Last Updated : 04 Feb, 2023 02:01 PM

 

Published : 04 Feb 2023 02:01 PM
Last Updated : 04 Feb 2023 02:01 PM

உலகின் மிகப் பெரிய வெப்பப் பாலைவனம்!

சஹாரா பாலைவனம் பூமியின் மிகப்பெரிய வெப்பப் பாலைவனம். ஆப்பிரிக்கக் கலாச்சாரம், வரலாறு போன்றவற்றில் சஹாரா முக்கியப் பங்கு வகித்துள்ளது.

சஹாரா பாலைவனம் வட ஆப்பிரிக்காவில் உள்ளது. இது அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து செங்கடல் வரை வட ஆப்பிரிக்காவின் பெரும்பகுதியை உள்ளடக்கியது. எகிப்து, லிபியா, துனிசியா, அல்ஜீரியா, மொராக்கோ, மேற்கு சஹாரா, மொரிட்டானியா, மாலி, நைஜர், சாட், சூடான் உள்ளிட்ட பதினோரு நாடுகளின் பகுதிகளை சஹாரா உள்ளடக்கியிருக்கிறது.

சஹாரா பாலைவனம் 3,629,360 சதுர மைல்கள் பரப்பளவைக் கொண்டது. கிழக்கிலிருந்து மேற்காக 4,800 மைல்கள் நீளமும், வடக்கிலிருந்து தெற்காக 1,118 மைல் அகலமும் கொண்டது. இது மேலும் மேலும் வளர்ந்துவருகிறது.

சஹாரா ஒரு நாடாக இருந்தால், அது உலகின் ஐந்தாவது பெரிய நாடாக இருக்கும். பிரேசிலைவிடப் பெரியது, அமெரிக்காவைவிடச் சற்று சிறியது.

சஹாரா பாலைவனம் பூமியில் மிகவும் வெப்பமான இடங்களில் ஒன்று. கோடைகாலத்தில் சராசரி வெப்பநிலை 100.4 °F (38 °C) - 114.8 °F (46 °C) வரை இருக்கும். சில பகுதிகளில் வெப்பநிலை தொடர்ச்சியாகப் பல நாள்களுக்கு அதிகமாக இருக்கும்.

சஹாராவின் வெப்பநிலை எந்த ஓர் உயிரினமும் வாழ்வதற்கு கடினமான சூழலாக இருக்கிறது. இது சூடாகவும் வறண்டதாகவும் இருக்கும். பகலில் வெப்பம் அதிகமாக இருந்தாலும், இரவில் வெப்பநிலை வேகமாகக் குறையும். சில நேரம் உறைபனிக்குக் கீழே இருக்கும். சஹாராவில் அரிதாகவே மழை பொழியும். சில பகுதிகளில் ஒரு துளி மழையைப் பார்க்க, பல ஆண்டுகள்கூட ஆகும்.

சஹாரா பாலைவனம் பல்வேறு வகையான நிலப்பரப்புகளால் ஆனது. பெரும்பாலான பகுதி பாறைகளால் ஆனது. குன்றுகளும் மணல் குன்றுகளும் அதிகமாக இருக்கின்றன. சஹாராவில் உள்ள சில குன்றுகளின் உயரம் சுமார் 500 அடி. மணல், கடினமான சரளைக்கற்களால் மூடப்பட்ட சமவெளிப் பகுதிகளும் இருக்கின்றன. உப்பு அடுக்குகளால் ஆன பகுதிகளும் உள்ளன. பாலைவனச் சோலைகளும் இருக்கின்றன.

பாலைவனத்தில் வாழ்வது கடினம் என்றாலும், சஹாராவில் சில முக்கியமான நாகரிகங்கள் உருவாகியுள்ளன. சஹாரா முழுவதும் சுமார் 25 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். ஒட்டகத்தில் பயணம் செய்கின்றனர். சஹாராவில் அதிகம் பேசப்படும் மொழி அரபு.

‘சஹாரா’ என்றால் அரபு மொழியில் பாலைவனம் என்று அர்த்தம்.

முன்பொரு காலத்தில் சஹாரா, தாவரங்களும் விலங்குகளும் வாழ்ந்த பசுமையான பகுதியாக இருந்திருக்கிறது. சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வறண்டு போக ஆரம்பித்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x