Last Updated : 09 Nov, 2016 01:21 PM

 

Published : 09 Nov 2016 01:21 PM
Last Updated : 09 Nov 2016 01:21 PM

சிறார் உலகம்: சிறிய குழந்தைகள்; பெரிய சங்கதிகள்!

2030-ல் செவ்வாய்ப் பெண்!

‘அப்பா! நான் செவ்வாய்க்குப் போக வேண்டும்’ என்று அலீஸா கார்சன் சொல்லும்போது அவளுக்கு வயது 3. இந்த ஆர்வம் அவளை நாசாவின் மூன்று விண்வெளிப் பயிற்சி முகாம்களில் பங்கேற்க வைத்தது. கடினமான ‘அட்வான்ஸ்டு ஸ்பேஸ் அகாடமி’ பயிற்சியை முடிக்க வைத்தது. 14 விண்வெளி மையங்களைப் பார்வையிடவும் வைத்தது. இப்போது 15-வயதாகும் அலீஸாவுக்கு விண்வெளி தொடர்பான எல்லா விஷயங்களும் அத்துப்படி. அமெரிக்காவின் லூசியானாவைச் சேர்ந்த அவர், தற்போது வளிமண்டலம் குறித்த முக்கிய ஆராய்ச்சி மேற்கொள்ளத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதோடு, 2030-ம் ஆண்டில் செவ்வாய்க் கிரகத்துக்கு செல்லும் முதல் மனிதர் என்ற பெருமையையும் பெறப்போகிறார் அலீஸா. அதற்காக இப்போதிருந்தே ஆக்ஸிஜன் குறைவான இடத்தில் மூச்சுவிடுவதற்கான பயிற்சி, ஸ்கூபா டைவிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறார் அலீஸா. சூப்பர் குட்டி விண்வெளி வீராங்கனை!



சதுரங்க வேட்டை!

அமெரிக்காவிலுள்ள ஜார்ஜியாவில் அண்மையில் சர்வதேச செஸ் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 700 சிறார்கள் பங்கேற்றனர். இதில் சென்னை வேலம்மாள் பள்ளியைச் சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவர் பிரகனானந்தா 12 வயதுக்குட்பட்டோர் பிரிவிலும், ஐந்தாம் வகுப்பு மாணவர் பிரணவ் 10 வயதுக்குட்பட்டோர் பிரிவிலும் பங்கேற்றனர். சொல்லி வைத்தாற்போல இருவரும் இந்தப் பிரிவுகளில் வெண்கலப் பதக்கம் வென்று வந்திருக்கிறார்கள்.



குழந்தையின் ஒளிப்படம் சேர்த்த நிதி!

வறுமையின் பிடியில் உள்ள ஆப்ரிக்காவின் சில நாடுகளில் கல்வி என்பதே பல குழந்தைகளுக்குக் கனவுதான். படிக்க நல்ல பள்ளிக்கூடம் இருக்காது. அப்படியே இருந்தாலும் காடுகளைத் தாண்டிச் செல்ல வேண்டியிருக்கும். அப்படிக் காட்டைக் கடந்து பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளில் ஒருவன்தான் நீங்கள் ஒளிப்படத்தில் பார்க்கும் 5 வயது ஏழைக் குழந்தை ஜேக். கானாவின் அசாம்பனேவைச் சேர்ந்த ஜேக், தன் பள்ளியில் ஓவியம் வரைவதை கார்லோஸ் கார்ட்டேஸ் என்ற ஒளிப்படக்காரர் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றினார்.

‘இதுபோன்ற குழந்தைகளின் கல்விக்கு நிதி தேவை’ என்றும் அதில் எழுதியிருந்தார். குழந்தையின் ஓவியம் வரையும் ஆர்வத்தைப் பார்த்தவர்கள், 2 மணி நேரத்தில், ரூ. 1,33,000 நிதியை வாரி வழங்கிவிட்டார்கள். தற்போது இந்தக் குழந்தைக்காக ‘கோ ஃபன்ட் மீ’(Go fund me) என்ற பேஸ்புக் பக்கமும் தொடங்கப்பட்டு, தொடர்ந்து நிதி சேர்ந்துவருகிறது.



பிரதமரைக் கூப்பிடும் சிறுவன்

‘டியர் மோடி, என்னுடைய கிராமத்துக்கு வாங்க. எங்க கிராமத்துல குழந்தைகள் இறப்பது எப்படின்னு பாருங்கள்’ என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒடிசாவைச் சேர்ந்த 10 வயதுச் சிறுவன் கடிதம் எழுதி அழைத்திருக்கிறான். ஏன் இந்தக் கடிதம்? ஒடிசாவில் மல்காங்கிரி மாவட்டத்தில் ஜப்பானிய மூளைக் காய்ச்சலுக்கு இதுவரை 80 குழந்தைகள் இறந்துவிட்டார்கள். இவர்களில் 4-ம் வகுப்பு படிக்கும் உமேஷ் மாதி என்ற 10 வயது சிறுவன் நண்பர்களும் அடக்கம்.

இதனால் மிகுந்த வருத்தத்துக்கு ஆளான உமேஷ், பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளான். அந்தக் கடிதத்தில், “எங்களுடைய உயிரைக் காப்பாற்றுங்கள். ஜப்பானிய மூளைக் காய்ச்சல் நோயால் என்னுடைய நண்பர்கள் இறந்துவிட்டார்கள். நீங்கள் உலகம் முழுவதும் போகிறீர்கள். எங்களுடைய கிராமத்துக்கு உங்களால் வர முடியாதா? என்னுடைய கிராமத்துக்கு வந்து குழந்தைகள் படும் கஷ்டத்தை நேரில் பாருங்கள்” என்று உருக்கத்துடன் எழுதியுள்ளான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x