Published : 30 May 2016 01:30 PM
Last Updated : 30 May 2016 01:30 PM

ஒரு திட்டம் பலவித பயன்கள்!

பொதுவாக பட்ஜெட்டில் ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டால், அது செயல்பாட்டுக்கு வர குறைந்தது மூன்று மாதங்களாவது ஆகும். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உடனே அமலுக்கு வருவது விலை உயர்வு மட்டும்தான். ஆனால் இம்முறை மாறுதலாக ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உடனே செயல்பாட்டுக்கு வந்துள்ளது கார் முனையம்.

ரயில் ஆட்டோ ஹப் (rail auto hub) தமிழகத்தில் ஏற்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி அது காஞ்சி புரத்தை அடுத்த வாலாஜாபாத்தில் செயல்பாட்டுக்கே வந்துள்ளது.

பிப்ரவரி மாதம் தனது பட்ஜெட் உரையில் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு குறிப்பிட்டு அந்த முனையத்தை மார்ச் 1-ம் தேதி தொடங்கி வைத்த நிகழ்வு பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. அந்த முனையத்திலிருந்து கார்கள் ரயிலில் ஏற்றப்பட்டு ரயில்வேத்துறைக்கு ரூ.16.37 லட்சம் வருமானத்தையும் பெற்றுத் தந்துள்ளது. சென்னையிலிருந்து 100 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள வாலாஜாபாத் ரயில் நிலையம் காஞ்சீபுரம் மாவட்டத் தில் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையம் இப்பகுதியில் அமைந்துள்ள நிசான், ஹூண்டாய், ஃபோர்டு ஆகிய கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மையப் பகுதியாகத் திகழ்கிறது.

முதல் கட்டமாக ஹூண்டாய் நிறுவனம் இந்த முனையத்திலிருந்து 124 கார்களை அசாம் மாநிலம் காம்ரூப் மாவட்டத்துக்கு ரயில் மூலம் அனுப்பியது. கார்களை ஏற்றிச் செல்வதற்கேற்ப விசேஷமாக வடிவமைக்கப்பட்ட ரயில் வேகன்களில் இவை ஏற்றப்பட்டன. மொத்தம் 25 வேகன்கள் இதற்கென தயாரிக்கப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றிலும் 5 கார்களை ஏற்ற முடியும்.

தண்டவாளத்தின் மையப் பகுதியில் போடப்பட்ட சிமென்ட் தளத்தில் கார்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு அவை வேகன்களில் ஏற்றப்பட்டது கண்கொள்ளாக் காட்சியாகும். தமிழகம் மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு கார்களை இதுபோன்ற வேகன்களில் அனுப்ப முடியும். இந்தியாவின் எந்த பகுதிக்கும் ரயில் வேகன்களில் அனுப்ப இந்த முனையம் வழியேற்படுத்தியுள்ளது. இது தவிர தற்போது துறைமுகத்துக்குக் கார்களை கொண்டு வர டிரக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. சாலை மார்க்கமாக அவற்றைக் கொண்டு வருவதால் வாகன நெரிசலில் சிக்க நேரிடுகிறது.

புதிய முனையம் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் கார் தயாரிப்பு நிறுவனங்கள் இங்கிருந்து கார்களை வேகன்கள் மூலம் சென்னைத் துறைமுகம் மற்றும் எண்ணூர் துறைமுகங்களுக்கு அனுப்ப முடியும். வாலாஜாபாத் ரயில் நிலையம் செங்கல்பட்டு திருமால்பூர் மார்க்கத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து அரக்கோணம் செல்ல முடியும். அதேபோல சென்னை கடற்கரைக்கும் ரயில் வழிப் பாதை உள்ளது. அரக்கோணம் மார்க்கமாக நாட்டின் எந்தப் பகுதிக்கும் கார்களை எடுத்துச் செல்ல முடியும். சென்னை கடற்கரை அடுத்து சென்னை துறைமுகத்துக்கு கார்களை வேகன்கள் மூலம் கொண்டு வரவும் முடியும்.

ரயில் வேகன்கள் மூலம் விரைவாக துறைமுகத்துக்குக் கொண்டு வர முடியும் என்பதால் கார் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த வழியை தேர்வு செய்யும். புதிதாக உருவாக்கப்பட்ட ஆட்டோ முனையத்தில் 300 கார்களை நிறுத்தி வைக்க முடியும். புதிய முனையம் கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மிகுந்த உதவியாக அமைந்துள்ளது. ரயில்வேக்கு வருவாயை ஈட்டித் தருவதாகவும் அமைந்துள்ளது. லாரிகள் மூலமாக அனுப்புவது குறையும்போது சுற்றுச் சூழலும் ஓரளவு காக்கப்படும் என்கின்றனர்.

ஒரு திட்டத்தில் பலவித பயன்கள் என்பது இதுதானோ?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x