்கானது என்கிறார். “சிறுபான்மையோருக்கு சமச் சீரான வாய்ப்பளிப்பதுதான், இப்போதுள்ள அவசியமான அவசரத் தேவை; ஆனால் இதற்கு இட ஒதுக்கீடு ஒரு விடையாகாது” என்று உறுதியாகக் கூறுகிறார்.

“அரசியல் சாசனத்தின் கீழ், மதத்தின் அடிப்படையிலான இடஒதுக்கீடு என்பது, அனு மதிக்க முடியாதது. அது, இந்தப் பிரச்சினைக்கான தீர்வும் அல்ல” என்கிறார். பாரதிய ஜனதா கட்சி தலைமை வகிக்கும் அமைச்சரவையில் இருப்பதாலேயே இவர் இப்படிப் பேசுகிறார் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மொழி உள்ளிட்ட பல்வேறு வகையிலான சிறுபான்மைச் சமூகத்தினர்களும், நாட்டின் வளர்ச்சியிலும் முன்னேற்றத் திலும் பங்கேற்பதன் மூலம், உலகின் முதலிடத்தில் நிற்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியாதிகழ முடியும் என்பது நஜ்மாவின் உறுதியான கருத்து.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x