Last Updated : 15 May, 2016 01:18 PM

 

Published : 15 May 2016 01:18 PM
Last Updated : 15 May 2016 01:18 PM

வானவில் பெண்கள்: என் இசைக்குக் காரணம் அப்பா

இசையைப் படிப்பதற்காகச் சென்னைக்கு வந்து சென்றுகொண்டிருந்த செளம்யா, அப்பொழுது குருகுலவாசம் செய்தது டாக்டர் எஸ்.ராமநாதன் இல்லத்தில். தன்னுடைய தந்தையின் ஆழ்ந்த இசை அறிவே அவரை இந்தத் துறைக்கு இழுத்தது என்றால் மிகையில்லை. பேசத் தொடங்குவதற்கு முன்னரே பாடத் தொடங்கிவிட்டார் சௌம்யா என்றுதான் சொல்ல வேண்டும். தந்தையின் தாலாட்டைக் கேட்டு வளர்ந்ததுதான் பாடகியாக உருவாகக் காரணம் என்று சொல்கிறார். அற்புதமான குருவுக்குக் கிடைத்த அடக்கமான சிஷ்யை, கர்நாடக இசைப் பாடகி செளம்யா. சுகிர்தம் ஃபவுண்டேஷன் என்ற நிறுவனத்தைத் தொடங்கி, பல சேவைகளைச் செய்துவரும் அவர், வளர்ந்துவரும் கர்நாடக இசைப் பாடகர்களுடன் இணைந்து சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்திருக்கிறார். அஹோபில மடம் ஆஸ்தான விதூஷகியான இசைப் பேரொளி செளம்யாவுடன் பேசியபோது...

இசையின் மீது ஆர்வம் ஏற்பட்டது ஏன்?

ஆறு வயதிலேயே கேரளாவில் இருந்து சென்னைக்கு வந்து இசை பயிலக் காரணம் அப்பாவுடைய இசை ஆர்வம்தான். பள்ளி விடுமுறை விட்டால் இங்கேதான் வருவோம். பள்ளியில் சுற்றுலா சென்றால்கூட, எனக்கு இங்கே அருமையான குருகுலவாசம். நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது ராமநாதன் சார் சொல்லி, முக்தா அம்மாவிடம் இசை பயின்றேன். இசை என்னுள் ஊறிக்கொண்டேயிருந்தது. இப்போதும் அப்படித்தான். புதிதாக எங்கிருந்தோ ஆர்வம் வர வேண்டும் என்பதில்லையே. ஏற்கெனவே உள்ளதை மெருகேற்றும் வேலையைத்தான் செய்கிறேன்.

என்ன லட்சியத்துடன் கர்னாடக சங்கீதம் கற்றீர்கள்?

மேடை ஏறி கச்சேரி பண்ண வேண்டும் என்ற லட்சியம் எல்லாம் வைத்துக்கொண்டு பாட்டு கற்கத் தொடங்கவில்லை. கர்னாடக சங்கீதத்தை ஆழமாக கற்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும்தான் இருந்தது. கலை, கலைக்காகத்தானே.

இப்போதும் இசை கற்கிறீர்களாக?

நிச்சயமாக. அப்பாகிட்ட கற்றுக்கொள்கிறேன். ருக்குமணி ரமணிகிட்ட பாபநாசம் சிவன் பாடல்கள் கற்றுக்கொண்டேன். ராஜாராமிடம் மைசூர் வாசுதேவாசார்யார் கீர்த்தனைகள் கற்றுக் கொண்டேன்.

ஐஐடி போன்ற பெரும் கல்வி நிறுவத்தில் படித்த நீங்கள் இந்தத் துறையைத் தேர்ந்தெடுக்க என்ன காரணம்?

ஐஐடியில் பட்ட மேற்படிப்பு படித்தேன். அதற்குமுன்னரே பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்பொழுதே மியூசிக் அகாடமியில் பாடத் தொடங்கி விட்டேன். இசையா? கல்வியா? என்ற ஊசலாட்டமே இல்லை. இசைதான் என்ற முடிவு தானாகவே என்றோ ஏற்பட்டுவிட்டது.

படிப்பு தனி, பாட்டு தனி என்பதெல்லாம் இல்லை என்று வாழ்ந்து காட்டியவர் என்னோட குரு ராமநாதன். அவர் பாடுவது, பாட்டுக் கற்றுத்தருவது என்பதுடன், இசை ஆராய்ச்சியையும் செய்து கொண்டுதானே இருந்தார்! அதனால்தான் என்னாலும் இசை ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற முடிந்தது.

உங்கள் மகன் கர்னாடக இசை கற்றுக்கொள்கிறாரா?

இந்த வருடம் பிளஸ் 2 என்பதால் நேரம் ஒதுக்க முடியவில்லை. அவனுக்கு மேற்கத்திய இசையில் ஆர்வம் இருக்கிறது. கிடார் வாசிக்கிறான். திரைப்படப் பாடல்கள் பாடிக்கொண்டு இருக்கிறான்.

உங்க குருவைப் பற்றி சொல்லுங்களேன்.

அவராலதான் இன்றும் நான் இந்த நிலைமையிலே இருக்கிறேன். அவரை இசைப் பெட்டகம் என்றுதான் சொல்லணும். எளிமையானவர். கோபப்பட்டதே இல்லை. கடிஞ்சு ஒரு வார்த்தைகூட சொன்னதில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x