Published : 14 Jun 2022 12:47 PM
Last Updated : 14 Jun 2022 12:47 PM

நட்சத்திரங்களாக மாறும் கதைகள்! - கதை - சரிதா ஜோ

வானதி இரவு சாப்பிடும் போது, அவள் அம்மா கதைகள் சொல்வார். அன்று மொட்டை மாடியில் அமர்ந்து, கதை சொல்லிக்கொண்டே சாப்பிட வைத்துக்கொண்டிருந்தார் விஜயா.

“எனக்கு நீங்க கதை சொல்றீங்க... தனியா இருக்கும் அந்த நிலாவுக்கு யார் கதை சொல்வாங்க அம்மா?" என்று வானதி கேட்டதும், திகைத்துவிட்டார் விஜயா.

சமாளித்துக்கொண்டு, "அவங்க அம்மா தான்" என்றார் விஜயா.

"நிலாவுக்கு அம்மா இருக்காங்களா?"

"ம்... இந்தப் பூமிதான் நிலாவோட அம்மா.”

நிலாவைப் பற்றி ஏராளமான கேள்விகளைக் கேட்டபடியே சாப்பிட்டு முடித்தாள் வானதி.

இரவு சரியாகத் தூக்கம் வரவில்லை. ஜன்னல் வழியாக நிலா வெளிச்சம் அறை முழுவதும் பரவிக்கொண்டிருந்தது.

எழுந்து ஜன்னலைத் திறந்தாள் வானதி. தகதகவென்று நிலா ஜொலித்துக்கொண்டிருந்தது.

“எங்கம்மா நிறைய கதைகள் சொல்வாங்க. உங்கம்மா சொல்வாங்களா?” என்று நிலாவைப் பார்த்துக் கேட்டாள் வானதி.

பதில் வரவில்லை. மீண்டும் அதே கேள்வியைக் கேட்டாள் வானதி. அப்போதும் நிலா அமைதியாகவே இருந்தது.

சட்டென்று வானதிக்கு அழுகை வந்துவிட்டது. அதைப் பார்த்துப் பதறிய நிலா, “அம்மா என்றாலே குழந்தைகளுக்குக் கதைகள் சொல்லத்தானே செய்வார்கள்? என் அம்மாவும் எனக்குக் கதைகள் சொல்வார்” என்று பதில் அளித்தது.

நிலாவின் குரல் கேட்டு, வானதியின் அழுகை சட்டென்று நின்றுவிட்டது.

"நிஜமாகத்தான் சொல்றீயா?”

"ஆமாம். தூரத்தில் மினுக்கிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு நட்சத்திரமும் என் அம்மா சொன்ன கதைதான்!” என்றது நிலா.

“என்னது வானத்தில் இருக்கிற நட்சத்திரங்கள் எல்லாம் கதைகளா!"

"ஆமாம், என் அம்மா கூறிய கதைகள் எல்லாம் நட்சத்திரங்களாக மாறி, வானத்தில் ஜொலித்துக் கொண்டிருக்கின்றன" என்றது நிலா.

"அப்படியா!" என்று ஆச்சரியம் தாங்காமல் கண்கள் விரிய நிலாவைப் பார்த்துக் கேட்டாள் வானதி.

"ஆமாம்! என் அம்மா மட்டுமில்லை... எந்த அம்மா கதை சொன்னாலும் அந்தக் கதை ஒரு நட்சத்திரமாக மாறிவிடும்!”

"அப்படியா! என் அம்மாவின் கதைகளும் நட்சத்திரங்களாக மாறிவிட்டதா?”

"உங்க அம்மா தினமும் புதுசா, சொந்தமாகக் கதை சொன்னால் அது நட்சத்திரமாக மாறும். புத்தகத்தில் படித்தோ யாரோ சொன்னதைக் கேட்டோ கதை சொன்னால், நட்சத்திரமாக மாறாது!”

"ஐயையோ... எங்கம்மா படிச்ச, கேட்ட கதைகளைத் தானே சொல்றாங்க?" என்று வருத்தப்பட்டாள் வானதி.

“கவலைப்படாதே, உன் அம்மாவை இனிமேல் புதுக் கதைகளைச் சொல்லச் சொல்லு. கொஞ்சம் பெரிசானதும் நீயே புதுசா கதைகளை உருவாக்கு. என் அம்மா கிட்ட கதை கேட்கும் நேரம் வந்துவிட்டது. நான் வரேன்” என்று சொல்லிவிட்டு, ஓடிவிட்டது நிலா.

மறுநாள் இரவு வானதி இட்லி சாப்பிடும்போது கதை சொல்ல ஆரம்பித்தார் விஜயா.

“அம்மா, இது பழைய கதை. நீங்களே புதுசா ஒரு கதையைச் சொல்லும்போதுதான், அது அழகான நட்சத்திரமாக மாறி, வானத்துல ஜொலிக்கும்” என்ற வானதியை ஆச்சரியமாகப் பார்த்தார் விஜயா.

"நான் புதுசா கதை உருவாக்கறனோ இல்லையோ... நீ நிச்சயம் எழுத்தாளராகத்தான் வருவே... எவ்வளவு அழகாகக் கற்பனை செய்யறே!” என்று வியந்தார் விஜயா.

உடனே ஜன்னல் வழியே நிலாவைப் பார்த்தாள் வானதி. அது குறும்பாகச் சிரித்தது. வானதியும் சிரித்துவிட்டு, சாப்பிட ஆரம்பித்தாள். தன் மகளின் கற்பனை வளத்துக்கு நிச்சயம் எழுத்தாளராக வருவாள் என்று வானதியின் அப்பாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார் விஜயா.

இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x