மனஉறுதியோடு புகையை நிறுத்தினேன்

மனஉறுதியோடு புகையை நிறுத்தினேன்
Updated on
2 min read

இன்றைய இளைஞர்கள் மத்தியில் புகைபிடிப்பதும் குடிப்பழக்கமும் சகஜமாகி விட்டதாகத் தோன்றுகிறது. அதேநேரத்தில் பல இளைஞர்கள் உத்வேகத்துடன் தீய பழக்கங்களை எதிர்க்கிறார்கள். அவர்களில் சிலர் இதோ:

யுகேஷ்

என்னுடைய 26-ம் வயதில் புகைபிடித்தேன். நண்பர்களின் தூண்டுதலால் விளையாட்டுத் தனமாக ஓரிரு முறை மட்டுமே பிடித்தேன். அதன்பின் மனது லேசாகுவதற்கு சிகரெட்டைத் தேடியது. எந்தக் காரணத்தைக் கொண்டு அப்பழக்கத்துக்கு அடிமையாகிவிடக் கூடாது எனத் தெளிவாக இருந்ததால், அதன்பின் பிடிக்கவில்லை. என்னைக் கேட்டால் ஒரு ஆர்வத்தில்கூடப் பிடித்துப் பார்க்க வேண்டாம் என்றுதான் சொல்வேன்.

சிவசங்கர முரளி

என்னுடைய 18 வயதில் முதன்முதலில் நண்பர்கள் புகைபிடிக்க அழைத்தார்கள். ஆரம்பத்தில் வேண்டாமென மறுத்தபோது, தனித்து விடப்பட்டேன். அதனால் நண்பர்களோடு சேர்ந்து புகைபிடித்துப் பார்த்தேன். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் போது அந்தப் பழக்கம் தீவிரமடைந்தது. ஒரு கட்டத்தில் இமயமலை ஏறும் வாய்ப்பு கிடைத்தபோது மன உறுதியோடு இப்பழக்கத்தை நிறுத்தினேன். அதன்பின் தொடவில்லை.

ந.சகுந்தலா

புகை பிடிக்கும் ஆண்களையோ பெண்களையோ பார்த்தாலே கோபம் வரும். அவர்கள் பிடிப்பது மட்டுமல்லாமல் புகைபிடித்து விடும் புகையைச் சுவாசிக்கும்போது எனக்கு மூச்சு விடுவது கடினமாக இருக்கிறது. இன்று புகைப்பிடிப்பதும் மது அருந்துவதும் ஃபேஷனாக மாறச் சினிமா முக்கியக் காரணம். அதை சினிமா தவிர்த்தாலே இளைஞர்களில் சிலராவது அப்பழக்கத்துக்கு ஆளாகாமல் தப்பிக்கலாம்.

கௌரி சங்கர்

நானோ என் தம்பியோ புகைபிடிப் பதில்லை. அந்தப் பெருமை எங்கள் அப்பாவையே சேரும். அவரிடம் எந்தத் தீய பழக்கமும் இல்லாததால், அவரைப் பார்த்து நாங்களும் அப்படியே வளர்ந்தோம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in