Published : 16 Dec 2016 10:50 AM
Last Updated : 16 Dec 2016 10:50 AM

கோலிவுட் கிச்சடி: சூர்யா 2, விஜய் சேதுபதி 3

முதல்வரின் இறப்பு, ‘வார்தா’ புயல் ஆகிய சவால்களைக் கடந்து 14-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா ஜனவரி 5-ம் தேதி தொடங்கவிருக்கிறது. இதில் உலகப் படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பைப் போலவே தமிழ்ப் படங்களுக்கான போட்டியும் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒன்று. இந்த ஆண்டு போட்டிப் பிரிவில் பங்கேற்க விண்ணப்பித்த 20-க்கும் அதிமான படங்களிலிருந்து 12 படங்களைத் தேர்வு செய்திருக்கிறார்கள் விழாக் குழுவினர். அதில் சூர்யா நடித்து, தயாரித்த ‘24’, ‘பசங்க-2’ ஆகிய இரண்டு படங்கள் தேர்வாகியிருக்கின்றன.

இந்த இரண்டு படங்களோடு ராஜு முருகன் இயக்கத்தில் வெளியான ‘ஜோக்கர்’, அமலா பால் நடித்த ‘அம்மா கணக்கு’, பிரபு தேவா, தமன்னா நடித்த ‘தேவி’, விஜய் சேதுபதியின் நடிப்பில் சீனு ராமசாமி இயக்கிய ‘தர்மதுரை’, அறிமுக இயக்குநர் அர்விந்த் ராமலிங்கம் இயக்கிய ‘கர்மா’, கார்த்திக் சுப்புராஜின் ‘இறைவி’, விக்னேஷ் சிவனின் ‘நானும் ரௌடிதான்’, விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெற்ற அரசியல் த்ரில்லர் ‘உறியடி’, இன்னும் திரைக்கு வராத ‘ரூபாய்’, ‘சில சமயங்களில்’ ஆகிய படங்கள் அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

காடுகள் மீது ஆர்வம்

‘பேராண்மை’ படத்தில் மலைவாழ் பழங்குடியின இளைஞராக நடித்துப் பாராட்டுகளைப் பெற்ற ஜெயம் ரவி, தற்போது மீண்டும் காட்டின் மீது காதல் கொண்டிருக்கிறார். காட்டையும் இயற்கையையும் பாதுகாக்கும் காவலனாக ‘வன மகன்’ என்ற படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்காகக் காட்டைத் தனது கேமராவில் அள்ளி வரயிருப்பவர் எஸ். திருநாவுக்கரசு. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்தப் படத்தை இயக்குபவர் ஏ.எல். விஜய். ‘வன மக’னுக்கு முன்பே ஆர்யா காட்டின் நாயகனாகவும் யானைகளின் காவலனாகவும் நடித்து முடித்திருக்கும் ‘கடம்பன்’ படமும் முடிந்துவிட்டது. ‘மஞ்சப்பை’ படத்தை இயக்கிய ராகவா இயக்கத்தில் ஆர்யா நடித்திருக்கும் இந்தப் படத்தை ஆர்.பி.சௌத்ரி தயாரித்திருக்கிறார்.

வில்லனாக பரத்!

தெலுங்குப் படவுலகின் வசூல் மன்னன் என்று புகழப்படும் மகேஷ்பாபு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நேரடி தமிழ்ப் படத்தில் நடித்துவருகிறார். தெலுங்கிலும் தயாராகிவரும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் பரத் நடித்துவருகிறார் என்கிறது படக் குழு. இன்னும் கொஞ்சம் துருவியதில் பரத் ஏற்றிருப்பது மற்றொரு அதிரடியான வில்லன் வேடம் என்கிறார்கள். இந்தப் படத்தில் முதன்மை வில்லன் வேடத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துவருகிறாராம். மகேஷ்பாபுவுக்கு ஜோடி ரகுல் ப்ரீத் சிங்.

முன்பு மாணவர், இப்போது குரு!

ரசிகர்கள் சற்றும் எதிர்பாராத வகையில் தனது ‘அஞ்சாதே’ படத்தில் பாண்டியராஜனை வில்லனாக நடிக்க வைத்தார் மிஷ்கின். தற்போது அவருடைய குருவான பாக்யராஜையும் வில்லனாக்கியிருக்கிறார். விஷாலை நாயகனாகக் கொண்டு மிஷ்கின் இயக்கிவரும் ‘துப்பறிவாளன்’ படத்தில்தான் பாக்யராஜுக்கு இந்தப் புதிய அவதாரத்தை வழங்கி அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

அப்பாவிடம் அறிவுரை

போலீஸ் அதிகாரியான தன் தந்தையிடம் தனது அடுத்த படத்துக்காக ஆலோசனைகளைக் கேட்டு வருகிறார் விஷ்ணு. ‘முண்டாசுப்பட்டி’ புகழ் ராம் இயக்கும் அடுத்த படத்தில்தான் முதல் முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் விஷ்ணு. இந்தப் படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடி அமலா பால். இசை ஜிப்ரான்.

ஆக்‌ஷன் நாயகி ஆப்தே!

ரசிகர்கள் பெரிதும் மதிக்கும் இயக்குநர்கள் மிஷ்கின், ராம் இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘சவரக்கத்தி’ படம் தயாராகிவிட்டது. இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் ஜி.ஆர்.ஆதித்யா. முதல் படத்தின் வெளியீடு வரை காத்திருக்காமல் தனது அடுத்த படத்துக்குத் தயாராகிவிட்டார். முழுவதும் கதாநாயகியை மையப்படுத்தி உருவாகும் ஆக்‌ஷன் கதை. அதற்கு ராதிகா ஆப்தே சரியாக இருப்பார் என்று எண்ணி அவரிடம் கதை சொல்ல ஆப்தேவும் உடனே ஓ.கே. சொல்லி விட்டாராம்.

வேகமான தனுஷ்

செதுக்கிச் செதுக்கிப் படங்களை உருவாக்குபவர் செல்வராகவன். தற்போது அண்ணன் வழியில் நடித்துக் கொண்டே இயக்குநராகவும் மாறியிருக்கும் தனுஷ், ‘பவர் பாண்டி’ படத்தை முழு வீச்சில் இயக்கிவருகிறார். ராஜ்கிரண் நாயகனாக நடித்துவரும் இந்தப் படத்தில் தனுஷ், மடோனா செபஸ்டியன், பிரசன்னா, சாயா சிங் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர். மேலும், இயக்குநர் கெளதம் மேனனை இந்தப் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் தோன்றச் செய்திருக்கிறாராம். இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி ஏப்ரல் 14 என அதிகாரபூர்வமாக அறிவித்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் தனுஷ்.

துருவ நட்சத்திரமாக விக்ரம்

சூர்யா நடிக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தை விக்ரமிடம் சொல்லி ஓகே வாங்கிவிட்டாராம் கௌதம் மேனன். முழுவதும் அமெரிக்காவில் கதை நடப்பதால் இந்தப் படத்துக்காக இரண்டு மாத காலம் கால்ஷீட் கேட்டிருக்கிறார் கௌதம். தற்போது விக்ரம் நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் கௌதம் படத்தைத் தொடங்கிவிடலாம் என்று கூறியிருக்கிறாராம் விக்ரம்.=

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x