Published : 11 Dec 2016 12:48 PM
Last Updated : 11 Dec 2016 12:48 PM

வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம்: பத்திரிகை நடத்தலாம் வாங்க!

சிறு வயதில் பத்திரிகைகளில் கதை, கவிதை, துணுக்குகள் எழுதிவந்த நீங்கள், இடைப்பட்ட காலத்தில் அவற்றில் தொடர்பில்லாமல் இருந்துவிட்டீர்களா? இப்போது வாய்ப்பு கிடைக்கவில்லையா? இனி அந்தக் கவலையில்லை. தொழில்நுட்பத்தின் உச்சத்தில் இருக்கும் இன்று, யார் வேண்டுமானாலும் தங்கள் திறமையை வெளிப்படுத்த முடியும். எழுத்தாளராக, பத்திரிகையாளராக, பதிப்பாளராக நீங்களே உங்களை உருவாக்கிக்கொள்ள வாய்ப்புகள் அதிகம்.

வலைப்பூ (Blog) மூலம் நினைத்ததை எழுதலாம், உலகமெங்கும் பகிரலாம், பணமும் சம்பாதிக்கலாம். நீங்களாகவே இணையப் பத்திரிகை (E-Magazine) நடத்தலாம். புத்தகமும் வெளியிடலாம்.

பத்திரிகையில் பிரபலமாகும் வலைப்பூ எழுத்தாளர்கள்

>www.blogger.com, >www.wordpress.com போன்ற வெப்சைட்கள் மூலம் உங்கள் பெயரில் பிளாகை இலவசமாகவே உருவாக்கிக்கொள்ள முடியும். உதாரணம்: >http://padmakrish-kitchen.blogspot.in,

http://padmakrish-kitchen.wordpress.com. அதில் நீங்கள் ஓர் எழுத்தாளராக வலம் வரலாம். இப்போதெல்லாம் சமூக வலைதளங்களில் எழுதி வருபவர்களைப், பத்திரிகைகளில் பயன்படுத்திக்கொள்கிறார்கள். பல பிளாக் எழுத்தாளர்கள் பத்திரிகைகளில் எழுதிப் பிரபலமாகியிருக்கிறார்கள். மூன்றே வழிமுறைகளில் வலைப்பூவை உருவாக்கிவிட முடியும்.

1.பிளாகை உருவாக்கும் வெப்சைட்டுக்குள் சென்று, உங்கள் ஜிமெயில் முகவரி மூலம் சைன் இன் செய்துகொள்ள வேண்டும்.

2.பிளாகுக்குப் பெயர் கொடுக்க வேண்டும்.

3.பிளாகை வடிவமைக்கத் தேவையான டெம்ப்ளேட்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

அவ்வளவுதான். உங்களுக்கான பிளாக் தயார். இனி பிளாகை வடிவமைக்க வேண்டியதுதான் உங்கள் வேலை. அதுவும் சுலபமானதே.

வடிவமைத்த பிறகு உங்கள் திறமைக்கும் ஆர்வத்துக்கும் ஏற்ப பிளாகில் தினமும் எழுதத் தொடங்குங்கள். உங்கள் பிளாகை வெப்சைட், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் இலவசமாகவே விளம்பரப்படுத்தலாம். தொடர்ந்து எழுதஎழுத, நாளடைவில் சிறந்த எழுத்தாளராகப் பரிமளிக்கத் தொடங்குவீர்கள். பத்திரிகைகள் கண்களில் உங்கள் எழுத்துகள் பட ஆரம்பிக்கும்போது அவற்றில் எழுதவும் வாய்ப்பு கிடைக்கும்.

இ-பத்திரிகை நடத்துவது எப்படி?

இலவசமாகக் கிடைக்கிற பிளாகைக் கொஞ்சம் செலவுசெய்து, வெப்சைட்டாக மாற்றிக்கொண்டால் ஆன்லைனில் முழுமையான பத்திரிகையே (E-Magazine) நடத்தலாம். வெப்சைட்டைப் பொறுத்தவரை பெயருக்கும் தேவையான இடத்துக்கும் மட்டும் வருடந்தோறும் கட்டணம் செலுத்த வேண்டும்.

உதாரணத்துக்கு http://padmakrish-kitchen.wordpress.com என்பது உங்கள் பிளாகாக இருந்தால், http://padmakrish-kitchen.com என்ற பெயரில் இணையதளமாக (Website) மாற்றி, ஆன்லைன் பத்திரிகையாகக் கொண்டுவரலாம். அதாவது, நீங்கள் தற்சமயம் இலவசமாகப் பராமரித்துவரும் பிளாகை, கட்டணம் செலுத்தி அப்படியே வெப்சைட்டாக மாற்றிக்கொண்டு, வழக்கம்போல எழுதிவரலாம். தனிநபர் பதிவாக பிளாகில் எழுதுவதைவிட, வெப்சைட்டில் ஆன்லைன் பத்திரிகையில் எழுதும்போது படைப்புகளின் தரம் மேம்பட்டதாக இருக்க வேண்டும்.

வெப்சைட்டாக மாற்றாமலேயே பிளாகிலும் பத்திரிகையை நடத்தலாம். ஆனால் இணையதளமாக இருந்தால் மேலும் தொழில்முறை சார்ந்த தோற்றமும் அதற்கேற்ற மதிப்பும் கிடைக்கும். ஆனால், உங்களுக்கான அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் அது பெற்றுத்தரும்.

பிளாக் எழுத்தாளர்களை ஒருங்கிணைத்து நட்பு வட்டத்தை உருவாக்கிக்கொண்டு, அவர்களை உங்கள் பத்திரிகையில் எழுத வைக்கலாம். முடிந்தால் முன்னணி எழுத்தாளர்களைத் தொடர்புகொண்டு, அவர்களின் எழுத்துகளையும் வெளியிடலாம்.

புத்தகத்தைப் படிப்பதைப் போலவே ஆன்லைனிலும் ஒவ்வொரு பக்கமாகத் திருப்பிப் படிக்கும் ஃப்ளிப் புத்தகங்களை (Flip Book) உருவாக்குவதற்கு ஏராளமான ரெடிமேட் புரோகிராம் தொகுப்புகள் (Plugin) உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி பிளாகில் நீங்கள் வெளியிடும் தகவல்களை அப்படியே ஃப்ளிப் புத்தகமாகவும் வெளியிடலாம்.

எழுத்தாளராக ஆசைப்பட்ட நீங்கள், பத்திரிகையே நடத்தும் அளவுக்கு உங்களுக்கு உதவ தொழில்நுட்பம் காத்திருக்கிறது. ‘தி இந்து’தமிழ் செய்தித்தாள் அச்சு வடிவிலும் கிடைக்கிறது. ஆன்லைன் செய்தித்தாளாகவும் அதைப் படிக்க முடிகிறதல்லவா? கூகுளில் List of Tamil E-Magazines in India என்று டைப் செய்து தேடினால், அச்சு வடிவில் வெளிவருகிற பத்திரிகைகள் நடத்தும் இ-பத்திரிகைகளுடன் தனிநபர்கள் நடத்தும் இ-பத்திரிகைகளின் பெயர்களும் பட்டியலிடப்படும்.

இ-பத்திரிகை மூலம் சம்பாத்தியம் பெறுவது எப்படி?

இணையத்தில் நீங்கள் நடத்துகிற பத்திரிகையில் பல நிறுவனங்களிடமிருந்து விளம்பரத்தையும் பெற முடியும். உங்கள் தளத்தில் எங்கெங்கெல்லாம் விளம்பரம் வரலாம் என முடிவு செய்து, இடத்தை ஒதுக்கி, ‘இந்த இடம் விளம்பரத்துக்கானது. கட்டணம் இவ்வளவு ரூபாய்’என்று அங்கேயே அறிவிக்கலாம். விளம்பரம் கொடுக்க நினைக்கும் நிறுவனங்கள் உங்களை அணுகலாம். மேலும் நீங்களும் மார்க்கெட்டிங் செய்து விளம்பரம் பெறலாம். இதன் மூலம் நீங்கள் நடத்தும் இ-பத்திரிகையில் வருமானம் பெற முடியும்.

உங்கள் இ-பத்திரிகையில் வெளிவரும் படைப்புகள் தரமானதாக இருந்தால் மட்டுமே நிறைய வாசகர்களைப் பெற முடியும். உங்கள் வெப்சைட்டை எத்தனை பேர் பார்த்துள்ளார்கள் என்று கணக்கிடவும் தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. அதற்கேற்ப விளம்பரங்கள் கிடைக்கும். மேலும் கூகுள் ஆட்வேர்ட், ஆட்சென்ஸ் மூலமும் வருமானம் பெறலாம்.

உங்கள் ஆன்லைன் பத்திரிகைக்கு நிறைய வாசகர்கள் கிடைக்கத் தரமான செய்திகள் மட்டும் போதாது. பத்திரிகைக்கே விளம்பரம் தேவை. அதில் மற்றவர்களின் விளம்பரத்தைப் பெற, முதலில் உங்கள் இ-பத்திரிகையை விளம்பரப்படுத்துங்கள். சமூக வலைதளங்கள் மூலம் இலவசமாகவே பிரபலப்படுத்துங்கள்.

வலைப்பூ பதிவுகளைப் புத்தகமாக வெளியிடுவது எப்படி?

உங்கள் பிளாகில் நீங்கள் பதிவு செய்கிற தகவல்களைத் தொகுத்து அப்படியே இ-புத்தகமாக வெளியிடவும் முடியும். அதாவது டெஸ்க்டாப் கம்ப்யூட்டர், லேப்டாப், ஐபோன், ஐபேட், ஆண்ட்ராய்ட் போன், டேப்லெட், கிண்டில் எனப் பல்வேறு கருவிகளில் படிக்கும்படி இ-புத்தகமாக வெளியிட முடியும்.

(அடுத்த வாரம் இ-புத்தகத்தில் சம்பாதிக்கும் வழியைப் பார்ப்போம்)
கட்டுரையாளர், மென்பொருள் நிறுவன நிர்வாக அதிகாரி
தொடர்புக்கு: compcare@hotmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x