கேள்வி மூலை 03: சவரம் செய்தால் முடி வேகமாக வளருமா?

கேள்வி மூலை 03: சவரம் செய்தால் முடி வேகமாக வளருமா?
Updated on
1 min read

உன்னுடைய முடி பூனை முடியைப் போலச் சன்னமாக இருக்கிறது, அடர்த்தியாக வளர வேண்டுமென்றால் சவரம் செய் என்று இளவட்டப் பையன்கள் பேசிக்கொள்வதைக் கேட்டிருக்கலாம். எப்போதுமே சவரம் செய்தால் முடி வேகமாகவும் அடர்த்தியாகவும் வளரும் என்று சொல்லவும் கேட்டிருப்போம்.

ஆனால், இது உண்மையல்ல.

சவரம் செய்தாலும், சவரம் செய்யாவிட்டாலும் முடி ஒரே வேகத்தில்-அடர்த்தியில்தான் வளர்கிறது. இதில் விஷயம் என்னவென்றால், பொதுவாக நம்முடைய முடி சூரிய வெளிச்சம்-வெப்பம் காரணமாக வெளுக்கிறது. சவரம் செய்த பிறகு வெளியே வரும் புதிய முடி இப்படி வெளுக்காமல் அடர்நிறத்தில் இருக்கும் என்பதுதான் இதில் உறைந்திருக்கும் ரகசியம்.

புதிய முடி பார்ப்பதற்கு இப்படி அடர்நிறத்தில் இருப்பது, வேகமாக வளர்வதைப் போன்ற போலித் தோற்றத்தைத் தரலாமே ஒழிய, அது உண்மையான அடர்த்தி அல்ல.

அதேபோலச் சவரம் செய்யப்படாத முடி இழையின் நுனி சிறுத்திருக்கும். மாறாக, சவரம் செய்யப்பட்டுக் கத்தரிக்கப்பட்ட பிறகு வரும் புதிய முடி இழையின் நுனி கரடுமுரடாக இருக்கும். இந்த இரண்டு அம்சங்கள் காரணமாகச் சவரம் செய்யப்பட்ட கொஞ்சக் காலத்துக்கு முடி அடர்த்தியாக இருப்பது போன்ற தோற்றம் ஏற்படலாம். மற்றபடி, சவரம் செய்வதால் முடி வேகமாகவோ, அடர்த்தியாகவோ வளரும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in