Published : 28 Sep 2022 06:40 AM
Last Updated : 28 Sep 2022 06:40 AM

டிங்குவிடம் கேளுங்கள்: முடி சுருள்வது ஏன்?

காலநிலைக்கும் பருவநிலைக்கும் என்ன வேறுபாடு, டிங்கு?

- மு. வர்ஷினி, 6-ம் வகுப்பு, அ.உ.நி. பள்ளி, ஏகாட்டூர், திருவள்ளூர்.

பருவகாலம் என்பது ஆண்டுக்கு ஒருமுறை ஏற்படுவது. அதாவது இளவேனிற்காலம், கோடைக்காலம், பருவமழைக்காலம், குளிர்காலம் என ஆண்டுக்கு ஒரு முறை பருவங்கள் மாறும். இதைத்தான் பருவநிலை என்கிறோம். வெப்பநிலை, காற்றில் ஈரப்பதம், மழை, மழை குறைவு போன்ற காரணிகளால் நீண்ட காலத்தில் வானிலையில் ஏற்படக்கூடிய மாற்றங்களை காலநிலை என்கிறோம், வர்ஷினி.

சிலருக்கு முடி நேராகவும் சிலருக்கு முடி சுருளாகவும் இருப்பது ஏன், டிங்கு?

- அனஃபா ஜகபர், 11-ம் வகுப்பு, செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில்.

முடி நேராக இருப்பதற்கும் சுருளாக இருப்பதற்கும் முக்கியக் காரணம் பெற்றோரின் மரபணு பண்புகள்தாம். அம்மாவுக்கு முடி நேராகவும் அப்பாவுக்கு முடி சுருளாகவும் இருந்தால், இரண்டு பேரில் யாருடைய பண்பு அதிகமாக உங்களிடம் ஆதிக்கம் செலுத்துகிறதோ, அதைப் பொறுத்து உங்களுக்கு முடி நேராகவோ அல்லது சுருளாகவோ இருக்கும். இருவரின் பண்புகளும் சம அளவில் இருந்தால், முடி நேராகவும் இல்லாமல் சுருளாகவும் இல்லாமல் லேசாக வளைந்து இருக்கும். அதற்கடுத்த காரணம், முடிகள் வெளிவரும் நுண்ணறைகள். இந்த நுண்ணறைகள் வட்ட வடிவில் இருந்தால், முடி நேராக இருக்கும், நுண்ணறைகள் கோள வடிவில் இருந்தால் முடி சுருளாக இருக்கும், அனஃபா ஜகபர்.

தண்ணீரில் ஆக்சிஜன் இருக்கும்போது, நெருப்பின் மீது தண்ணீரை ஊற்றினால் அணைந்துவிடுகிறதே ஏன், டிங்கு?

- சா. மகிழ் வேந்தன், 8-ம் வகுப்பு, தூய சவேரியார் பள்ளி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி.

இரண்டு ஹைட்ரஜன் அணுக்களும் ஒரு ஆக்சிஜன் அணுவும் சேரும்போது தண்ணீர் உருவாகிறது என்பது உங்களுக்குத் தெரியும். ஹைட்ரஜன்தான் எரியக் கூடியது. எரிய ஆரம்பித்த பிறகு அந்த வெப்பத்தைத் தக்கவைக்கக்கூடிய ஆற்றல் ஆக்சிஜனுக்கு உண்டு. எரியும் தீயின் மீது தண்ணீரை ஊற்றினால், வெப்பத்தை அது குளிர்விக்கிறது. அத்துடன் தீயைக் கட்டுப்படுத்தவும் செய்கிறது. அதாவது, எரிவதற்குத் தேவையான எரிபொருளையும் எரிவதை ஊக்குவிக்கும் ஆக்சிஜன் காற்றிலிருந்து கிடைப்பதையும் தண்ணீர் தடைசெய்கிறது. நீரின் ஒரு பகுதியாக இருக்கும் ஆக்சிஜன் எரிவதில்லை, மகிழ் வேந்தன்.

புதுப்பிக்கத் தக்க ஆற்றல் என்பது என்ன, டிங்கு?

- ஜெப் ஈவான், 6-ம் வகுப்பு, புனித பாட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கோட்டூர்புரம், சென்னை.

இயற்கை வளங்களைப் பயன்படுத்தி, உற்பத்தி செய்யப் படும் ஆற்றலே ‘புதுப்பிக்கத் தக்க ஆற்றல்’. அதாவது சூரிய ஒளி, காற்று, மழை, புவி வெப்பம், கடல் அலைகள் போன்ற இயற்கை வளங்களைப் பயன்படுத்தி, காற்றாலை, சூரிய சக்தி மூலம் மின்னோட்டம், வெப்பம் போன்ற ஆற்றல்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன, ஜெப் ஈவான்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x