Published : 20 Dec 2016 05:19 PM
Last Updated : 20 Dec 2016 05:19 PM
பள்ளிக்குக் கிளம்பும்போது மழை வந்தால் உங்கள் அம்மா என்ன செய்வார்? குடையைக் கொடுத்து அனுப்புவார். இல்லாவிட்டால் ரெயின் கோட்டை மாட்டிவிட்டு அனுப்பி வைப்பார் அல்லவா? மழைத் துளிகளில் இருந்து நம்மைக் காக்கும் இந்த ரெயின் கோட் எப்படி வந்தது?
ரெயின் கோட் கண்டுபிடிப்புக்கு முன்னோடியாக இருந்தவர் ஃபிரான்சுவா ஃப்ரெஷ்நியூ என்ற பிரெஞ்சு இன்ஜினியர் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால், நீர் புகாத துணியைக் கண்டுபிடித்து, பெரிய அளவில் ரெயின் கோட் உற்பத்தியைத் தொடங்கியவர் சார்லஸ் மேக்கின்டாஷ் என்ற ஆங்கிலேயர். இவர் ரெயின் கோட்டை எப்படித் தயாரித்தார் தெரியுமா?
இரண்டு காட்டன் துணிகளுக்கு நடுவே ஒரு மெல்லிய ரப்பரை வைத்துத் தைத்தார். அந்த ரப்பரை மென்மையாக்கக் கொஞ்சம் டர்பன்டைனையும் கலந்தார். பின்னர் ரெயின் கோட்டாகத் தைக்க டெய்லரிடம் கொடுத்தார். டெய்லர் தைத்துக் கொடுத்தவுடன் சட்டை போல ரெயின் கோட் தயாராகிவிட்டது. இதுவே மேக்ஸ் என்றழைக்கப்படும் மேக்கின்டாஷ் ரெயின் கோட்டின் வரலாறு. மேக்கின்டாஷ் உடைகள், மழையில் இருந்து உடலைக் காத்தன. ஆனால், மழை நின்று வெயில் அடித்தால் அவ்வளவுதான். உள்ளே வியர்த்துக் கொட்டும். ரப்பர் இளகி உடலோடு ஒட்டிக்கொள்ளும். ரப்பரின் வாசனையும் பாடாய்ப் படுத்தும்.
ரப்பரைக் கண்டுபிடித்த சார்லஸ் குட்இயர்தான் இந்தப் பிரச்சினையைப் பல ஆண்டுகள் கழித்துத் தீர்த்து வைத்தார். இன்று தயாரிக்கப்படும் பெரும்பாலான மழை உடைகள் வேதிப் பொருட்கள் கலந்தவைதான். இந்தக் காலத்தில் கோட் தயாரிக்கச் செயற்கை ரப்பரும் பயன்படுகிறது.
தகவல் திரட்டியவர்: எல். லோகநாதன், 8-ம் வகுப்பு,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, முசரவாக்கம், காஞ்சிபுரம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT