Published : 30 Oct 2022 09:18 AM
Last Updated : 30 Oct 2022 09:18 AM

பெண்கள் 360: பெண்கள் தலைவாருவதால் பணி பாதிப்பு?

நீதிமன்ற அறைக்குள் பெண் வழக்கறிஞர்கள் தலைவாரும்போது ஊழியர்களுக்குக் கவனச் சிதறல் ஏற்பட்டு நீதிமன்ற செயல்பாடு பாதிக்கப்படுவதால் பெண் வழக்கறிஞர்கள் நீதிமன்றம் செயல்படும் அறையில் தலைவாருவதைத் தவிர்க்குமாறு புனே மாவட்ட நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு சர்ச்சைக்குள்ளானது. இந்த அறிவிப்பைத் தனது ட்விட்டர் தளத்தில் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் வெளியிட்டு விமர்சித்திருந்தார். மூத்த பெண் வழக்கறிஞர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். சமூக வலைதளத்திலும் கடும் கண்டனங்கள் பதிவாகின. ‘எளிதில் திசைதிரும்பும் ஆண் வழக்கறிஞர்கள் அல்லவா இடத்தைக் காலி செய்ய வேண்டும்’ என நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்தனர். இதனால், புனே நீதிமன்றம் இந்த அறிவிப்பைத் திரும்பப் பெற்றுக்கொண்டது.

கிரிக்கெட்டில் ஊதிய சமத்துவம்

இந்திய கிரிக்கெட் வீரர்களைப் போல இனி சர்வதேச டெஸ்ட், ஒரு நாள், டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் ஒப்பந்த அடிப்படையிலான வீராங்கனைகளுக்கும் ஒரே ஊதியம் வழங்கப்படும் என இந்திய கிரிக்கெட் வாரியச் செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். கிரிக்கெட்டில் பாலினப் பாகுபாட்டை உடைக்கும் நடவடிக்கையாக டெஸ்ட் போட்டிக்கு ரூ. 15 லட்சமும், ஒரு நாள் போட்டிக்கு ரூ. 6 லட்சமும், டி20 போட்டிக்கு ரூ. 3 லட்சமும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. “இந்திய கிரிக்கெட்டில் இது ஒரு வரலாற்று நிகழ்வு” என முன்னாள் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார். நியூசிலாந்தை அடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்கு ஊதியம் வழங்க முடிவெடுத்ததைப் பலர் வரவேற்றுள்ளனர்.

மனநல காப்பகத்தில் பூத்த காதல்

குடும்பத் தகராறு காரணமாக மன அழுத்த பாதிப்புக்குள்ளான 42 வயது மகேந்திரனும் தந்தை இழந்த சோகத்தில் இருந்து மீள முடியாத 36 வயது தீபாவும் சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டனர். மருத்துவமனையில் சந்தித்துக்கொண்ட இருவருக்கும் பார்த்தவுடன் காதல் மலர, இப்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர். சிகிச்சைக்குப் பிறகு முழுமையாகக் குணமான இருவரும் புதிதாக வீடு எடுத்துத் தங்களது திருமண வாழ்க்கையைத் தொடங்க உள்ளனர். அரசு மனநல காப்பக இயக்குநர் பூர்ணசந்திரிகா மற்றும் பணியாளர்கள் இவர்களது காதலுக்கு முழு ஆதரவு அளித்துத் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்துள்ளனர். கீழ்ப்பாக்கம் மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள கோயிலிலேயே மணமக்களுக்குத் திருமணம் நடைபெற்றது கூடுதல் சிறப்பு. மருத்துவமனை என்றாலே சிகிச்சையும் கவலையும்தான் இருக்கும் என்கிற நிலையை மாற்றிப் புது வாழ்க்கை பிறப்பதற்கான நம்பிக்கையை விதைத்துள்ளனர் இந்தக் காதலர்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x