Last Updated : 17 Dec, 2016 03:33 PM

 

Published : 17 Dec 2016 03:33 PM
Last Updated : 17 Dec 2016 03:33 PM

வானவில் பெண்கள்: பூக்களால் வாழ்வில் மணம் வீசுமா?

தம்பரம் நகரில் கீழவீதி, மேலவீதி, தெற்குவீதி, ஆலப்பாக்கம் ரயில்வே கேட், கிள்ளை ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளில் பூக்கள் விற்பனை செய்யும் பெண்கள் ஏராளமாக இருக்கிறார்கள். தெற்குவீதியில் கடக்கும் ஒவ்வொரு வாகனத்தையும் நோக்கிப் பூக்களுடன் ஓடிக்கொண்டிருந்த கொளஞ்சியிடம் பேசினோம்.

”உங்களுக்கெல்லாம் பூ என்பது அழகு, மகிழ்ச்சியின் அடையாளம். எங்களுக்கு இது வாழ்க்கை. நான் 10 ஆண்டுகளுக்கு மேல் பூ வியாபாரம்தான் செய்து வருகிறேன். சிதம்பரத்தைச் சுற்றியுள்ள சி.முட்லூர், மஞ்சக்கொல்லை, மண்டபம், ஆதிவராக நல்லூர் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில்தான் விவசாயிகள் பூச்செடிகளைப் பயிரிடுவார்கள். இந்தப் பூக்கள் கமிஷன் மண்டி மூலம் விற்பனை செய்யப்படுது. அங்கிருந்து பூக்களை வாங்கி, அழகாகக் கட்டி, வியாபாரம் செய்து வருகிறோம்” என்ற கொளஞ்சி, இருநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் இந்த வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாகச் சொல்கிறார்.

பண்டிகை, விசேஷம், முகூர்த்த நாட்களாக இருந்தால் ஒரு கிலோ பூவுக்கு 200 முதல் 400 ரூபாய் வரை லாபம் கிடைக்கும். சாதாரண நாட்களில் லாபம் மிகவும் குறைவாக இருக்கும்.

”வாங்கிய பூக்கள் எல்லாம் விற்பனையானால்தான் லாபம். இல்லையென்றால் முதலுக்கே மோசாகிடும். பூவை மட்டும் அடுத்த நாள் கூட விற்க முடியாது. அதனால்தான் வண்டிகளைக் கண்டதும் ஓடி ஓடி விற்கிறோம். இந்தப் பூ வியாபாரத்தை நம்பிதான் பல குடும்பங்கள் உயிர் பிழைக்குது. என் கணவருக்குச் சரியான வருமானம் இல்லை. அதனால்தான் இந்த வியாபாரத்துக்கு வந்தேன்” என்றவர், ஓர் ஏக்கர் குண்டு மல்லிப் பூச்செடிகளைப் பயிரிட்டால் குறைந்தது 2 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும். இதனை நம்பி தனக்கு இருந்த ஓர் ஏக்கர் நிலத்தில் இந்த ஆண்டு பூச்செடிகளைப் பயிரிட்டிருக்கிறார். ஆனால் நிலத்துக்கு அருகே ஓடும் வெள்ளாற்றில் கடல் நீர் கலந்து, வயல்களில் புகுந்துவிட்டது. உப்பு நீரால் செடிகள் அத்தனையும் கருகி, பெரிய நஷ்டத்தைச் சந்தித்திருக்கிறார் கொளஞ்சி.

”பூ விற்றுதான் மகனைக் கல்லூரி வரை படிக்க வைத்தேன். மகளைத் திருமணம் செய்து கொடுத்தேன். மாலை 3 மணியிலிருந்து இரவு 9 மணிக்குள் பூக்களை விற்றுவிட்டு, வீட்டுக்குப் போவோம். இந்தப் பகுதியில் பூ பதனிடும் மையம், வாசனை திரவியம் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் எங்களின் கோரிக்கை நிறைவேறியபாடு இல்லை. இந்த ரெண்டும் வந்ததுனா 500 பூ விவசாயிகளும் எங்களைப் போன்ற 200 குடும்பங்களும் பயன்பெறுவோம். எங்கக் கஷ்டமும் கொஞ்சம் குறையும். பூக்களால் எங்கள் வாழ்விலும் மணம் வீசுமா?” என்று கேட்கிறார் கொளஞ்சி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x