Published : 31 Oct 2022 05:39 PM
Last Updated : 31 Oct 2022 05:39 PM

உலக வாத நோய் தினம்: காற்று மாசுபாடால் பக்கவாத நோய் வருமா?

முதியவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நோய்களில் ஒன்று வாதநோய். உலக அளவில் அதிகமானோர் உயிரிழப்பதற்கு காரணமான இரண்டாவது நோய் இதுவே. உலகில் ஒவ்வொரு ஐந்து விநாடிக்கும் ஒருவர் வாதநோய் காரணமாக உயிரிழக்கிறார். இந்தியாவில் லட்சம் பேரில் 119 - 145 பேர் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இந்தியாவில் கிராமப்புறங்களில் இந்நோயின் தாக்கம் குறைவாகவும் நகர்ப்புறங்களில் அதிகமாகவும் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை பாதிப்பை இந்நோய் ஏற்படுத்தினாலும், முதியவர்கள் மத்தியில் வாதநோய் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் மாரடைப்புக்கு அடுத்து மக்களை அதிகம் பாதிக்கும் நோயாக வாத நோய் உள்ளது. இந்நோய் வராமல் தடுப்பதற்கு என்ன வழி?

ஏன் வருகிறது?

ஒருவரின் மூளையில் உள்ள ரத்தக் குழாய்களில் பாதிப்பு ஏற்படுவதால் மூளைத் திசுக்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் உடல், கை, கால் செயலிழப்பதைதான் வாதநோய் (ஸ்ட்ரோக்) என்கிறோம். ஒருவரின் இதயத்திலிருந்து வெளியேறும் ரத்தம், கழுத்துப் பகுதியில் உள்ள ரத்தக் குழாய்கள் வழியாகப் பாய்ந்து மூளைத் திசுக்கள் ஆரோக்கியத்துடன் செயல்பட உதவுகின்றன. இதனால் ஒருவரின் உடல் உறுப்புக்களில் ஏற்படும் அங்க இயக்கங்கள், பேச்சுத்திறன், சிந்தனைத் திறன், மனநிலை, பார்வை, கேட்கும் திறன், உடல் உணர்வுகளின் தன்மை ஆகியவை சீராகச் செயல்படுகின்றன. அதனாலேயே நாம் அன்றாடப் பணிகளைச் சரியான சுயசிந்தனையுடன் செய்ய முடிகிறது.

மூளைத் திசுக்களிடையே பரவி இருக்கும் ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதால் ஏற்படும் அடைப்புகள், ரத்தக் குழாய்களில் பாயும் ரத்தம் உறைந்து போதல், சில நேரம் மூளை ரத்தக் குழாய்களில் பாதிப்பு ஏற்பட்டு மூளைத் திசுக்களிடையே ரத்தம் கசிந்து விடுதல் ஆகியவை காரணமாக மூளைச் செல்களுக்குத் தேவையான ரத்தம் பாய்வதில் தடை ஏற்படுகிறது. மூளையில் ஏற்படும் இந்தப் பாதிப்பால், அதன் கட்டுப்பாட்டில் உள்ள குறிப்பிட்ட உடல் பகுதிகளில் செயல் இழப்பு ஏற்பட்டு வாதநோய் ஏற்படுகிறது.

தற்போது காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது. காற்று மாசுபாடு காரணமாகவும் வாத நோய் ஏற்படுகிறது. காற்று மாசுபாடால் நுரையீரல் மட்டுமல்ல மூளையிலும் பாதிப்பு ஏற்படுகிறது. அதாவது மூளையில் ரத்தக் குழாய்கள் தெறித்து இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது. இந்தியாவில் நடைபெறும் மரணங்களில் 14 சதவீதம் வாத நோய் காரணமாகவே ஏற்படுகிறது. வாத நோயால் பாதிக்கப்படுபவர்களில் 16.9 சதவீதம் பேருக்கு காற்று மாசுபாடாலேயே இந்நோய் ஏற்படுகிறது.

மூளையின் வலது பக்கம் பாதிக்கப்படும்போது உடலின் இடது பகுதியிலும், மூளையின் இடது பக்கம் பாதிக்கப்படும்போது வலது பக்கத்திலும் வாதத்தன்மை, பேச முடியாமை போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

அறிகுறிகள்

பார்வைக் குறைபாடு, மனநிலை மாற்றம், சுய உணர்வில் தடுமாற்றம், தலைவலி, குமட்டல், வாந்தி, தலைசுற்றுதல், இரட்டைப் பார்வை, உடல் உணர்வில் மாற்றம், தள்ளாட்டம், நடையில் தடுமாற்றம், வலிப்பு போன்ற தொந்தரவுகள் திடீரென ஏற்படக்கூடும். இவை வாதநோயின் பொதுவான அறிகுறிகள்.

இவை தவிர, உடலின் ஒரு பகுதி கை, கால்களை அசைக்க முடியாதபடி செயல் இழக்கும். மேலும் செயலிழந்த பகுதியில் முகம் கோணலாகி, வாயும் அசைக்க முடியாமல் போய்விடும். முகப் பகுதியும் வாதத்தால் பாதிக்கப்படும்போது பேசுவதில் சிரமம் ஏற்பட்டு, பேச்சு உளறுவதைப் போல இருக்கும். இதைப் பேச்சு வழக்கில் ‘பக்கவாதம்’ என்கிறோம்.

சிகிச்சை முறைகள்

முன்பெல்லாம் வாதநோய்க்குச் சிகிச்சை அளிப்பது கடினம் என்ற நிலை இருந்தது. தற்போது இந்த நிலை மாறிவிட்டது. மேம்பட்ட மருத்துவ சிகிச்சை முறைகளால் தற்போது வாதநோயைக் குணப்படுத்த முடியும் என்ற நிலை உருவாகி இருக்கிறது. வாதநோயால் ஏற்படும் உயிரிழப்பைக் குறைக்க நவீன சிகிச்சை முறைகளும் தற்போது பெரிதும் உதவுகின்றன.
மூளையில் ரத்தம் உறைந்து வாதநோய் ஏற்படும்போது, அந்த ரத்த உறைவைக் கரைத்து, ரத்த ஓட்டத்தைச் சீர்செய்ய மேம்பட்ட சிகிச்சை முறைகள் உள்ளன. மேலும் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு உண்டாகும் வாதநோயைக் குணப்படுத்தவும் தகுந்த சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

டாக்டர் அலீம்

தடுக்கும் முறைகள்

வாதநோய் ஏற்படாமல் தடுக்க, ரத்த அழுத்தநோய் ஏற்படாமல் தவிர்ப்பதும், ரத்த அழுத்த நோய்க்குச் சரியான சிகிச்சையும் மிக அவசியம். ரத்த அழுத்தம் அதிகரிக்காமல் இருக்க உணவில் உப்பைக் குறைத்துக்கொள்ள வேண்டும். உணவில் பொட்டாசியம் சத்து நிறைந்துள்ள பழங்களை உட்கொள்வதன் மூலம் வாதநோய் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். கொழுப்புச் சத்துள்ள இறைச்சியைத் தவிர்ப்பதும் நல்லது. மது அருந்துவது, புகைபிடிப்பது, போதை மருந்து பழக்கத்தை விட்டொழிப்பது போன்றவற்றின் மூலம் வாதநோய் வருவதைத் தவிர்க்க முடியும்.

மனச்சோர்வு, மன அழுத்தத்தைக் குறைத்துக் கொள்ளுதல், உடற்பயிற்சி, தியானம் போன்றவற்றில் ஈடுபடுவதும் நல்லது. உடலில் வாதநோயை உண்டாக்கும் நச்சுகள் சேராமல் இருக்கத் தகுந்த வைட்டமின் மாத்திரைகளையும் மூளை நரம்பியல் நிபுணரின் ஆலோசனையுடன் உட்கொள்ளலாம். மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்வதும், மலம் கழிக்கும்போது அதிக சிரமப்படாமல் இருப்பதும் அவசியம். ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் மூக்கு அடைப்பைப் போக்கப் பயன்படுத்தும் மூக்கு சொட்டு மருந்துகள், அலர்ஜி நீக்கி மருந்துகள் போன்றவற்றை மருத்துவர் ஆலோசனையுடன் பெற வேண்டும். இந்த அம்சங்களைக் கடைப்பிடித்தால் வாதநோயை தடுக்க முடியும்.

(அக்.29: உலக வாத நோய் தினம்)

கட்டுரையாளர்: மூளை நரம்பியல் நிபுணர், திருச்சி.

தொடர்புக்கு: drmaaleem@hotmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x