Published : 02 Nov 2022 06:59 PM
Last Updated : 02 Nov 2022 06:59 PM

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு பயிற்சிக்கான எளிய முறை குறிப்புகள் - பகுதி 18

ஜி.கோபாலகிருஷ்ணன், போட்டித்தேர்வு பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர்

இந்திய வரலாறு - 7

சாளுக்கியர்கள் (பொ.ஆ. 543 - 755)

இரண்டா புலிகேசி

கல்யாணிச் சாளுக்கியர்களும் வேங்கியின் கீழைச் சாளுக்கியர்களும் மேலைச்சாளுக்கியரின் வழிவந்தவர்களாவர். மேலைச் சாளுக்கிய மரபை தோற்றுவித்தவர் முதலாம் புலிகேசி. அவரது சிற்றரசின் தலைநகர் வாதாபி (தற்போது பாதாமி). சாளுக்கியர்களில் சிறந்த மன்னராக கருதப்படுபவர் இரண்டாம் புலிகேசி (பொ.ஆ.608-642) . மைசூரு கங்கர்களையும் புனவாசி கடம்பர்களையும் வென்று தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தினார். கங்க மன்னர் துர்விநீதன் தனது மகளை இரண்டாம் புலிகேசிக்கு மணமுடித்தார். நர்மதை ஆற்றங்கரைப் போரில் தென்னிந்தியாவை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் படையெடுத்த ஹர்ஷரை வென்றது இரண்டாம் புலிகேசியின் சாதனையாகும். ஆனால் பல்லவ மன்னர் முதலாம் நரசிம்மவர்மனிடம் படுதோல்வி அடைந்தார். பின்னர் பல்லவர்களால் வாதாபி கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. சீனப்பயணி யுவான்சுவாங் (பயணிகளின் இளவரசர்) இவரது நாட்டுக்கும் விஜயம் செய்தார்.

புலிகேசிக்குப் பின்

இரண்டாம் புலிகேசிக்குப்பின் ஆட்சிக்கு வந்த விக்கிரமாதித்தர் பல்லவர்களை வென்று காஞ்சியை கைப்பற்றி தனது நாட்டை நிலைப்படுத்தினார் என்றால் மிகையாகாது. கடைசி மன்னர் இரண்டாம் கீர்த்திவர்மனை போரில் வென்று ராஷ்டிரகூட அரசை நிறுவியவர் தந்திதுர்க்கன்.

பிற்கால மேலைச் சாளுக்கிய மரபைத் தொடங்கியவர் இரண்டாம் தைலப்பா (பொ.ஆ.973 -997). கல்யாணியை(தற்போது பசவகல்யாண்) தலைநகராகக் கொண்டனர். இரண்டாம் சோமேஸ்வர் சிறந்த மன்னராவர். கடைசி அரசர் மூன்றாம் தைலப்பா.

கீழைச்சாளுக்கிய மரபைத் தொடங்கியவர் விஷ்ணுவர்த்தன். தலைநகரம் - வேங்கி. தெலுங்கர்கள் சமுதாயம் மற்றும் தெலுங்கு இலக்கியம் சிறப்புடன் வளர்ச்சி பெற்றது. சோழப் பரம்பரையில் திருமண உறவு வைத்திருந்தனர். அவர்களின் வாரிசே குலோத்துங்க சோழன் ஆவார். நான்காம் சோமேஸ்வரன் குறிப்பிடப்பட்ட கடைசி சாளுக்கிய மன்னராவார்.

கலைகள், கோயில்கள்

சாளுக்கியர்களின் ஆட்சியில் அதிகாரம் மையப்படுத்தப்பட்டது. அனைத்து மதத்தினரும் மதிக்கப்பட்டனர். கப்பற்படை நூறு கப்பல்களுடன் சிறந்து விளங்கியது. முதலாம் புலிகேசி அசுவமேத யாகம் செய்தார். மதம், சமயச்சடங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. சிவன், விஷ்ணு ஆகிய கடவுளருக்கு எண்ணற்ற கோயில்கள் கட்டப்பட்டன. பெளத்த மதம் படிப்படியாக வீழ்ச்சியடைந்து சமண மதம் வளர்ச்சி பெற்றது. சாளுக்கிய அரசைப் பற்றி கூறும் அய்ஹோல் கல்வெட்டை நிறுவியவர் சமணரான புலவர் ரவிகீர்த்தி (இரண்டாம் புலிகேசியின் அவைப்புலவர்).

சாளுக்கியர்கள் காலத்தில் அஜந்தா, எல்லோரா, நாசிக் ஆகிய இடங்களில் குடவரைக்கோயில்கள் சிறப்புற்றிருந்தன. அய்ஹோல், பதாமி, பட்டாடக்கல் ஆகிய இடங்களில் வேசர கலைப்பாணியை பின்பற்றி கட்டுமான கோயில்களைக் கட்டினர். அய்ஹோலில் உள்ள 70 கோயில்களில் லட்கான் கோயில், ஹீச்சிமல்லி கோயில், மெகுதி சமணக்கோயில், பதாமி முகத்தீஸ்வர் கோயில், மேலக்குட்டி சிவன் கோயில் ஆகியன சாளுக்கியர்களின் அழகிய கட்டிடக்கலைக்கு சான்றாகும். பட்டாடக்கல்லில் உள்ள பத்து கோயில்களில் நான்கு வட இந்திய கலைப்பாணியில் கட்டப்பட்டுள்ளன. இந்த பாணியில் பாபநாதர் கோயில் சிறப்பு பெற்றது. மற்றவை திராவிட கலாபாணியில் கட்டப்பட்டவை. அவைகளுள் சங்கமேஸ்வரர் மற்றும் காஞ்சி கைலாசநாதர் கோயிலைப் போன்ற விருப்பாட்சர் கோயில் (இரண்டாம் விக்கிரமாதித்தர் காலத்தில் கட்டப்பட்டது) சிறப்பு பெற்றவை. பொதுவாக சாளுக்கியர்கள் காலத்தில் கட்டிடக்கலை நன்கு வளர்ச்சி பெற்றிருந்தது.

ராஷ்டிரகூடர்கள்

இம்மரபை தோற்றுவித்தவர் தந்திதுர்க்கன். இவர்களது மொழி கன்னடம். சாளுக்கிய மன்னர் இரண்டாம் கீர்த்தி வர்மனைத் தோற்கடித்து அவர்களது ஆட்சிப் பகுதிகளையும் இணைத்துக் கொண்டார். அடுத்து ஆட்சி பொறுப்பேற்ற முதலாம் கிருஷ்ணா வேங்கி சாளுக்கியர்களையும் கங்கர்களையும் வென்று தனது ஆட்சியை விரிவுபடுத்தினார். எல்லோராவில் ஒரே கல்லில் கைலாசநாதர் கோயிலை கட்டியவர் இவரே. அவருக்குப்பின் வந்த மன்னர்களில் மூன்றாம் கோவிந்தர் குறிப்பிடும்படி ஆட்சி செய்தார் எனலாம். பின்னர் 64 வருடங்கள் ஆட்சி செய்தவர் முதலாம் அமோகவர்ஷர் (பொ.ஆ.815-880). அவரது சமண குரு ஜீனசேனர். கவிராஜ மார்க்கம் என்ற நூலை கன்னட மொழியில் எழுதினார். ராஷ்டிரகூடர்களின் தலைநகரான மால்கெட் (மான்யகேதம்) நகரை உருவாக்கியவர். சோழப்படைகளை தக்கோலம் என்ற இடத்தில் வென்று ஆட்சி செலுத்தியவர் மூன்றாம் கிருஷ்ணா (பொ.ஆ.936-968). மேலும் தஞ்சாவூரை கைப்பற்றினார். ராமேஸ்வரம் இவரது கட்டுப்பாட்டில் இருந்தபோது அங்கு கிருஷ்ணேஸ்வரர் கோயிலைக் கட்டினார். தொண்டை மண்டலம் காஞ்சிபுரம் உட்பட இவரது ஆதிக்கத்தின் கீழிருந்தது.

ஆட்சிமுறை : பேரரசு அமைப்பு
பிரிவுகள் - தலைமை
ராஷ்டிரம் - ராஷ்டிரபதி
(மாநிலம்)
விஷயம் - விஷயபதி
(மாவட்டம்)
புத்தி - போகபதி
(50-70 கிராமங்கள்)
கிராமம் - கிராமத்தலைவர்

சைவமும் வைணவமும் தழைத்தோங்கியிருந்தாலும் தக்காணத்தில் மூன்றில் ஒரு பங்கு சமணர்களாவர். சாலடோகி (பீஜப்பூர் மாவட்டம்) என்ற இடத்தில் ஒரு கல்லூரி சிறப்பாக செயல்பட்டது. அரேபியர்களுடன் வணிகம் சிறப்புற்றிருந்தது. இலக்கியங்களும் வளர்ச்சி பெற்றன.

ஆசிரியர் நூல்
ஜீனசேனர் - பார்சவபூதயா
நலிசம்பு - திருவிக்ரமன்
ஹளயுதா - கவிரகசியம்
குணபத்ரர் - ஆதிபுராணம்
சாகதாயனா - அமோகவிருத்தி
வீராச்சாரியார் - கணிதசாரம்
பம்பா - விக்ரமசேண விஜயம்
பொன்னா - சாந்திபூரணா

ஶ்ரீபுரி என்ற எலிபென்டா (பெயரிட்டவர்கள் - போர்த்துகீசியர்கள்) சிற்பங்கள் ராஷ்டிரகூடர்களின் சிற்பக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

தொகுப்பு - ஜி.கோபாலகிருஷ்ணன், போட்டித்தேர்வு பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர்
முந்தைய பகுதி
- https://www.hindutamil.in/news/supplements/thisai-katti/890146-tnpsc-group-1-simple-notes-for-preparation-part-17-6.html

அடுத்த பகுதி நவம்பர் 4 (வெள்ளிக்கிழமை) அன்று வெளியிடப்படும்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x