Published : 02 Oct 2016 12:22 PM
Last Updated : 02 Oct 2016 12:22 PM

வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்: இமெயிலே நம் இனிஷியல்!

‘நல்ல காலம் பொறக்குது... உங்க வீட்ல ஒருத்தருக்கு லட்ச ரூபா பரிசு விழப் போகுது... வெளிநாட்டில் வேலை கிடைக்கப் போகுது... நல்ல காலம் பொறக்குது’ என்று குடுகுடுப்பைக்காரர் வீட்டு வாசலுக்கு வந்து குரல் கொடுப்பதாக நினைத்துவிட்டீர்களா? அதுதான் இல்லை. உங்கள் இமெயில் இன்பாக்ஸுக்கு வந்திருக்கும் மெயில்கள்தான் இப்படி சைபர் குடுகுடுப்பைக்காரர்போலக் கூப்பாடு போட்டு, உங்களைக் கவிழ்க்கக் காத்துக்கொண்டிருக்கின்றன.

இமெயில்கள் உங்களுக்குப் பரிசு கொடுக்கக் காத்திருக்கும்; உங்களுக்கு வெளிநாட்டு வேலை வாங்கித்தர தவமிருக்கும்; உங்கள் பெயரில் கோடிக் கணக்கில் டாலர்களை டெபாசிட் செய்யத் துடிக்கும். எச்சரிக்கையாக இருங்கள். எதையும் நம்பிவிடாதீர்கள். ஆனாலும், இமெயில்தான் இணைய உலகில் நம் அடையாளம் என்பதையும் மறந்துவிடாதீர்கள்.

இணைய உலகில் நம் திறமையின் அடிப்படையில் நாம் செய்துகொண்டிருக்கும் பணியை வெர்ச்சுவல் பிசினஸாக்கி (இணைய பிசினஸ்), நடைமுறை விளம்பரங்களோடு இணைய விளம்பரத்தையும் செய்து, நம் வருமானத்தைப் பெருக்குவதற்கு எல்லோருக்குமே ஆசையும் இருக்கிறது, தேவையும் அதிகரித்துள்ளது.

இணைய உலகில் நாம் சுகமாகப் பயணம் செய்யவும், அது இனிதே அமையவும் நமக்கே நமக்கான இணைய அடையாளத்தைப் பெறுவதுதான் முதன்மையான வேலை.

அடையாளத்தை உறுதி செய்வோம்

ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டை, பான் கார்டு போன்றவை நம் அடையாளத்துக்கு ஆதாரமாக விளங்குவதைப்போல, இணைய உலகில் நம் இனிஷியலாக இருப்பது இமெயில்தான். இதுவரை இமெயில் முகவரி இல்லை என்றால் உடனடியாக இமெயில் முகவரியை உருவாக்கிக்கொள்ள வேண்டும். ஏராளமான வெப்சைட்கள் இலவசமாக இமெயில் முகவரிகளை வழங்கினாலும், ஜிமெயிலில் நமக்குப் பொருத்தமான இமெயில் முகவரியை உருவாக்கிக்கொண்டால் எல்லாச் சமூக வலைதளத் தேவைகளுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். www.gmail.com என்ற வெப்சைட் முகவரியை டைப் செய்து, விண்ணப்பப் படிவம் ஒன்றைப் பூர்த்தி செய்தால் உங்களுக்கே உங்களுக்கான இமெயில் தயார்.

இமெயில் என்பது கடிதப் போக்கு வரத்துக்கு மட்டுமே என்றிருந்த நிலை மாறி, அதுவே பேஸ்புக், டிவிட்டர், லிங்க்டு இன், யூ-டியூப், வெப்சைட் என்று எல்லாச் சமூக வலைதளங்களின் நுழைவுச் சீட்டாகவும் பயன்படுவதால், இமெயில் முகவரி சுருக்கமாக இருந்தால் வசதியாக இருக்கும்.

நெட்பேங்கிங் முக்கியம்

வங்கி, மொபைல், இன்டர்நெட் மூன்றும் ஒன்றோடொன்று இணைந்து செயல்படுவதால் நம் மொபைல் எண்ணையும் இமெயில் முகவரியையும் அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்கக் கூடாது. ஆன்லைனில் பொருட்களை வாங்க வேண்டுமென்றாலும் விற்பனை செய்ய வேண்டுமென்றாலும் ஆன்லைன் வங்கிப் பரிவர்த்தனை அவசியம். டெபிட் கார்ட், கிரெடிட் கார்ட் இவற்றுடன் நெட்பேங்கிங் வசதியையும் பெறுவது முக்கியம். இதற்கு நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியை அணுகவும். நெட்பேங்கிங் பாஸ்வேர்டையும் ரகசியமாக வைத்திருக்க வேண்டும்.

நெட்பேங்கிங் மூலம் பணப் பரிவர்த்தனை நடைபெறும்போது வங்கியில் நாம் பதிவு செய்துவைத்துள்ள நம் மொபைல் எண்ணுக்கு OTP எனப்படும் ஒன் டைம் பாஸ்வேர்ட் அனுப்பப்படும். அதை நாம் டைப் செய்தால் மட்டுமே நம் கணக்கிலிருந்து பணம் அனுப்பப்படும். அதுபோல இமெயில் மூலமும் நம் நெட்பேங்கிங் அக்கவுண்ட்டுக்குள் லாகின் செய்யப்பட்டிருப்பதையும், பணப் பரிவர்த்தனை நடைபெறுவதையும் எச்சரிக்கைத் தகவலாக அனுப்பி வைப்பார்கள்.

இவை எல்லாம் நம்மை அறியாமல் வேறு நபர்கள், நம் அக்கவுண்ட்டில் நுழைந்து நம் பணத்தைக் களவாடிச் செல்லாமல் இருக்க, அவர்கள் கொடுக்கும் பாதுகாப்பு. அடிக்கடி நாம் இமெயில் முகவரியையும் மொபைல் எண்ணையும் மாற்றிக்கொண்டே இருந்தால் அவர்கள் அனுப்பும் எச்சரிக்கைத் தகவல்கள் நமக்கு வராமல் போகும். இப்போது எல்லோருமே ஒன்றுக்கும் மேற்பட்ட மொபைல் எண்களை வைத்திருப்பதால் ஏதேனும் ஓர் எண்ணை நிரந்தரமாக வைத்துக்கொண்டு, அதை நம் வங்கிக் கணக்குக்காகப் பதிவு செய்து வைத்திருந்தால் மட்டுமே இணைய உலகில் இனிமையாகவும் பயமில்லாமலும் பயணிக்க முடியும்.

வங்கியிலிருந்து வருவதைப் போன்றே போலி இமெயில்கள் வந்திருந்தால், வங்கியின் வெப்சைட் முகவரி https என்ற பாதுகாப்பு அடையாளத்துடன் தொடங்கியிருக்கிறதா என்று பார்க்கவும். https என்பது Hyper Text Transfer Protocol Secure என்று பொருள். அப்படி இல்லை என்றால் அது பொய்யான நபர் அனுப்பியுள்ள இமெயில் என்று அர்த்தம். https:// என்று வந்திருந்தாலும், உங்கள் வங்கியை அணுகி, அவர்களிடம் சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ளவும். அதுபோல மொபைல் எண்ணுக்கு வரும் போலி எஸ்.எம்.எஸ்.களிலும் கவனமாக இருக்கவும். எந்த வங்கியும் உங்கள் நெட்பேங்கிங் யூஸர் நேம், பாஸ்வேர்ட் போன்றவற்றைக் கேட்காது.

ஆன்லைன் பிசினஸுக்கு இமெயிலே ஆதாரம் என்பதால், இமெயில் பாஸ்வேர்டை மறக்கக்கூடாது. அப்படி மறந்துவிட்டால் என்னென்ன நடக்கும், அதிலிருந்து எப்படி மீள்வது என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்.

(சம்பாதிப்போம்)
கட்டுரையாளர், மென்பொருள் நிறுவன நிர்வாக அதிகாரி
தொடர்புக்கு: compcare@hotmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x