Last Updated : 05 Apr, 2014 12:00 PM

 

Published : 05 Apr 2014 12:00 PM
Last Updated : 05 Apr 2014 12:00 PM

பேஸ்புக்கால் பிழைத்த உயிர்

சமூக வலைதலங்கள் பொழுதுபோக்காக மட்டுமே பயன்படுகிறது என்னும் குரல் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அதையும் மீறி சமூக வலைதலங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில நல்ல செயல்களிலும் ஈடுபடுகின்றன. சமீபத்தில் கேரளாவில் ஃபேஸ்புக் மூலமாக இளம்பெண் ஒருவரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் அகலி என்னும் இடத்தில் வசித்துவருபவர் ரபிதா சுனில் குமார். அவர் அகலியிலுள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவருகிறார். அவருடைய பெற்றோர் கூலித் தொழிலாளிகள். பிறந்ததிலிருந்தே அந்தப் பெண் இதய நோயால் அவதியுற்றுவருகிறார். ஒரு சில நாட்களுக்கு முன்னர் ரபீதா வகுப்பறையில் மிகவும் களைப்பாக இருந்திருக்கிறார்.

உடல்நிலை பாதிப்படைந்துள்ளதை உணர்ந்திருக்கிறார். எனவே அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ரபீதாவை முழுமையாகப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு இதய நோய் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என ஆலோசனை தெரிவித்துள்ளனர். ஆனால் பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வு இருந்ததால் அவர் தேர்வெழுதச் சென்றுள்ளார். தேர்வு எழுத அவர் விரும்பினாலும் உடல்நிலை அவருக்கு ஒத்துழைக்கவில்லை. கடும் வலி காரணமாக அவரால் தேர்வைச் சரியாக எழுத முடியவில்லை. பாதியிலேயே வீட்டிற்குத் திரும்பிவிட்டார்.

அறுவைச் சிகிச்சை செய்தால் ஒழிய அவர் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதனால் அவரது பெற்றோர் அவரை அங்குள்ள ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதய நோய் அறுவைச் சிகிச்சையை மேற்கொள்ள இரண்டு லட்சம் ரூபாய் செலவாகுமென்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். சாதாரணக் கூலித் தொழிலாளர்களான அவருடைய பெற்றோருக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. மகளின் உயிரைக் காப்பாற்ற அவ்வளவு பணமில்லை என்பதால் கவலையடைந்துள்ளனர்.

நெருக்கடியான நிலைக்குத் தள்ளப்பட்டது ரபீதாவின் குடும்பம். குடும்ப நண்பர்கள் ஏதாவது நன்கொடை திரட்டலாம் என யோசனை தெரிவித்தனர், அதற்கும் முயன்றனர். ஆனால் நிலைமை அவர்களுக்குச் சாதகமாக இல்லை. அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. குறுகிய காலத்தில் எப்படிப் பணத்தைப் புரட்டுவது என ரபீதாவின் பெற்றோர் கலங்கித் தவித்துப்போனார்கள்.

இப்படியான சமயத்தில் ரபீதாவுடன் படிக்கும் மாணவி ஒருவர் ரபீதாவின் நிலைமை பற்றி ஃபேஸ்புக்கில் சாயக்கடா என்னும் குழுவில் பதிவிட்டுள்ளார். அது வெறும் லைக்குகளும் கமெண்டுகளுமாகச் சாதாரணப் பதிவாக முடிந்துவிடவில்லை. அந்தப் பதிவுக்கு அதிகமான அளவில் ஆதரவு கிடைத்தது. அந்தக் குழுவின் உறுப்பினர்கள் தங்களது பங்காக ரூபாய் ஒரு லட்சத்து அறுபதாயிரத்தைத் திரட்டிக் கொடுத்துள்ளனர். எல்லோரும் அவர்களாக விரும்பி வந்து உதவினார்கள் என சாயக்கடா குழு உறுப்பினர்களில் ஒருவரான மினி ஸ்ரீனிவாசன் கூறுகிறார்..

இந்தியாவில் உள்ளவர்கள் மட்டுமல்ல இஸ்ரேல், அங்கோலா போன்ற நாடுகளில் வசிக்கும் உறுப்பினர்கள் சிலரும் இந்த உதவியில் கைசேர்த்திருக்கிறார்கள். உண்மையில் இஸ்ரேலில் உள்ள ஒரு உறுப்பினர்தான் இந்த உதவிப் பயணத்தைத் தொடங்கிவைத்தார் என ரபீதாவின் அம்மா பிந்து சுனில்குமார் சொல்கிறார். அதனால்தான் எங்களை மலைக்கவைத்த தொகையை ஒரு வாரத்திற்குள் புரட்ட முடிந்தது என்றும் அவர் சந்தோஷப்படுகிறார்.

ரபீதாவின் அறுவைச் சிகிச்சைக்குத் தேவையான பணம் கிடைத்துவிட்டது. ரபீதாவுக்குத் தேவையான சிகிச்சையை மருத்துவர்கள் அளித்துவிட்டனர். ரபீதா மெல்ல மெல்ல இயல்பான நிலைக்குத் திரும்பிவருகிறாள் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ரபீதா மீண்டும் துள்ளித் திரியும் காலம் தொடங்கிவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x