Last Updated : 08 Jul, 2014 04:00 PM

 

Published : 08 Jul 2014 04:00 PM
Last Updated : 08 Jul 2014 04:00 PM

காட்டுயிர் ஆராய்ச்சியில் தடம் பதித்த தமிழர்

முதுபெரும் இயற்கையியலாளரும் காட்டுயிர் பாதுகாவலருமான ஜே.சி.டேனியல் (84), ‘இந்தியப் பறவையியலின் தந்தை' சாலிம் அலிக்குப் பிறகு, புகழ்பெற்ற பம்பாய் இயற்கை வரலாற்று கழகத்தை (Bombay Natural History Society - BNHS) வழிநடத்தியவர், சர்வதேச அளவில் காட்டுயிர் ஆராய்ச்சியில் தடம் பதித்த தமிழர்.

நாகர்கோவிலில் பிறந்த ஜீவநாயகம் சிரில் டேனியல் (9 ஜூலை 1927 - ஆகஸ்ட் 23, 2011) என்ற முழு பெயர் கொண்ட அவர் ஜே.சி. என்று அறியப்பட்டார். இந்தியப் பறவைகள், பாலூட்டிகள், ஊர்வன குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொண்ட அவர், யானைகள், பெரியபூனை (புலி) குடும்ப உயிரினங்களைப் பாதுகாப்பதில் தீவிரம் காட்டினார்.

இளம் வயது ஆர்வம்

இரவில் நரிகள் ஊளையிடுவதும், ஆந்தைகளின் அலறலும் அவரது குழந்தைப் பருவத்தின் மறக்க முடியாத ஞாபகமாக இருந்துள்ளன. விலங்குகளின் மீதான அவருடைய தாயின் பாசமும், அவருடைய தந்தையின் கல்வித்துறை பாண்டித்யமும் திருவனந்தபுரம் பொது நூலகத்துக்குச் செல்ல அவரைத் தூண்டியுள்ளன. இளம் வயதில் இயற்கையைப் பற்றி அறிய வேண்டும் என்ற அவருடைய ஆவலுக்கு, அங்கிருந்த ஆப்பிரிக்கக் காட்டுயிர்கள் தொடர்பான நூல்கள் தீனி போட்டன.

இளைஞராக இருந்தபோது, உலகப் புகழ்பெற்ற பறவை நிபுணர் டாக்டர் சாலிம் அலியால் உத்வேகம் பெற்ற அவர், சாலிம் அலி பணிபுரிந்த பம்பாய் இயற்கை வரலாற்று கழகத்திலேயே சேர்ந்து பணிபுரிய ஆரம்பித்தார். அங்கு ஆராய்ச்சியாளராகப் பணியைத் தொடங்கிய அவர், தன் கடைசிக் காலம்வரை அந்த அமைப்புடன் பல்வேறு பணிகளைத் தொடர்ந்து செய்துவந்தார்.

1950லேயே அந்தக் கழகத்தின் காப்பாளராகப் பொறுப்பேற்ற அவர், அந்த நிறுவனத்தின் முதல் இயக்குநராகவும் பின்னர் மாறினார். 1991இல் ஓய்வு பெற்ற பிறகு, அந்தக் கழகத்தின் கௌரவச் உறுப்பினர், கௌரவச் செயலராகவும் இருந்துவந்தார்.

எழுத்துப் பணி

தி புக் ஆஃப் இந்தியன் ரெப்டைல்ஸ் (இந்திய ஊர்வன), எ செஞ்சுரி ஆஃப் நேச்சுரல் ஹிஸ்ட்ரி அண்ட் கன்சர்வேஷன் இன் டெவலப்பிங் கன்ட்ரீஸ் (வளரும் நாடுகளில் ஒரு நூற்றாண்டு இயற்கை வரலாறும் பாதுகாப்பும்), தி புக் ஆஃப் இந்தியன் ரெப்டைல்ஸ் அண்ட் ஆம்பிபியன்ஸ் (இந்திய ஊர்வன மற்றும் நீர்நில வாழ்விகள்), எ வீக் வித் எலிஃபன்ட்ஸ் (யானைகளுடன் ஒரு வாரம்), பேர்ட்ஸ் ஆஃப் இந்தியன் சப் கான்டினன்ட் எ ஃபீல்ட் கைடு (இந்தியத் துணைக்கண்டப் பறவைகள் கள வழிகாட்டி) உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார்.

சாலிம் அலியின் நூற்றாண்டு 1996-ல் கொண்டாடப்பட்டதை ஒட்டி, அவர் எழுதிய தி புக் ஆஃப் இந்தியன் பேர்ட்ஸ் (இந்தியப் பறவைகள்) புத்தகத்தைத் திருத்தி எழுதி 12வது பதிப்பை டேனியல் கொண்டுவந்தார்.

பம்பாய் இயற்கை வரலாற்று கழகத்தின் ஆய்விதழின் நிர்வாக ஆசிரியராக இருந்ததுடன், ஹார்ன்பில் என்ற பொது வாசகர்களுக்கான இதழையும் அவர் தொடங்கினார்.

இந்திய இயற்கையியல், காட்டுயிரியல் துறைக்கு அவரது பங்களிப்பு மிகப் பெரியது. அவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது நமக்குப் பெருமை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x