Published : 07 Dec 2016 11:50 AM
Last Updated : 07 Dec 2016 11:50 AM

காரணம் ஆயிரம்: பறவையால் விமானம் நொறுங்குமா?

பறவைகள் என்றாலே இறக்கைகளை விரித்துப் பறக்கும் அழகுதான் உங்களுக்கு முதலில் ஞாபகத்துக்கு வரும். பறவைபோலப் பறந்தால் எப்படி இருக்கும் என்றுகூடக் கற்பனை செய்து பார்த்திருப்பீர்கள். இப்படி மென்மையான பறவை, பிரம்மாண்டமான விமானத்தையே வீழ்த்திவிடுகிறது என்பது எத்தனை விசித்திரம்.

பறவை மோதி விமானம் நொறுங்கியது என்கிற செய்தியை நீங்கள் படித்திருக்கிறீர்களா? அப்போதெல்லாம் உங்களுக்கு நிச்சயம் வியப்பு ஏற்பட்டிருக்கும். மென்மையான ஒரு பறவை மோதி வலிமையான விமானம் சிதைந்து விடுமா என்று யோசித்திருப்பீர்கள். இந்த ஆச்சரியத்தின் காரணத்தை அறிந்துகொள்வதற்கு முன்பு இன்னொரு ஆச்சரியமான விஷயத்தையும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

வேகம்

துப்பாக்கி முனையிலிருந்து வெளிவரும் தோட்டாவை யாராவது கையால் பிடிக்க முடியுமா? அதெப்படி முடியும்? சினிமாவில் வேண்டுமானால் அது நடக்கலாம். ஆனால், நிஜத்தில் அதெல்லாம் நிகழ வாய்ப்பே இல்லை என்றுதானே நினைக்கிறீர்கள்? நிச்சயமாகத் துப்பாக்கியிலிருந்து வெளிவரும் குண்டுகளைக் கைகளால் பிடிக்க முடியும்.

துப்பாக்கியிலிருந்து வெளிவரும் தோட்டா, மணிக்குச் சுமாராக 1,500 கிலோ மீட்டர் வேகத்தில் சீறிப் பாயும். அப்போது அதைத் தடுக்கவோ, பிடிக்கவோ முடியாது. ஆனால், அந்தத் தோட்டா எதன் மீதும் படாமல் நேராகப் பயணிக்கும்போது, ஒரு கட்டத்தில் மணிக்கு 2 கிலோ மீட்டர் வேகத்துக்குக் குறைந்துவிடும். அப்போது நடந்துபோகும் ஒருவர் தோட்டாவைப் பிடித்துவிட முடியும்.

நடந்து போகும் ஒருவரின் வேகமும், கிட்டதட்ட பயணத்தின் முடிவில் இருக்கும் தோட்டாவின் வேகமும் சமமாக இருப்பதால் இருவருக்குமான இயற்பியல் நிலை என்பது இயக்கமற்ற நிலையாகவே இருக்கும். எனவே, கீழே கிடக்கும் பொருளை எடுப்பது போல் தோட்டாவைப் பிடித்துவிட முடியும்.

உதாரணம்

கிரிக்கெட் விளையாட்டில் பேட்ஸ்மேன் அருகில் நிற்கும் வீரர் ஹெல்மெட் அணிந்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். ஏனென்றால் பேட்ஸ்மேனால் விளாசப்படும் பந்து மிக வேகமாக வரும். சில சமயம் ஹெல்மெட்டைக்கூட அந்தப் பந்து உடைத்துவிடும். பேட்ஸ்மேன் அருகில் நிற்கும் ஃபீல்டர் பந்தைப் பிடிப்பது மிகவும் சிரமம். ஆனால், அதே பந்தை எல்லைக் கோட்டின் அருகில் நிற்கும் ஃபீல்டர் எளிதாகப் பிடித்துவிடுவார். தவறிப் பந்து அவர் மேல் விழுந்தால்கூடப் பெரிய காயம் ஏற்படாது. ஏனெனில் பந்து தனது பயணத்தை நிறைவு செய்யும்போதுதான் அதைப் பிடிக்க முயல்கிறார். தோட்டாவைப் பிடிக்கும் தருணமும் இப்படித்தான் இருக்கும்.

இந்த இரண்டு ஆச்சரியங்களுக்கான காரணம், வேகம்தான் என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

தோட்டாவைப் புறப்பட்ட இடத்திலேயே பிடிக்க வேண்டும் என்றால் அது செல்லும் அதே வேகத்தில், அதே திசையில் பயணிக்க வேண்டும். எதிர்த்து நின்றால் அவ்ளோதான். சரி, இப்போது நாம் விமான விபத்துக்கு வருவோம்.

காரணம்

பறவை மோதி விமானம் உடைவதன் காரணத்தை ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால், பேப்பர் வெயிட்டை தூக்கி எறிந்து கார் கண்ணாடியை உடைப்பது போன்றதுதான். மணிக்கு சுமாராக

1,000 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் விமானத்தின் மீது, அதன் எதிர்த் திசையில் பறவை மோதும்போது, அது விமானத்தின் கண்ணாடியையோ, பக்கவாட்டு பாகங்களையோ தோட்டா போல தாக்கிவிடுகிறது. சில வேளைகளில் பறவைகள் விமானத்தைத் துளைத்துக்கொண்டு உள்ளே செல்வதும் உண்டு. அப்போது விமானத்தின் இன்ஜினுக்குள் விழுந்து சேதத்தை ஏற்படுத்தி, செயலிழக்கச் செய்துவிடுகின்றன.

பறவை மோதி விமானம் விபத்துக்குள்ளாகக் காரணம் விமானத்தின் அதிவேகம்தான். இப்போது புரிகிறதா!

(காரணங்களை அலசுவோம்)
கட்டுரையாளர்: அரசுப் பள்ளி ஆசிரியர்
தொடர்புக்கு: suriyadsk@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x