Published : 20 Dec 2022 11:03 AM
Last Updated : 20 Dec 2022 11:03 AM

வசனத்துக்கான இடம் இதுதான்! | கே.ஜி.எஃப் - விஜயானந்த் படங்களின் வசனகர்த்தா மதுரகவி பேட்டி

செந்தமிழ் வசனம் பேசிய கதை மாந்தர்களை ஐம்பதுகளின் தமிழ் சினிமாவில் காணலாம். அதன்பின்னர், அடுக்கு மொழியில் நீட்டி முழக்கும் அரசியல் கலந்த வசனங்கள் ரசிக்கப்பட்டன. அவை மொழி முழக்கங்களாக இருந்தன. அது திராவிட சினிமாவின் காலம். அதன்பிறகு வசனம் யதார்த்தமான மொழிக்கு மாறியது. கதாபாத்திரங்கள் தேவைப்படும் இடத்தில் பேசும் வசனங்கள் வாழ்க்கையிலிருந்து பிறப்பவையாக இருந்தன. அவற்றில் சொற்களின் எண்ணிக்கைக் குறைந்து கூர்மையானதாக மாறியது. பிறகு நவீனம் என்கிற பெயரில் புரியாத வசனங்கள் வந்தன. சினிமா என்பது காட்சி ஊடகம் என்ற போதிலும் எத்தனை பெரிய இயக்குநராக இருந்தாலும் கதாபாத்திரங்கள் கதையின் நகர்வுகளை வசனங்கள் வழியேதான் சில இடங்களில் நகர்த்த முடியும் என்பதில் அழமான நம்பிக்கைக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக ‘பயோபிக்’ படங்களில் வசனங்களின் பங்கு மகத்தானது. கன்னடத்தில் தயாராகி, தமிழ் உள்ளிட்ட பிறமொழிகளிலும் அண்மையில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம் 'விஜயானந்த்'. கர்நாடகத்தின் முன்னோடித் தொழிலதிபர் விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றைப் பேசும் அப்படத்தின் தமிழ் வசனங்களை எழுதியதுடன் அதன் பாடல்களையும் எழுதியவர் மதுரகவி. மொழி மாற்றுப் படம் என்பதே தெரியாமல் தமிழ் வசனங்களை எழுதியதாக விமர்சகர்களால் பாராட்டப்பட்ட அவர், தமிழ் சினிமாவில் கடந்த 23 வருடமாகப் பல்வேறு தளங்களில் இயங்கி வந்தாலும் அவர் புகழ் மறைவுப் பிரதேசத்தில் தான் இருக்கிறார். அவரை அண்மையில் சந்தித்து உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:

உங்களைக் கொஞ்சம் அறிமுகம் செய்துகொள்ளுங்கள்..

எனக்கு பூர்வீகம் தேனி. தற்போது வசிப்பது வத்தலக்குண்டு அருகே தேவரப்பன்பட்டி கிராமம். என் பெயர் சிவமுருகன். மகாகவி காளிதாசனின் கவித்துவத்தில் மனம் லயித்து என் பெயரை மதுரகவி என்று வைத்துக் கொண்டேன். ஏனென்றால் காளிதாசனுக்கு மதுரகவி என்றொரு பட்டம் உண்டு. நான் சின்ன வயதிலேயே சினிமா ஆர்வத்துடன் சென்னை வந்தவன். நான் அடிப்படையில் ஓர் உதவி இயக்குநர் தான். சில படங்களில் பணியாற்றி இருக்கிறேன். பல்வேறு திரைப்படங்களின் கதை விவாதங்களில் கலந்து கொள்வேன். எனக்குக் கிராமத்து மண் சார்ந்த விஷயங்கள் மிகவும் பிடிக்கும் . அது சார்ந்த படங்கள் நேரடிப்படமாக இருந்தாலும் மொழிமாற்றுப் படங்களாக இருந்தாலும் அவர்கள் சொல்லும் கதையைச் செழுமைப்படுத்துவேன். வசனங்கள் எழுதுவேன். டப்பிங் துறையில் பயிற்சி பெற்றேன். படங்களில் வரும் கதாபாத்திரங்களுக்குக் குரல் கொடுத்தேன். டப்பிங் பணிகளுக்கு உதவினேன். இப்படி எப்போதும் இயங்கிக் கொண்டே இருந்தேன். எனக்கு கதை, வசனம், கவிதைகள் எழுத வரும். 2006ஆம் ஆண்டு ‘கனவுத் தொழிற்சாலை’ என்ற குறும் படத்துக்கு வசனம் எழுதி கதைநாயகனாகவும் நடித்தேன்.

மதுரகவி
​​​​​​

இரு பத்தாண்டுகளை சினிமாவில் செலவழித்திருக்கிறீர்கள். இப்போதுதான் உங்கள் பெயர் வெளியே வந்திருக்கிறது. இடைப்பட்ட காலத்தில் சினிமா விட்டுப் போய்விடலாம் என்று நினைத்திருக்கிறீர்களா?

இல்லவே இல்லை. நான் சென்னை வந்த போது என் முன் இரண்டு நிபந்தனைகள் இருந்தன. நாம் கொண்ட கொள்கையில் உறுதியாக நின்று சினிமாக் கனவு நிறைவேறும் வரை குடும்பத்தைச் சிரமத்தில் வைத்து குடும்பத்தை வாட வைப்பது ஒன்று. இன்னொன்று சினிமாவில் கிடைக்கும் வாய்ப்புக் கயிற்றைப் பற்றிக் கொண்டு மேலேறி வருமானத்திற்கு வழி செய்து கொள்வது. அதன்மூலம் குடும்பத்தை வாடாமல் பார்த்துக் கொண்டிருப்பது. நான் இதில் இரண்டாவதைத் தேர்வு செய்து அந்த வழியில் பயணப்படத் தொடங்கினேன். திரையுலகில் நான் பலரையும் பார்த்திருக்கிறேன். பல திறமைசாலிகள் வறுமையில் வாடிக் கொண்டிருப்பார்கள். அவர்களின் பிடிவாத குணத்தால் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருப்பார்கள். எனவேதான் நான் இரண்டாவது வாய்ப்பைத் தேர்வு செய்து கொண்டேன். அதனால் நான் திரையுலகில் நுழைந்தது முதல் இன்று வரை வறுமையில் வாடியதில்லை. என் குடும்பத்தைச் சங்கடப்படுத்தியதில்லை. பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்ததே இல்லை. மிகப்பெரிய குடும்பத்தைக் காப்பாற்றியும் வருகிறேன். சினிமா எனக்கு அன்று முதல் இன்று வரை சோறு போட்டுள்ளது; வசதிகளை வழங்கி உள்ளது.

சினிமாவில் உள்ள பல துறைகளின் அறிவு எழுத்தை அடிப்படையாகக் கொண்ட கலைஞர்களுக்குத் தேவைதான் என்றாலும் வயிற்றுப்பாட்டுக்காக அதே துறையில் வேறு வேலைகள் செய்வது உங்கள் கனவை சிதைக்காதா?

நான் கதை விவாதங்கள், திரைப்படங்களுக்கு வசனம், வாய்ப்புள்ள போது பாடலும் எழுதினேன். ஒரே துறையில் தீவிரமாக இயங்க முடியவில்லை என்கிற நிலை இருந்தாலும் நான் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். நூறு தனி ஆல்பங்களுக்கான பாடல்கள் எழுதியுள்ளேன். டப்பிங் பணிகளில் ஒருங்கிணைப்பாளராக இருந்துள்ளேன். நான் டப்பிங் பேசி இருக்கிறேன். இப்படி பல விதமான தொழில்கள் எனக்கு கை வந்த கலையாக இருப்பதால் அதிலேயே நான் பரபரப்பாக இயங்கி வருகிறேன். எனவே ஒரு துறையில் போவது பற்றி எண்ணமே எனக்கு வரவில்லை. இதனால் ஒரு நாளும் பொருளாதாரப் பிரச்சினைகள் இருந்ததில்லை. இத்தனை ஆண்டு காலம் ஒரே துறையில் போயிருந்தால் பெரிதாக வெற்றி பெற்றிருக்கலாம், அல்லது தோல்வி அடைந்திருக்கலாம். ஆனால் உத்திரவாதமான வருமானம் வந்திருக்குமா என்றால் தெரியாது. திரையுலகம் தருகிற வாய்ப்புகளைப் பற்றிக்கொண்டு அதைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். பலருக்கும் பயனுள்ளவனாக இருந்திருக்கிறேன். குடும்பத்தைச் சங்கடப்படுத்தாமல் திருப்தியாக வைத்துக் கொண்டிருக்கிறேன். அந்த ஒரு மகிழ்ச்சி எனக்கு இருக்கிறது. திரையுலகில் இரண்டு வாய்ப்புகள் உண்டு, பத்து பேருக்கு நாம் பயன்பட வேண்டும் அல்லது பத்து பேரை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் நான் முதல் வாய்ப்பை எடுத்துக் கொண்டேன். பத்து பேரை நான் பயன்படுத்திக் கொள்ளும் அளவிற்குத் தனியாக நான் வளரவில்லை.பலரும் என்னைப் பயன்படுத்திக் கொண்டார்கள். அதனால் தான் நான் தேவைப்படும் அளவிற்கு என்னுடைய தகுதியை வளர்த்துக் கொண்டேன். உழைப்புதான் முதல் தகுதி என்று நினைக்கிறேன். அதிலிருந்து அனுபவங்கள் கிடைத்தன அதிலிருந்து எனக்கு சில வளர்ச்சி நிலைகளும் வந்தன. இப்போது கனவு கைக்கெட்டும் தூரத்தில் இருக்கிறது.

‘கே.ஜி.எஃப்’ முதல் பாகத்துக்கு தமிழ் வசன கர்த்தாவாக இருந்தீர்களா?

ஆமாம்! கேஜிஎஃப் முதல் பாகத்துக்குப் பாடல்களும் எழுதினேன். வசனத்தில் வசனகர்த்தா அசோக்குடன் இணைந்து பணியாற்றினேன். சில கதாபாத்திரங்களுக்குக் குரல் கொடுத்தேன். ‘கே ஜி எஃப் -2’படத்திலும் எனது பங்களிப்பு இருந்தது. இதுவரை இருபது படங்களுக்கு உதவி வசனம் எழுதி இருப்பேன். 35 படங்களுக்குப் பாடல்கள் எழுதி இருப்பேன். பல படங்களில் பின்னணி வசனங்கள் ஒலிப்பதிவு என இணைந்து பணியாற்றி இருக்கிறேன். தொலைக்காட்சித் தொடர்களில் பணியாற்றியும் உள்ளேன். ஒரு வாரத் தொலைக்காட்சித் தொடரையும் இயக்கி உள்ளேன். விளம்பரப் படங்களில் பணியாற்றியும் இயக்கியும் இருக்கிறேன்.பெரும்பான்மையான பணிகளில் எனக்குப் பெயர் வெளியே தெரியாத அளவிற்கு இணைந்து பணியாற்றி இருக்கிறேன். ஆனால் எனக்கு உரிய மதிப்பையும் சம்பளத்தையும் வழங்கி விடுவார்கள்.

'விஜயானந்த்'பட வாய்ப்பு எப்படி அமைந்தது?

நான் தமிழ்ப் படங்கள் மட்டும் இல்லாமல் மொழி மாற்றுப்படங்கள் குறிப்பாக பான் இந்தியா படங்களிலும் பணியாற்றி இருக்கிறேன். இந்தப் படத்திற்கான வாய்ப்பு வந்தபோது தமிழில் மொழிமாற்றுப் படமாக செய்யும் போது அதை ஏதோ ஒலிமாற்றம் செய்வது போல் இல்லாமல் கதை,பாத்திரங்களின் தன்மை ஆகியவற்றின் முழு சாரத்தையும் அப்படியே தமிழுக்கு மாற்றும் படி உருவாக்க வேண்டும் என்று இயக்குநர் ரிஷிகா சர்மா விரும்பினார். வேறு மொழிகளுக்கு மொழி மாற்றம் செய்யப்படும் படங்களுக்கு இவ்வளவு மெனக்கெடுவதில்லை. ஆனால் தமிழ்மொழிக்கு மட்டும் சரியாக அமைய வேண்டும் என்று பான் இந்தியா படங்கள் எடுப்பவர்கள் நினைக்கிறார்கள். அந்த அளவிற்கு நமது தமிழ் மொழியை முக்கியமானதாகக் கருதுகிறார்கள்.அதன்படி தான் இதில் நான் பணியாற்றினேன். இதில் உள்ள வசனங்கள் எல்லாம் அந்தந்த காட்சிகளுக்கும் பாத்திரங்களின் தன்மைக்கும் ஏற்ற மாதிரி வட்டார வழக்குகளுடன் அமைந்துள்ளன என்று பலரும் பாராட்டுகிறார்கள். அதற்கான இடத்தை அளித்தது இயக்குநர்தான். இதில் இருக்கும் நான் எழுதிய 'காளிதாசன் சாகுந்தலா 'பாடல் எனக்கு மிகவும் பிடித்தது .அதை பலரும் பாராட்டுகிறார்கள். குறிப்பாகக் கன்னடத் திரை உலகத்தினர் விரும்பிப் பாராட்டினார்கள்.படத்தின் கதாநாயகி கூட அதைப் பிடித்திருப்பதாகப் பாராட்டினார். தமிழ் மொழி தெரியாதவர்கள் கூட அதன் சாரம் அறிந்து கேட்டுப் பாராட்டுகிறார்கள். சொன்னால் நம்ப மாட்டார்கள். கன்னடத்தில் உள்ளவர்கள் தமிழ் மொழியை மிகவும் மதிக்கிறார்கள். தமிழ்மொழியின் ஆழத்தை மிகவும் ரசிக்கிறார்கள். விஜயானந்த் படத்தின் மலையாள டப்பிங் ஒருங்கிணைப்பையும் நான் தான் பார்த்துக் கொண்டேன். அதற்கான ஆட்களை வைத்து தமிழில் உள்ளது போல் வசனங்கள் சிறப்பாக வருவதற்கு நான் உதவி செய்தேன்.

'விஜயானந்த் ' படத்தில் நீங்கள் எழுதியதில் பிடித்த வசனங்கள் ?

"நடு முதுகுத் தண்டு வளைய உழைப்பவனோட நடு வீட்டுல லட்சுமி வாசம் செய்வா!"

"எவ்வளவு பெரிய பிஸ்னஸ் மேனும்
உழைக்காம உட்காந்துட்டா ஒரு பிச்சைக்காரன் தான்!"

"நான் மலையேறுறது நான் இந்த உலகத்த பாக்கணுங்குறதுக்காக.,
இந்த உலகம் என்னப் பாக்கணுங்குறதுக்காக இல்ல!"

"வரலாறுகளப் புரட்டுனா
ஞாபகத்துல நிக்கிறது
அற்புதமான வெற்றியும்
ஆகப்பெரும் தோல்வியும்தான்.
ஆனா
அதிர்ஷ்டத்தாலயும்
நல்ல வழிகாட்டியோட ஒத்துழைப்பாலயும் நாம
சில படிகள் ஏறுனாலும்
சிகரம் ஏறணும்னா
நேர்மையும் கடினமான உழைப்பும் தான் தேவைப்படுது".

தற்கால தமிழ் சினிமாவில் வசனகர்த்தாவுக்கான இடம் என்ன? ஒரு வெற்றிகரமான வசனகர்த்தாவுக்கான அடிப்படைத் தகுதி என்ன?

வசனங்கள் பேசப்பட்டு பல காலங்கள் ஆகிவிட்டன. அந்த வெற்றிடங்களை நிரப்ப ஆக்கப்பூர்வமான அனுபவ சாலிகள் நம் துறைக்கு அதிகம் தேவை. கதையின், கதாபாத்திரங்களின், மொழிக்குப் பொருத்தமாக எழுதக்கூடிய வசனகர்த்தா இன்றைக்கும் தேவை. அதற்கு தகுதியானவர்களுக்கு இங்கே நிச்சயமாக இடம் உண்டு. அந்த இடத்துக்கு உரிய மரியாதையும இங்கே கிடைக்கும். வெற்றிகரமான வசன கர்த்தா ஆக இயற்கையாகவே யதார்த்தவாதியாகவும், நல்லது கெட்டதைக் களைந்தெடுத்து மக்கள் மனதை வளப்படுத்த வேண்டும். முக்கியமாக சமூக அக்கறை வேண்டும். கதை கடவுள் பற்றியதாக இருந்தாலும், கடவுள் அற்றதாக இருந்தாலும், மக்கள் மனதுடன் நேருக்கு நேர் பேச வேண்டும்.

உங்கள் வேலை முறையைப் பகிர்ந்துகொள்ள முடியுமா?

எனக்கு இசைத்துறையில் அடித்தளம் இட்டவர் ஜீவன். நான் இயக்குநர்கள் ‘வேலை’ சுரேஷ், ‘எத்தன்’ சுரேஷ், பால்கி, சரவணன், விஜய சேகர், குமரப்பா, ஆ.கருப்பையா போன்றவர்களிடம் இயக்குநர் துறையில் பணியாற்றி இருக்கிறேன். அந்த நட்பு வட்டம் பெருகி நிறைய நண்பர்களை அடைந்து இருக்கிறேன். எந்தப் படத்தையும் என் சொந்தப் படம் போல் தான் நினைத்து உழைப்பேன். அதற்கு என்னுடைய அதிகபட்ச உழைப்பைக் கொடுப்பேன். என்னால் முடிந்தளவு பிற துறைகளிலும் எனது ஆலோசனைகளை வழங்குவேன். வேலைகளை எளிதாக்க உதவுவேன். உதாரணத்துக்கு விஜயானந்த் படத்தில் காபாத்திரங்களுக்கு டப்பிங் பேச வருபவர்களுக்கு நானே ஒரு சவுண்ட் ட்ராக் பேசி பதிவு செய்து கொடுத்திருந்தேன். அதைக் கேட்டு விட்டு டப்பிங் பேச வந்தவர்களுக்கு வேலை மிகவும் சுலபமாகி விட்டது. பேச்சுத் தொனி எப்படி இருக்க வேண்டும் என்று தானாகவே புரிந்து கொண்டு அவர்களாகவே பேசி ரீடேக் வாங்காமல் விரைவிலேயே முடித்துக் கொடுத்தார்கள். இப்படி எந்தப் பணியையும் சுலபமாக்குவது என்னுடைய வழக்கம். அதனால் என்னை விட மாட்டார்கள். நான் எப்போதும் நேர்நிலையாகச் சிந்திப்பவன். மனம் தளர்ந்து பேசுபவர்களிடமும் அவநம்பிக்கை கொள்பவர்களிடம் நான் நம்பிக்கையாகத்தான் பேசுவேன் .அது எனக்கு நல்ல வழிகளைக் காட்டியுள்ளது. என்னிடம் பேசினால் போதும் நம்பிக்கை வந்துவிடும் என்று சொல்வார்கள். இதில் மூடநம்பிக்கை என்றெல்லாம் ஒன்றுமில்லை. இயற்கையாகவே நம்பிக்கையுடன் ஒரு காரியத்தைச் செய்யும்போது அதில் வெற்றி கிடைக்கும். மதுரகவியிடம் ஒரு பொறுப்பைக் கொடுத்தால் சிறப்பாகச் செய்வார் என்கிற நல்ல பெயர் எடுத்துள்ளேன். இப்படி என்னைப் புரிந்து கொண்ட நூற்றுக்கணக்கானவர்கள் திரையுலகில் எனக்கு நண்பர்களாக இருக்கிறார்கள். அவர்கள் மூலம் ஒருவர் மூலம் ஒருவராகத் தான் எனக்கு வாய்ப்புகள் வருகின்றன.

இவ்வளவு செய்தும் ஒரு முகம் தெரியாத மனிதராகவே இருக்கிறீர்களே?

அதைப் பற்றி நான் சிந்திக்கவே இல்லை .வேலை வேலை என்று ஓய்வு இல்லாமல் போய்க்கொண்டே இருப்பதால் அதைப் பற்றி நான் யோசிக்க நேரமில்லை. என் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறேன். சரியான உழைப்புக்குப் பலன் உண்டு என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு. நான் எப்போதுமே அவ நம்பிக்கை கொள்பவன் அல்ல. அதிர்ஷ்டத்தை நம்பாமல் உழைப்பை நம்புகிறவன். அதன்படி என் வாழ்க்கைப் பாதை போய்க்கொண்டே இருக்கிறது. எனக்கான காலம் வரும் போது எனக்கு ஓர் அங்கீகாரம் கிடைக்கும் என்று நம்புகிறேன். கோபி நயினார் எனது ஆரம்பகால நண்பர் தான். அவர் அறம் படம் எடுத்த போது அவரது வயது 60. இருந்திருக்கலாம்.அதற்குப் பிறகு அவர் பேசப்படவில்லையா..? அப்படி தாமதம் ஆனாலும் நான் தனித்துத் தெரியும் காலம் ஒரு நாள் வரும் என்று நம்புகிறேன். ஏனென்றால் நம்பிக்கை தானே வாழ்க்கை?

இப்போது பணியாற்றும் படங்கள்?

ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'ருத்ரன்' படத்தில் பாடல் எழுதி உள்ளேன். விஷால் நடிக்கும் 'மார்க் ஆண்டனி ' படம். இவை தவிர மேலும் இரண்டு புதிய தமிழ்ப் படங்களில் பணியாற்றுகிறேன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x