Published : 27 May 2022 07:45 AM
Last Updated : 27 May 2022 07:45 AM

கோலிவுட் ஜங்ஷன்: ஏ.ஆர். முருகதாஸின் புதிய படம்!

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், ஓர் இடைவெளிக்குப் பின் படத் தயாரிப்பில் இறங்கியிருக்கிறார். பர்பிள் புல் என்டெர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து அவர் தயாரித்து வரும் படத்துக்கு ‘1947 ஆகஸ்ட் 16’ என்று தலைப்பு சூட்டியுள்ளனர். இந்தியா சுதந்திரம் பெற்ற மறுநாள் செங்காடு என்கிற கிராமத்தில் கதை நடைபெறுகிறது. ஒரு கிராமத்து வீரன், பிரிட்டிஷ் படையுடன் போரிடுவதுதான் கதை. வரலாறும் கற்பனையும் கலந்த இந்தப் படத்தை, ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளரான என்.எஸ்.பொன்குமார் இயக்கி வருகிறார். கௌதம் கார்த்திக் நாயகனாக நடிக்கும் இதில், கதாநாயகியாக அறிமுகமாகிறார் புதுமுகம் ரேவதி.

தங்கர் பச்சான் - ஜி.வி.பிரகாஷ் கூட்டணி!

‘அழகி’ தொடங்கி ‘களவாடிய பொழுதுகள்’ வரை, மனித உறவுகளை மையமாகக் கொண்ட தரமான படங்களைத் தந்தவர் தங்கர் பச்சான். அவருடைய மகன் விஜித் பச்சான் நாயகனாக நடித்துள்ள ‘டக்கு முக்கு டிக்கு தாளம்’ என்கிற படத்தை இயக்கி, தயாரித்திருந்தார். விரைவில் அந்தப் படம் வெளியாகவிருக்கும் நிலையில், தற்போது, ‘கருமேகங்கள் ஏன் கலைகின்றன' என்கிற புதிய படத்தை இயக்கவிருக்கிறார். வாவ் மீடியா என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் டி.வீரசக்தி தயாரிக்கிறார். இதில் பாரதிராஜா, யோகி பாபு, கௌதம் மேனன் ஆகிய மூவரும் முக்கியமான கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்கிறார்கள். ஒளிப்பதிவை என்.கே.ஏகாம்பரம் மேற்கொள்ள, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

ரசிகர்களிடம் மன்னிப்பு!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல் தயாரித்து, நடித்துள்ள படம் 'விக்ரம்'. கமலுடன் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் என இரண்டு பெரிய நட்சத்திரங்கள் இணைந்துள்ள இந்தப் படத்துக்குத் தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியிருக்கிறது. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ், வரும் ஜூன் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடவிருக்கும் நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. அதில் கலந்துகொண்டு பேசிய கமல்: “கடந்த 4 வருடமாக எனது ரசிகர்களைக் காக்க வைத்ததற்காக அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

இந்தப் படத்தின் மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபுவுக்கு இது 600-வது படம். அவருக்கு என் வாழ்த்துகள். ஒரு நல்ல படத்தை, வித்தியாசமான படத்தைக் கொடுக்க வேண்டும் என்று முயன்று அதில் வெற்றிபெற்றிருக்கிறோம். அதேபோல் இதுவரை எட்டாத வியாபாரத்தை இந்தப் படம் எட்ட வேண்டும் என்று நினைத்தோம். அதுவும் சாத்தியமானது. இதுவரை நான் சினிமாவில் ஈட்டியதை சினிமாவில்தான் முதலீடு செய்து வந்துள்ளேன். இம்முறை சினிமாவில் ஈட்டியதில் ஒரு பகுதியை மக்களுக்காக முதலீடு செய்ய விரும்புகிறேன். நான் ஒரு ரூபாயை அதற்காகக் கொடுத்தால், எனது ரசிகர்கள் இருபது ரூபாயைக் கொடுத்து வந்திருக்கிறார்கள்” என்று தனது ரசிகர்களைப் பாராட்டிப் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x