அகிலன் 100: வாசக உலகை ஆண்டவர்

அகிலன் 100: வாசக உலகை ஆண்டவர்
Updated on
1 min read

இன்று எழுத்தாளர் அகிலனின் நூறாவது பிறந்தநாள். இன்று அவரைப் பற்றி அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

• தமிழுக்காக முதல் ஞானபீட விருது பெற்றவரான அகிலன் 1922 ஜூன் 27 அன்று புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் பி.வி.அகிலாண்டம். பள்ளிப் பருவத்தில் ‘சக்தி வாலிபர் சங்கம்’ என்கிற அமைப்பை உருவாக்கி, கள்ளுக்கடை மறியல், அந்நியத் துணி புறக்கணிப்பு போன்ற போராட்டங்களில் ஈடுபட்டார்.
• இதழ்களில் சிறுகதைகள் எழுதிவந்தார். 1938இல் தான் படித்துவந்த பள்ளியின் காலாண்டு சஞ்சிகைக்காக ‘அவன் ஏழை’ என்கிற கதையை முதன்முதலாக எழுதினார். கதை நடையைப் பார்த்து சந்தேகம் அடைந்த தமிழ் ஆசிரியர், ‘எங்கே திருடினாய்?’ என்று கேட்டார். இவர் கோபத்துடன், ‘என் கதையை திருப்பிக் கொடுத்துடுங்க. பிரசுரிக்க வேண்டாம்’ என்றார். உண்மையை அறிந்த ஆசிரியர், அவரைத் தட்டிக்கொடுத்தார்.
• இவருடைய முதல் நாவல் ‘மங்கிய நிலவு’ 1944இல் வெளிவந்தது. மொத்தம் 20 நாவல்கள், 200 சிறுகதைகள், கட்டுரைகள், நாடகம், சிறுவர் கதைகள், மொழிபெயர்ப்புகளைப் படைத்துள்ளார். இலக்கியம் மனிதனை மேம்படுத்த வேண்டும் என்பதில் கவனமாக இருந்தவர். சமூக அக்கறை, சுவையான கதை, உயிர்த் துடிப்பான கதாபாத்திரங்கள், அழகிய, எளிய நடை ஆகியவை இவரது படைப்புகளின் சிறப்பம்சங்கள்.
• இந்திய மொழிகள் மட்டுமின்றி, உலகின் பல மொழிகளிலும் இவரது படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மேடை நாடகங்கள், தொலைக்காட்சி, வானொலி நாடகங்கள் எனப் பல வடிவங்களில் உலகின் பல பகுதிகளிலும் இவரது படைப்புகள் வலம்வருகின்றன.
• இவரது ‘பாவை விளக்கு’ நாவல் அதே பெயரிலும், ‘கயல்விழி’ நாவல் ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ என்கிற பெயரிலும் திரைப்படங்களாக வெளியாகின. ‘ஆனந்த விகடன்’, ‘குமுதம்’, ‘கலைமகள்’, ‘தினமணி’ ஆகிய இதழ்களில் 30 ஆண்டுகளுக்கு மேலாக இவர் எழுதிய சிறுகதைகள் தொகுக்கப்பட்டு 2 பாகங்களாக வெளிவந்தன.
• ‘வேங்கையின் மைந்தன்’ நாவலுக்காக 1963இல் சாகித்ய அகாடமி விருதைப் பெற்றார். ‘சித்திரப்பாவை’ நாவலுக்காக இந்தியாவில் எழுத்தாளர்களுக்கு அளிக்கப்படும் மிக உயரிய அங்கீகாரமான ‘ஞானபீட’ விருதை 1975இல் பெற்றார். ‘நெஞ்சின் அலைகள்’, ‘பெண்’, ‘எங்கே போகிறோம்’ ஆகிய நாவல்கள், ‘சத்ய ஆவேசம்’, ‘ஊர்வலம்’, ‘எரிமலை’ உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகள், சிறுவர் நூல்கள், பயண நூல்கள், கட்டுரைகளைப் படைத்துள்ளார்.
• தமிழ் நவீன இலக்கியத்துக்குத் தவிர்க்க முடியாத பங்களிப்பை வழங்கியவரான அகிலன் 1988இல் மறைந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in