Last Updated : 11 May, 2022 05:55 PM

 

Published : 11 May 2022 05:55 PM
Last Updated : 11 May 2022 05:55 PM

சென்னையில் பேருந்துப் பயணத்தை எளிதாக்கும் செயலி

மெட்ரோ ரயில், ஒலோ, உபெர், ரேபிடோ, ஷேர் ஆட்டோ போன்று எத்தனையோ போக்குவரத்து வசதிகள் சென்னையில் உள்ளன. இருப்பினும், சென்னை மக்களின் முதன்மையான போக்குவரத்துத் தேர்வாக MTC எனப்படும் மாநகரப் போக்குவரத்துக் கழகமே இன்றும் உள்ளது. ஆட்டோ செல்லாத இடங்களுக்குக்கூட செல்வதாலோ என்னவோ, அந்த அளவுக்கு அது சென்னை மக்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்துள்ளது.

சென்னை முழுவதையும் இணைக்கும் அதன் வழித்தடங்கள், எளிமையாக அணுகும் வசதி, குறைவான கட்டணங்கள், மாணவர்களுக்கும் பெண்களுக்கும் இலவசப் பயணங்கள் போன்று அதன் வசதிகள் சென்னை மக்களின் வாழ்வைத் தொடர்ந்து எளிதாக்கி வருகின்றன; சென்னையின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தி வருகின்றன. இன்று எம்டிசி பேருந்துகளில் மட்டும் தினமும் 25 லட்சம் பேர் பயணிக்கின்றனர்.

எத்தனையோ சிறப்புகள் இருந்தாலும், குறைகள் இல்லாமல் எந்த ஓர் அமைப்பும் இருக்க முடியாதே. சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்திலும் குறைகள் உள்ளன. அந்தக் குறைகளில் 'பேருந்துகளின் வருகைத் தாமதம்' முக்கியமானது. மக்களைத் தினமும் நேரடியாகப் பாதிக்கும் பிரச்சினை இது. மக்களின் நேரத்தை வீணாக்குவதோடு அது அவர்களின் உழைப்பையும் செயல்திறனையும் விரயமாக்குகிறது.

சென்னை போன்ற பெருநகரங்களில், பேருந்துகள் தாமதமாக வருவதைத் தவிர்க்க முடியாது. நகரெங்கும் நடைபெற்றுவரும் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள், தொடர்ந்து அதிகரித்து வரும் தனியார் வாகனங்கள், மக்கள் நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்கள் அந்த அளவுக்கு இன்று அதிகமாக உள்ளன. மக்களின் பெரும் இன்னலுக்கும் எரிச்சலுக்கும் உள்ளாக்கும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வளிக்கும் விதமாகத் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தி இருக்கும் செயலியே 'பஸ்' செயலி.

இன்று சென்னையில் மட்டும் 6,026 பேருந்து நிறுத்தங்கள் இருக்கின்றன. அவற்றின் ஊடே 3,500க்கும் மேற்பட்ட பேருந்துகளை, 600க்கு மேற்பட்ட வழித்தடங்களில் எம்டிசி இயக்கிவருகிறது. முக்கியமாக, இந்தப் பேருந்துகள் அனைத்திலும் ஜி.பி.எஸ். வசதி பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஜி.பி.எஸ். வசதி முன்னர் போக்குவரத்துக்குக் கழகத்தின் நிர்வாக வசதிக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. அந்த ஜி.பி.எஸ். வசதியைப் பொதுமக்களுக்கு உதவும் ஒன்றாக இந்தச் செயலி மாற்றியிருக்கிறது.

சென்னையில் நகரப்பேருந்துகள் எந்த இடத்தில் இருக்கின்றன, அடுத்து எங்கு வர உள்ளன, எத்தனை மணிக்கு குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சேரும் போன்ற தகவல்களை நமக்கு அளிக்கும் திறனை இந்தச் செயலி கொண்டிருக்கிறது. இதன் காரணமாக நாம் பேருந்துக்காகக் காத்திருக்கும் நேரத்தைத் தவிர்க்க முடியும். நம்முடைய பயணத் திட்டத்தையும் மாற்றியமைத்துக்கொள்ளலாம்.

முக்கியமாக, நீங்கள் சென்னைக்குப் புதிது என்றால், நீங்கள் செல்ல விரும்பும் இடத்துக்கு எந்தப் பேருந்து செல்லும், அதற்கான நிறுத்தம் எங்கே இருக்கிறது போன்ற தகவல்களையும் அது அளிக்கும். சென்னை போன்ற பெருநகரங்கள், புதிதாக வருபவர்களுக்கு ஏற்படுத்தும் மிரட்சியைப் போக்குவதற்கு உதவும் வசதி இது.

மொத்தத்தில் இந்தச் செயலி, பேருந்தை மட்டுமல்லாமல், சென்னையையும் நம் மனத்துக்கு ஏற்புடைய ஒன்றாக மாற்றிவிடுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x