Published : 05 Aug 2022 10:06 AM
Last Updated : 05 Aug 2022 10:06 AM

மம்மூட்டிக்கு வந்த காதல் கடிதங்கள்! | துல்கர் சல்மான் பேட்டி!

கடிதங்களின் காலம் முடிந்துவிட்ட தகவல் தொழில்நுட்ப யுகம் இது. ஒரு காலத்தில் அருகில் இல்லாத உறவுகள், நண்பர்களின் அன்பைச் சுமந்து வரும் கடிதங்களை வாசிக்கும்போது அவர்களுடைய குரலாகவே நம் காதுகளில் ஒலிக்கும். அப்படிப்பட்ட கடிதம் வழியாக உருவான காதலை மையப்படுத்தி உருவான ஒரு காதல் கதையை காலவோட்டத்தில் பின்னோக்கி அழைத்துச் சென்று நமக்கு அறிமுகப்படுத்தும் படமாக இன்று வெளியாக இருக்கிறது 'சீதா ராமம்'. ஸ்வப்னா சினிமா என்கிற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஸ்வப்னா தத் தயாரித்து, வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் சார்பில் வெளியாகும் இப்படத்தை தெலுங்கின் முன்னணி இயக்குநரான ஹனு ராகவபுடி இயக்கியிருக்கிறார். இதில் காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் ராணுவ வீராராகப் பணியாற்றும் ராம் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் துல்கர் சல்மான் அப்படத்தில் நடித்த அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்தார். அதிலிருந்து ஒரு பகுதி:

காதல் கதைகளில் நடிப்பது உங்களுக்குச் சாக்லேட் சாப்பிடுவது மாதிரி. இதுவரை நடித்த காதல் கதைகளிலிருந்து 'சீதா ராமம்' எப்படி வேறுபடுகிறது?

நிறைய வேறுபாடு உள்ளது. நான் நிறைய காதல் கதைகளில் நடித்திருந்தாலும் இக்கதை இதற்கு முன் நான் கேட்டிராத, பார்த்திராத ஒன்று. இதுவொரு ஒரு அசலான கதை என்பேன். உண்மைக் கதை ஒன்று, இதுபோல் கிளாசிக் தன்மையுடன் அமைவது அரிது. இப்படி ஒரு கதை உலகில் எங்கும் இதற்கு முன் வரவில்லை. திரைக்கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அது நம் கற்பனைக்கும் அப்பாற்பட்டதாக இருக்கும். இன்னொன்று இசையும் கதையும் அழகாக இணைந்திருக்கிறது. தற்போது வெளியாகியிருக்கும் ட்ரைலரில் நீங்கள் பார்த்தது குறைவு தான். பெரிய திரையில் அதை நீங்கள் ரசித்து அனுபவிக்க வேண்டும். இந்தப் படத்துக்குப் பின் காதல் கதைகளுக்கு ஒரு இடைவெளி கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்.

ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?

எனக்கும் வயதாகிக்கொண்டே செல்கிறது இல்லயா..! வித்தியாசமான முதிர்ந்த வேடங்களில் நடிக்க வேண்டும் என விரும்புகிறேன். புதிய கதாபாத்திரங்களில் அதிகமாக நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

படத்தில் இசைக்கு முக்கியத்துவம் இருக்கிறது என்கிறீர்கள். இதில் உங்களுக்கு பிடித்த பாடல் எது?

இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் அற்புதமான ஆல்பத்தை அளித்திருக்கிறார். படத்தின் இசை நன்றாக இருக்கும் என்று கதையை கேட்கும்போதே புரிந்து கொண்டேன். காஷ்மீரில் படப்பிடிப்பில் 'காணுன்னா கல்யாணம்..' என்கிற பாடல் படமாக்கப்படும்போது இந்தப் பாடல் திரையில் மாயாஜாலத்தை நிகழ்த்தும் என்பது புரிந்தது. எல்லா பாடல்களுமே காட்சி வழியாக அற்புதமானவை தான். பின்னணி இசையும் அற்புதம். இந்த ஆல்பத்தில் 'காணுன்னா கல்யாணம்..' என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்தது.

கடிதங்கள் வழியாக உருகும் உங்களுடைய சீதையைப் பற்றி..?

ஓர் உன்னதமான நாவலை படிக்கும் போது சில கதாபாத்திரங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நாம் கற்பனை செய்து கொள்கிறோம். 'சீதா ராமம்' படத்தின் கதையைக் கேட்டதும், சீதையின் வேடத்தை கற்பனை செய்து பார்த்தேன். மிருணாள் தாகூர் இந்தக் கதாபாத்திரத்தில் வந்தபோது மிகச்சிறந்த தேர்வாக தோன்றியது. படப்பிடிப்பு தளத்தில் மிருணாளை பார்த்தபோது அவரைத் தவிர வேறு யாராலும் சீதையாக நடித்திருக்க இயலாது என்பதை உணர்ந்தேன். அவருடைய கதாபாத்திரம் அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. படப்பிடிப்பு தளத்திலும், மிருணாள் தாகூர் மகிழ்ச்சியான நபராகவே வலம் வந்தார்.

படத்தில் ரஷ்மிகா மந்தானாவும் இருக்கிறாரே?

ஆமாம்! இதில் புதிய ரஷ்மிகாவை பார்ப்பீர்கள். அவர் இதற்கு முன் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்ததில்லை. திரைக்கதையில் சீதையைத் தேடிச் செல்லும் கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார். கதையை நகர்த்தி செல்லும் அற்புதமான கேரக்டர். ராஷ்மிகா அதை அழகாக, தனக்கேயுரிய துடிப்பான நடிப்பால் அழகுபடுத்தியிருக்கிறார்.

வேறு யாரெல்லாம் படத்தில் நடித்திருக்கிறார்கள்?

தெலுங்கு, தமிழ், பெங்காலி என பல்வேறு மொழிகளில் திறமை வாய்ந்த நடிகர்கள் இதில் நடித்திருக்கிறார்கள். நான் மலையாளத்திலிருந்து பிரதிநிதித்துவம் செய்திருக்கிறேன். படப்பிடிப்பு தருணங்கள் அனைத்தும் அற்புதமான அனுபவத்தை வழங்கியது. கௌதம் வாசுதேவ் மேனன் அவர்களுடன் இரண்டாவது முறையாக இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி அடைந்தேன். படத்தை விளம்பரப்படுத்துவதற்காக சென்னையை பத்திரிகையாளர்களைச் சந்தித்துவிட்டு ஹைதராபாத், விசாகப்பட்டினம், விஜயவாடா என பல நகரங்களுக்குச் சென்றோம். எங்கு சென்றாலும் ரசிகர்கள் என் மீது காட்டிய அன்பு ஆச்சரியத்தை அளித்தது. கடந்த முறை ஹைதராபாத்தில் ஒரு நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட போது, சிலர் என்னிடம்: ‘உங்களுடைய நடிப்பில் வெளியான ‘உஸ்தாத் ஹோட்டல்’ நன்றாக இருந்தது. உங்களுடைய நடிப்பும் நன்றாக இருந்தது’ என பாராட்டிய போது ஆச்சரியமாக இருந்தது. பல்வேறு டிஜிட்டல் தளங்களில் எனது படங்களை பார்த்து, திரைப்படத்தின் மீதான ஆர்வத்தை ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டிருப்பது என்னை மகிழ்ச்சி அடைய வைக்கிறது. நான் இந்தியா முழுவதும் அறியப்பட்டிருப்பதில் அதிர்ஷ்டசாலி என்பதை உணர்ந்தேன்.

சினிமாவுக்கு நடிக்க வந்திருக்காவிட்டால் என்னவாகியிருப்பீர்கள்?

பல தருணங்களில் எனக்கும் இப்படி ஒரு குழப்பமான எண்ணம் ஏற்படும். நான் எம்.பி.ஏ பட்டதாரி என்பதால், ஒருவேளை முதலீட்டாளராக அல்லது முதலீட்டு ஆலோசகராக ஆகியிருப்பேனோ என்னவோ..! எப்போதும் என்னுடைய வாழ்வில் என் தந்தை தான் எனக்கு ஹீரோ. அவரை பெருமைப்படுத்துவது எனது கடமை. வீட்டில் சினிமா பற்றி விரிவாக பேசுகிறோம். என் கதைகளை ஒற்றை வரியில் நான் அப்பாவிடம் சொல்வேன். நன்றாக இருந்தால் அவர் ரசிப்பார். நான் என் தந்தையின் தீவிர ரசிகன்.

80 மற்றும் 90களில் ரசிகைகள் உங்கள் அப்பாவுக்கு எழுதிய காதல் கடிதங்கள் பலவற்றை அவர் பாதுகாத்து வருவதாகக் கேள்விப்பட்டோம். அவற்றை நீங்கள் படித்திருக்கிறீர்களா?

வாய்ப்பே இல்லை. அப்படியே இருந்தாலும் அவை அப்பாவுடைய பொக்கிஷங்கள் என்று கருதி அவற்றை மதிக்கிறேன்.

திரைக்கதை, இயக்கம் ஆகியவற்றில் இறங்கும் எண்ணம் உண்டா?

தற்போதைக்கு நேரமில்லை. ஆனால் எதிர்காலத்தில் படங்களை இயக்கும் எண்ணமிருக்கிறது. எனது இயக்கத்தில் ஒரு படம் தயாராகி வந்தால், அது பார்வையாளர்களின் கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருக்கும். அதற்கு நான் தயாராக வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x